பல ஆண்டுகளாக நான் எனது அம்மாவுக்கு மூன்று உறுதிமொழிகளைத் தொடர்ந்து கொடுத்துவந்திருக்கிறேன்: அவளை நான் க்ரகோவ் நகரத்துக்கு வரவழைத்து ஷாக்கபனாவுக்கும் மலைப்பகுதிகளுக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் அழைத்துச் செல்வேன் என்று. ஆனால் அம்மாவுக்கு க்ரக்கோவைப் பார்க்கும் சந்தர்ப்பமே வரவில்லை. க்ரக்கோ மட்டுமில்லாமல் மலைகளையும் கடலையும் அவள் பார்க்கவேயில்லை. நான் எனது வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை. அம்மாவின் மரணம் நிகழ்ந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. க்ரகோவுக்கு அழைத்துவந்து சுகியன்னிஸ், புனித மேரியின் தேவாலயம், வாவல் கோட்டை, விஸ்துலா எதையும் நான் ஏன் அவளுக்குக் காட்டவேயில்லை. ஆமாம். அவளது மகன் க்ரகோவில் வாழ்ந்துவந்தான்…’நம்பிக்கையளிக்கும்’ இளம் கவிஞனாக…அவனது அம்மாவைப் பற்றி நிறைய கவிதைகளை எழுதியவன்… எல்லா அம்மாக்களைப் பற்றியும் இன்னும் நிறைய கவிதைகளை எழுதியவன்…1947-ம் ஆண்டிலோ 1949-ம் ஆண்டிலோ அவன் தனது அம்மாவை க்ரகோவுக்கு அழைத்து வரவேயில்லை. அவள் என்னிடம் வலியுறுத்தியதே இல்லை. அதுகுறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதும் இல்லை. அம்மா வார்சாவைப் பார்த்ததேயில்லை. அம்மா விமானத்தில் ...