Skip to main content

அழியும் செய்திகளுக்கு நடுவே


இயற்கைப் பேரிடர்கள், யுத்தங்கள், பஞ்சங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள், உலகை உலுக்கும் பெரிய மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைச்  செய்தியாக அனைத்து மக்களிடமும் தெரிவிப்பதற்கு இந்த நூற்றாண்டிலும் புகைப்படங்களே சக்திவாய்ந்த ஊடகங்களாகத் திகழ்கின்றன. உணர்ச்சிகரமான மொழியில், நூற்றுக்கணக்கான வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாததை புகைப்படம் வெளிப்படுத்தி விடும். வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக ஒவ்வொரு மனிதரும் ஊடகமாகி உண்மையும் பொய்யுமாக கொத்துக்கொத்தாகச் செய்திகளே செய்திகளை அழித்துக் கொண்டிருக்கும் post truth சூழலில் நாம் வாழ்கிறோம். இந்தப் பின்னணியில், ஒரு நிகழ்வையோ ஒரு தருணத்தையோ அருகில் போய் பார்த்துச் சித்தரிக்கும் புகைப்படம் உண்மைக்குச் சற்று பக்கத்தில் போய் நெருங்கும் சாத்தியமுள்ளதாகத் தெரிகிறது. அதி ஊடகச் சூழல் என்று சொல்லப்படும் காலத்தில் அன்றாடம் அழிந்து மறதிக்குள் புதைந்து கொண்டிருக்கும் செய்திகளுக்கிடையே சில நிகழ்வுகளையும் சில தருணங்களையும் ஆவணமாகவும் வரலாறாகவும் ஆக்கும் திறனுள்ளவை புகைப்படங்கள். ஆப்கானிஸ்தான் படையினருக்கும் தாலிபான் தீவிரவாதிகளுக்கும் நடைபெற்ற யுத்தத்தைப் படம்பிடிக்கச் சென்று களத்திலேயே பலியான  புலிட்ஷர் விருதுபெற்ற புகைப்படச் செய்தியாளர் டேனிஷ் சித்திக்கின் புகைப்படங்கள் சமீபத்தில் இந்தியாவை உலுக்கிய எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு வரலாற்று சாட்சியாக இருந்தவை. ரோகிங்கியா அகதிகள் நெருக்கடி, ஹாங்க் காங்க் மக்கள் போராட்டங்கள், நேபாள நிலநடுக்கம், அமெரிக்க அதிபர் வருகையின் போது டில்லியில் நடந்த கலவரம் என தினசரி செய்திப் பத்திரிகைகளில் நம் கண்ணையும் கருத்தையும் ஈர்த்த, தொந்தரவு செய்த முக்கியமான புகைப்படங்களை எடுத்தவர் டேனிஷ் சித்திக். 

1983-ம் ஆண்டில் பிறந்த டேனிஷ் இளமையும் ஆற்றலும் உச்சமாகத் திகழும் பருவத்தில் 38 வயதில் இறந்திருக்கிறார். அமெரிக்காவில் செப்டம்பர் 11-ல் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒட்டுமொத்தமாக மாறிய உலகத்துக்குள் நுழைந்த ஒரு தலைமுறை இளைஞர்களின் பிரதிநிதி அவர். ஜனநாயக ரீதியான கருத்துப் பரிமாற்றங்கள், போராட்டங்கள் தீவிரமாக ஒடுக்கப்படத் தொடங்கிய அதேவேளையில் மத ரீதியான, இன ரீதியான அடையாளங்கள் கூர்மையடைந்து பரஸ்பரம் மோதிக் கொண்ட முக்கியமான நிகழ்வுகளுக்கு அவர் எடுத்த புகைப்படங்கள் சாட்சியாக இருக்கின்றன.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் சார்ந்து பரபரப்பான செய்திப் புகைப்படங்களை எடுத்துத் தள்ள வேண்டிய பரபரப்பிலும் செய்திக்குப் பின்னாலிருக்கும் மனித அம்சத்துக்கு கவனம் அளித்தவர் டேனிஷ் சித்திக். ரோஹிங்கியா அகதிகள் சந்தித்த கொடூரங்கள், சென்ற ஆண்டு தலைநகர் டெல்லியில் நடந்த கலவரச் சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் இடர்கள், கரோனா இரண்டாம் அலையில் எடுத்த புகைப்படங்கள் மிகவும் நினைவுகூரத்தக்கவை. ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் எடுத்த புகைப்படங்கள் தான் அவருக்கு புலிட்ஷர் விருதைப் பெற்றுத்தந்தது.

