Skip to main content

நிலம் பூத்து மலர்ந்த நாள்




சங்கக் கவிதைகளை மிகச் சமீபத்தில்தான் ஈடுபாட்டுடன் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். ஒரு தமிழ்க் கவிஞனாக, தமிழனாக அந்தக் கவிதைகளின் உள்ளடக்கமும் உயிரும் சாரமும் என் வழியாகவும் கடந்துகொண்டிருப்பதை உணர்கிறேன். அந்நிலையிலிருந்து, சங்க காலக் கவிதைகளில் வரும் நிலத்தை வாழ்வை பிராணிகளை பறவைகளை ஒரு அன்றாட எதார்த்தமாக கிடைமட்டத்தில் ஒரு பாயைப் போல உரைநடை கதையில் விரிக்க முடியாது என்பதே எனது இதுவரையிலான எண்ணமாக இருந்து வந்துள்ளது. மலையாளக் கவிஞர், எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதி, கே. வி. ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலை வாசித்த போது அது ஒரு கற்பிதம் என்று புரிந்தது. வள்ளல் வேள்பாரி, மூவேந்தர்கள் சதியால் கொல்லப்படும் சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு சுவாரசியமான திரில்லர் நாவல் வடிவத்தை மனோஜ் குரூர் தேர்ந்துள்ளார் எனினும் அது நாவலின் மேல் ஓடு மட்டுமே.

ஆயிரம் ஆண்டுகளாக மாறியும் மாறாமலும் இருக்கும் தமிழ் மனநிலப் பரப்பின் வரைகோடுகளை நோக்கி மனோஜ் குரூர் நெருங்கியிருப்பது தான் நாவலின் ஆச்சரியம். பாணர் சிறுமியான சீரை, தங்கியிருக்கும் இடத்திலிருந்து காணாமல் போய் வெள்ளை ஆம்பல்கள் பூத்திருக்கும் குளத்தின் சேற்றில், வெளிப்பட்டும் வெளிப்படாத உருவிலும் நண்டுகள் வரைந்திருக்கும் படங்களைப் பார்ப்பது போன்ற மர்ம உணர்வை நாவல் தருகிறது.

“நண்டுகளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன் அப்பா. அவை வள்ளிக்கொடிகளின் சினைப்பைகளை இறுக்குகின்றன. அவற்றினுள்ளே இருந்த நெல்மணிகளைக் கொத்தியெடுத்து சேறான குளிர்ந்த புற்றுகளுக்குள் கொண்டுபோய் வைப்பதைப் பார்க்கப் பார்க்க ஆசை தீராது. பயம் தோன்றினாலும் கண்களை அசைக்க முடியாது.”

சிறுமி சீரை விவரிக்கும் இந்தக் காட்சியைத்தான் தமிழ்க் காட்சி என்று சொல்கிறேன். இந்தக் காட்சியில் வரும் வள்ளிக்கொடிகள், அதன் சினைப்பைகள், நெல்மணிகள், புற்று, ஆசை, பயம் எல்லாம் அதுமட்டும்தானா? இந்தக் காட்சி வழியாக நம் மனத்தில் தோன்றும் நிலம், ஒளி, இருள், வண்ணங்கள், உணர்வு...

ஆற்றில் செல்லும் மரத்துண்டுகளையொப்ப ஏதோ ஒன்றால் இழுத்துச் செல்லப்படும் உயிர் வாழ்க்கையின் தன்மையைக் கூறும் பாணன் கொழும்பனில் இருபதாம் நூற்றாண்டின் கவிஞன் பிரமிள் தோன்றுகிறார்.
“பறவைகளைப் போலக் காற்றுவெளிகளில் பறப்பதற்கிடையில் இறகுகள் கொண்டு நாம் உயிரினை எழுதிச் செல்கிறோம்" என்று கொழும்பன் சொல்ல அவனது மகள் பின்வரும் கேள்வியைக் கேட்கிறாள்.

“இல்லாமையில் வரும் எழுத்தல்லவா? அதை யாரும் வாசிப்பதில்லையே அப்பா?”

உதிரும் இறகு காற்றில் எழுதிச் செல்லும் காவியத்தை எழுதிச் சென்ற பிரமிளின் வாழ்வுக்கும் பாணர்களின் வாழ்வுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

மனோஜ் குரூரின் இந்த நாவலில் கபிலரும் பரணரும் ஔவையும் கதாபாத்திரங்களாகவே வருகின்றனர். ஔவையார் திரைப்படத்துக்காக புதுமைப்பித்தன் எழுதிய திரைக்கதையில் முதல் காட்சியிலேயே ஔவையார், தான் ஒரு பாழ் மண்டபத்தில் குடியிருப்பதைப் பற்றிச் சொல்லும்போது, பாழிலிருந்துதானே எல்லாம் தோன்றுகிறது என்று பேசுவார். நள்ளிரவில் உறக்கத்தைத் தொந்தரவு செய்யவந்த பேயை விரட்டிக் கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த சோழ மன்னன், ஔவையைத் தெரிந்துகொண்டு தன் அரண்மனைக்குக் கூப்பிடும்போது பேசும் வசனம் இது. புதுமைப்பித்தன் தனது திரைக்கதையின் முதல் காட்சியையே பாழிலிருந்து தான் தொடங்கினாரென்றால் தமிழின் ஊழ் என்னவென்பதை நாம் தெரிந்துதான் இயங்க வேண்டும்.

