அம்மா நாணா சூப்பர் மார்க்கெட்டில்
அலாஸ்காவைச் சேர்ந்த
பதப்படுத்தப்பட்ட டூனா மீன் டப்பாக்களை
பார்வையிட்டுக் கொண்டிருந்தார்
ஸ்ரீதேவி.
பாலாடைக்கட்டி வாங்குவதற்காகப்
எப்போதாவது போகும் நான்
அங்கே
தற்செயலாய்
என் பிரிய தேவதையைப்
பார்த்து
வணக்கம் வைத்தேன்.
இறந்தபிறகு யாருக்கும்
நான் அடையாளம் ஆவதில்லை.
அதனால் பெரிதாகத் தொந்தரவும் இல்லை.
நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள்?
என்றார்.
இறந்தவர்களோடு உலவக்கூடியவன்
என்று என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
எதிரேயுள்ள அடையார் கேட் விடுதியில்
தங்க நேரும்போதெல்லாம்
இங்கே கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும்
வருவேன்.
தற்போது அதையும்
இடித்துவிட்டார்கள்
மும்பையில் குடியிருக்கச் சென்றபோது
நான் நீங்கிய சென்னை
முழுமையாக மாறிவிட்டது.
பெருமூச்செறிந்தார் ஸ்ரீ தேவி.
இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தில் நடித்தது தவிர
ரசிகனாக எனக்கு உங்கள் மேல் சிறுபுகார் கூட இல்லை
என்றேன்.
ஒடுங்கிய முகம், உடலுடன்
ஒரு யுவதியின் அம்மாவாக
நடித்ததில்
ராம் கோபால் வர்மாவுக்கும்
சங்கடமே!
என்ன செய்வது?
என்று அலமாரியைப் பார்த்தபடி சிரித்தார்.
மூன்றாம் பிறை படத்தில்
நீங்கள் வளர்த்த சுப்பிரமணி ஞாபகத்தில்தான்
எனது ப்ரௌனியை வளர்ப்பதாகச் சொன்னேன்.
சுடரும் பளிங்குக் கண்களில் ஆழம் கூடியது.
தண்ணீர் தொட்டியில் மூழ்கிய தருணத்தில்
வலி இருந்ததாவென்று கேட்டேன்.
சொல்லத் தெரியவில்லை
தெரிந்திருந்தால்
மீண்டும் பிறந்திருப்பேனே
என்று கையில் கூடையுடன் திரும்பி
விரைவாக மறைந்தார்.
அம்மா நாணா கடையில் நான் பார்த்த
ஸ்ரீ தேவி.
(நன்றி : அகழ் இணைய இதழ்)
Comments