2010-ம் ஆண்டில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் இணைந்த டேனிஷ் சித்திக் ஒளிப்படங்களோடு செய்திக் கட்டுரைகளையும் எழுதியவர்; சினிமா ஊடகத்திலும் ஆர்வம் கொண்டவர். மேற்கு ஆசியா, ஐரோப்பா எனப் பயணித்து முக்கியமான நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்தியவர். ஈராக் யுத்தத்தையும் ஹாங்காங்கில் நடந்த மக்கள் போராட்டங்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு என்ற பெயரில் இந்துமத வெறியர்கள் சென்ற ஆண்டு துவக்கத்தில் தலைநகர் டெல்லியில் நடத்திய கலவரத்தில், சாலையில் மண்டியிட்டு குனிந்திருக்கும் இஸ்லாமியரை ஒரு கும்பல் சேர்ந்து தாக்கும் புகைப்படம்தான் சர்வதேச கவனத்தைத் திருப்பியது. இந்த ஒளிப்படத்தை எடுத்தவர் டேனிஷ்தான். ஒருகட்டத்தில் டேனிஷ் மீது சந்தேகப்பட்டு அவரது அடையாள அட்டையைக் கேட்டு அந்தக் கும்பல் மிரட்ட அவர் உயிர் தப்புவதற்காக ஓடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாம் பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கியோடு புகுந்து அச்சுறுத்திய இளைஞரைப் புகைப்படமாக்கியவரும் இவர்தான். மிக அபாயகரமான நெருக்கத்தில் இருந்து எடுத்த புகைப்படம் அது. எத்தகைய நெருக்கடியான தருணத்திலும் மனிதர்களின் வாழ்க்கையை நெறிபிறழாத வகையில் வெளிப்படுத்துவதிலும் உறுதியாக இருந்தவர் டேனிஷ் சித்திக். இதுபோன்ற புகைப்படங்களுக்காக அவரின் இஸ்லாமிய அடையாளம் காரணமாக, வலதுசாரிகளின் மிரட்டலுக்கும் அவமதிப்புக்கும் இணையம் வழியாக உள்ளானவர் டேனிஷ். 


கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை, சுனாமி போல சாதி, மதம், வர்க்க பேதமின்றி மரண அடியாக அடித்துத் தாக்கிய அவலத்தை புகைப்படங்கள் தான் உலகம் முழுக்க எடுத்துச் சென்றன. வடமாநிலங்களின் சுடுகாடுகளில் இடமின்றி, இரவு பகலாக சடலங்கள் எரிக்கப்பட்டதை நமது கண்கள் முன்னால் கடந்து நீங்கிய ஒரு வரலாற்றை, புகைப்படங்கள் வழியாக அழியாச் சித்திரங்களாக மாற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் டேனிஷ் சித்திக்.

இந்தியாவிலும் உலகெங்கும் இனவாதமும் வகுப்புவாதமும் வன்முறைகளும் அதிகரித்த ஒரு காலகட்டத்தின் ஓர்மையோடு தனது புகைப்படங்களை எடுத்திருக்கிறார். ரோஹிங்கியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக சந்தித்த அவலத்தைப் பார்த்திருக்கிறார். ஈராக்கில் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் சூழலில் சந்தித்த யுத்தத்தையும் படமெடுத்திருக்கிறார். டேனிஷை பலிகொண்ட ஆப்கானிஸ்தானும் அதுபோன்ற சூழலில் உள்ள நாடே. இரண்டு சூழல்களுமே அவருக்கு அபாயத்தையும் அச்சுறுத்தலையும் தான் பரிசாக அளித்திருந்திருக்கிறது. டேனிஷ் சித்திக் அடைந்திருக்கும் மரணத்துக்கும் அவரது அடையாளத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

வெறுப்பும், கும்பல்வாதமும் மோதல்களும் நடக்கும் இடங்களை நோக்கி அவர் தொடர்ந்து அச்சமின்றி பயணித்துக் கொண்டிருந்தவர் அவர். அச்சுறுத்தப்படும், வன்முறைக்குள்ளாகும் பலவீனர்களுடன் அவரது ஒளிப்படக் கருவி அடையாளம் கொண்ட தடையங்கள் அவரது புகைப்படங்களாக இருக்கின்றன. ஒரு பொறுப்பு மிக்க கலைஞராக, மனிதராக, வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு மேம்பட்ட தளத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அகாலத்தில் அவர் மரித்திருக்கிறார். 

Comments