இன்மையிலிருந்து வந்து இன்மைக்குப் போவதாக இருக்கும்  உயிர்வாழ்க்கையின் தன்மையை கையகப்படுத்தியிருக்கும் படைப்பு இது. தமிழ் ஆழ்மனத்தில் படிந்திருக்கும் ஒரு நிலைமையை மனோஜ் குரூர் நெருங்கியுள்ளார்.

ஐந்திணைகளின் மலர்கள், விலங்குகள், பறவைகள், அகப்பாடல்கள், புறப்பாடல்கள், திருக்குறள் வழியாகவும் பிளினி, தாலமி என்ற பயண எழுத்தாளர்கள் வழியாகவும் தனது நாவலுக்கு வரலாற்று ரீதியான வலுவான பின்னணியைத் தந்திருக்கிறார்.

சித்திரைக்கும் மகீரனுக்கும் இடையிலான காதல் உறவில் அகப்பாடல்கள் அடைந்திருக்கும் சாத்தியங்களைப் பிரதிபலிக்க விட்டுள்ளார் மனோஜ். இயற்கை, கால உணர்வு சார்ந்து மனம் கொள்ளும் நெருக்கமும் அன்னியமும் உரைநடையில் மகத்துவம் கொள்கின்றன. பெரும்பொழுது சிறுபொழுதாக மாறும் இறகுத்தன்மை விவரணையில் கிடைக்கிறது.

“ காத்திருப்பு வீணாகவில்லை. ஒரு விடியலில் மகீரன் வந்தான். புல்மேட்டின் பசுமையின்மீது காற்றின் குறும்பு. காஞ்சி மரங்களில் கிளிகளின் சலசலப்பு. உலகம் முழுதும் உயிரின் விளையாட்டு. வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலிருந்த ஊசலாட்டத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்டது. பலமுறை பெருமூச்சு விட்டேன். மகீரனைக் கட்டியணைத்து அழுதேன்.”

ஔவை, ஒரு கவிதாயினியாக கனிந்த கலைஞராக அலட்சியம் கொண்டால் சினம் கொள்பவளாக அன்பு செலுத்தினால் தன் மதிப்பையே பொம்மை போலக் கீழே எறிந்துவிடும் குழந்தையாக வெளிப்படுகிறாள். அவளை, அந்தத் தமிழ் ஔவையை எனக்குத் தெரியும்.   

‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலைப் படித்து முடிக்கும்போது, நாம் இன்று வாழும் தமிழ் நிலத்துக்குள் ஒரு சங்க காலம் நிலம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணரமுடியும்.   

அழல் என்ற சொல்லின் விதவிதமான நிறபேதங்களை இந்த நாவலில் தான் நான் முதல்முறையாக உணர்ந்தேன். காக்கா முள்ளும் அரளி விதையும்  சீனிக்கல்லும் எப்படி என் அனுபவத்தின் கூர்சாயல்களைக் கொண்டது போல 'அழல்' என்ற வார்த்தை எனது அனுபவத்துக்குள் உருண்டுகொண்டிருக்கும் கூழாங்கல்லைப் போல இனி எப்போதும் இருக்கும். தமிழ் என்ற மனிதனின் தேகத்தைக் கற்பனை செய்தால் அதைக் கீறும்போது வரும் ரத்தத்தில் அழல் என்ற அம்சம் இருக்கும் என்று தோன்றுகிறது. நெருப்பு, தீக்கொழுந்து, வெப்பம், எரிவு, கோபம், நரகம், நஞ்சு, கொடுவேலி, கள்ளி, எருக்கு என்று எத்தனையோ அர்த்தங்களைக் கொடுக்கும் வார்த்தை அழல். ஆனால், அழல் என்பதற்கு ஒப்பானதாக இல்லை. பற்றி அரித்து எரிகிறது அழல் என்ற வார்த்தைதான்.  இந்த நாவல் வழியாகப் பெற்ற முதன்மையான பரிசு இந்த வார்த்தைதான்.

இந்த நாவல் ஏன் மலையாள தூரத்திலிருந்து எழுதப்பட வேண்டுமென்ற கேள்வி எனக்கு எழுந்தது. இதை எழுதுவதற்கு அந்த இடைவெளி தேவை என்று தோன்றுகிறது. சித்தார்த்தனை எழுதுவதற்கு ஹெர்மன் ஹெஸ்சேக்கு அந்தத் தூரம்தான் உதவியிருக்கிறது.   

Comments