Skip to main content

அம்மாவின் சிட்ரிசின் மேகங்கள்




அம்மாவின்

பொறுமை சகிப்புத்தன்மை எதையும்

கொடையாக நான் பெறவில்லை

அவளது நுரையீரல் தொடங்கி

பலவீனமானதெல்லாம் எதுவோ

அதையே அவளின் பிள்ளையாக

நான் பெற்றிருக்கிறேன்

நினைவு பயின்ற நாள்முதலாய்

மருந்துகளுடனயே வாழ்ந்துவருபவள்

என்றாலும்

இந்த வயதிலும்

உளநலத்துக்கான

மாத்திரைகளை உட்கொள்ளவில்லை அவள்

தாதியாகப் பணியாற்றியதால்

அலோபதி மாத்திரைகளும் மருந்துகளும்

ஊசிகளும் ஆஸ்பத்திரியின் வாசனையும்

ஆதியிலேயே என் உடலுக்குப் பரிச்சயம்

மழைக்காலங்களிலும்

வியர்வை பெருகும் வேனல் நாட்களிலும்

மூச்சுவிடத் திணறி

என் நுரையீரல் அரற்றும்போதெல்லாம்

டெரிபிளினையும் டெக்கட்ரானையும் கலந்து

ஊசியாய் ஏற்றுவாள்

அப்போது குளிர்மேகங்கள்

மார்பில் இறுக்கத்தைத் தளர்த்தி

வேர்வையைப் பூக்கவைத்து உறங்கவைக்கும்

கூடவே பெயர் சொல்லி

சிட்ரிசின் மாத்திரையையும் தருவாள் அம்மா.

அவள் தந்த மாத்திரைகளையெல்லாம் விஞ்சி விழுங்கும்

மாத்திரைகளுக்கும்

அவளுக்கே புரியாத நோய்க்குறிகளுக்கும்

அனுபவம் கொண்டுவிட்டது

தற்போதைய எனது உடம்பு.

ஆனாலும் பொடியனின் உடலைக் கொண்ட

அந்த சிட்ரிசின் மாத்திரையில்

அம்மாவும்

அம்மாவுடன் நுரையீரலுக்குள் இறங்கும் குளிர்மேகங்களும்

நோய் நீங்கித் தளரும்

உறக்கமும் குடிகொண்டிருக்கின்றன.


(இந்தக் கவிதையைக் கிளர்த்திய கவிஞர் இசைக்கு)





Comments