மூன்றாம் சாமத்தின் முடிவு
எதுவுமே தெரியாத
எதுவுமே பிறக்காத
இருட்டினுள்
திருப்பதிக்கு
அழைத்துச் சென்றாள்
அம்மா
பெருமாளைப் பார்ப்பதற்கு முன்னால்
மலையில் சுற்றும்
புலிகளைக் கடக்க வேண்டுமென்றாள்.
புலி வாயில் சிக்கினாலும்
பெருமாளின் திருவடியைப் பார்த்தமாதிரிதான்
அவள் உண்டாக்கிய இன்னொரு இருட்டில்
கேலியா?
சரணாகதியா?
எனக்குத் தெரியவில்லை.
தென்மூலையில் பிறந்த
அம்மாவுக்கு
திருப்பதி என்பது
சிறுவயதில் கனவாகவும்
கதையாகவுமே இருந்திருக்கும்.
பெருமாளே மகாலட்சுமியைத் தேடி
இங்கே வந்தவன்தானே.
காலம்காலமாக
கூட்டம் கூட்டமாக
ஜனங்களும்
அந்த லட்சுமியைத்தான் தேடி
வந்துகொண்டே இருப்பதாய்
திருப்பதியின் திசையைக் காட்டிச்
சொன்னாள் அம்மா.
ஆட்டோவின் மங்கலான
முன்விளக்கொளியில்
வாழைத் தோப்புகள்
கடப்பதைப் பார்த்தோம்
சில்லிடும் ஐப்பசிக் குளிரில்
அம்மாவின் உடலோடு
நெடுங்காலத்துக்குப் பிறகு
கதகதப்புக்காக கட்டிக்கொண்டேன்
‘மணி, இந்த இருட்டுதான் அம்மா’
அசரீரியா
என் மனக்கோலமா
தெரியவில்லை
அவள் முகத்தையே பார்க்க முடியவில்லை.
நடுவில் ஆட்டோ திடுக்கிட்டு நின்றது
முன் பைதாவுக்கு
சற்று முன்னர்
வெள்ளை வேட்டி கட்டிய
தடித்த சிவப்பு தேகம்
வெற்று மார்புடன் தார்சாலையில்
குறுக்கே கிடந்தது
எனக்கு சாலையின் குளிர்
முதுகில் சில்லிட்டது
பயணத்தைத் தள்ளிப்போட வேண்டாம்
பாதையை மாற்றி
திருப்பதியை நோக்கிப்
போய்க்கொண்டேயிரு
ஓட்டுனருக்கு உத்தரவிட்டாள்
அம்மா.
உள்ளே அச்சம் குறைந்ததும்
பாம்பணை இல்லாவிட்டாலும்
படுத்திருப்பவன்
எல்லாம் பெருமாளென்று
நினைத்தால்
நாம் திருப்பதிக்குப் போகமுடியுமா?
எங்களுக்குச் சிரிப்பை மூட்டினாள் அம்மா.
நான்காம் சாமத்தில்
தூரத்தில் கிழக்கு சிவக்கத் தொடங்க
எங்களுக்கு
அவள் முகம் தெரியத் தொடங்கியது.
நாங்கள் போனது திருப்பதியா
திருச்செந்தூரா தெரியவில்லை
ஞாபகம் இல்லை.
Comments