Skip to main content

கற்பகமே உன்னை அன்றி துணை யாரம்மா


கழிப்பறை ஜன்னல் கண்ணாடியில்

ஆடும் எலுமிச்சை இலைகளின் நிழல்கள்

தம் வெவ்வேறு சாயல்களை

எனக்குக் காண்பித்து விடுகின்றன

உறக்கமின்மை 

என்னுள் செலுத்தும் நரகங்களை

இறுதிச் சாமத்தின் முடிவில்

சிறுநீராய்ப் பிரித்து

எல்லா வலிகளோடும் சேர்த்துக் கொஞ்சம்

இறக்குகிறேன்

வெளியே ஆடும் இலைகள்தான்

காற்றில் கலந்திருக்கும் மீயொலிகளை 

என்னிடம் பெயர்க்கின்றன போல

குழந்தையின் 

அழுகுரல்

நாகஸ்வரம் ஒருசேரக்

கேட்கத் தொடங்குகின்றன

கற்பகமே உனையன்றி

துணை யாரம்மா 

நீயே கதி எனப்போற்றும் 

என்னைக் கண்பாரம்மா

நினைவில் எழுந்த பாடலின் மடியில்

உறங்கத் தொடங்குகிறேன்

இன்னும் எந்த ஒலியும் 

இறங்காத பூமியில்

அம்மா 

அம்மா

அம்மா.   

Comments