Skip to main content

Posts

Showing posts from August, 2025

திங்கள்கிழமை

புகைப்படம் - ஏ.வி.மணிகண்டன் இன்று திங்கள்கிழமை  போகத் தேவையில்லாத அலுவலகம் விடுவிக்கத் தேவையில்லாத படகு.

பிருத்விராஜனும் நான்ஸியும்

குதிரையில் வரமாட்டான் பிருத்விராஜன் பைக்கில்  வந்துகொண்டிருப்பவனுக்காக ஒயிலாய் திரும்பி வளையும் குட்டி நிழல்சாலையின்  முனையில் பூவரச மரத்துக்குக் கீழே பேரமைதியின் எழில் சுமந்து தோள்பையுடன் வாலின் மேல் அமர்ந்து  காத்திருக்கிறாள் நான்ஸி. 

நீல குண்டு பல்பு

பல்துலக்கிகள் தொப்பிகள் குப்பிகளை எல்லாம் பாதுகாத்த மூடிகள் பந்துகள் இறந்தவர் இருப்பவர் பிரிந்தவர் சேர்ந்து வாழ்பவர் தகவல் ஏதும் சொல்லாத  புகைப்படச் சட்டகங்கள் பயன் எல்லாம் முடிந்து ஓய்ந்த  ஆசுவாசம்  அமைதி விச்ராந்தி. இவற்றோடு சேர்ந்து இன்னும் பளபளப்பான கண்ணுடன் உடைந்த பாலத்தின் கழிமுகத்துக்கு வந்து சேர்ந்து மணலில் ஒரு நீல குண்டு பல்ப் அரசனைப் போல வீற்றிருக்கிறது . தொங்கட்டான்களின்  ஒளிச்சிணுங்கல்கள் முனகல்களாய் கீறும் சண்டைகள் கண்ணீர் சுடரும் வெதும்பல்கள் ஆறுதல்கள் மரணத்தை பார்த்திருப்பாய் நீல குண்டு பல்பே. நள்ளிரவில் விழித்து விடாமல் அழுதுகொண்டிருக்கும்  குழந்தையை அரைத்தூக்கத்திலேயே நின்றபடி தொட்டிலில் ஆட்டிய இளம்தாயை நீ மட்டும்தான் விழித்தபடி பார்த்தபடியிருந்தாய் நீல குண்டு பல்பே. 

உள்தெப்பக்குளம் – மேலும் சில காட்சிகள்

யாரோ எறிந்த போதை ஊசி ரத்தக்கறையுடன். ஏதோ ஒரு அவசத்தில் வீசப்பட்ட மல்லிகைச்சரம் தூணோரம். ஆதிப்பச்சையில் வெறித்து நோக்கும் தண்ணீர் நடமாட்டம் இல்லாமல் போய் வெளுத்துக் கிடக்கும் உள்தெப்பக்குளத்தின் கல்படிகள் எந்த ஆடி உற்சவத்திலோ பயன்படுத்திய தேர்வடக் கயிறு பாம்பணையாய் சுருண்டு நைந்துவரும் குளத்தடி இருள்மூலை. உச்சிகால வேளையில் நெல்லையப்பருக்கு அன்னம் உபசரிப்பதற்காக காந்திமதி மேளதாளத்துடன் செல்லும் சந்தடி நெருங்கித் தேய்கிறது. 000 ஊஞ்சல் மண்டபமிருக்கும் நந்தவனத்தில் வான்கோவின் வாதுமை அரும்புகளைப் போல யாரும் பார்க்காமலேயே மஞ்சள் அரளிகள் அரும்பி மொட்டுவிட்டு பூத்து மழையில் நனைந்து உதிர்ந்து மடிகின்றன. 000 உள்தெப்பக்குளத்தின் பச்சைப் பரப்பைப் பார்த்து தளிர்த்ததோ வாழை மரங்களின் இலைகள். வாழை இலைகளின் பசும்பச்சை பார்த்து அரும்பியதோ நந்தவனத்துக் கிளிகளின் இறகுகள். 000 அம்மா மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் ஊஞ்சல் மண்டபம் சங்கிலி மண்டபம் மகா மண்டபம் நீராழி மண்டபம் வசந்த மண்டபம் 000 வெளிநடை சாத்தும் சத்தம் மண்டபத்தை வந்து அறைகிறது. யுகச்சடவிலிருந்து ஒருகணம் விழித்தெழும் சர்ப்ப யாழி. காலம் சுருண்ட இருட்டுக்...

சங்க கால மரங்கள்

வெள்ளை நிறத்தில் கொத்துக் கொத்தாய் பூ பூத்தது மரா. இறால்களின் தோற்றத்தில் காய்களை விட்டது உகா. (நன்றி: அகழ் இணைய இதழ்)

தக்காளிகள்

தக்காளிகள் தப்பி தரையில் உருள்கின்றன. தக்காளிகள் நழுவி விழுந்துவிடுவது இயல்பாக நடக்கிறது. தக்காளிகள் கைநழுவிப் போய்விடுகின்றன. தக்காளிகள் உருண்டு உருண்டு கண்மறைவாகப் போய்க் கொண்டிருக்கின்றன. நழுவித் தொலைந்துவிடாமல் தக்காளியைப் பிடிக்க தக்காளிக்கு முன்னால் நான் விழுந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. தக்காளிக்கு தான் விழக்கூடாதென்ற பொறுப்பும் கிடையாது. தக்காளி நீ உடைந்துவிடக் கூடாது. தக்காளி நீ நொறுங்கிவிடக் கூடாது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

உள்தெப்பக்குளம்

சிறுமிக்கும் குமரிக்கும் இடையிலுள்ள இருட்டில் கண்பதித்திருக்கிறாள் சிற்றுடல் கொண்ட காந்திமதி. அவள் சன்னிதிக்குப் பக்கவாட்டில் வசந்த மண்டபத்தில் ஆளரவமற்ற மத்தியானத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஓர் ஊஞ்சல். கூலக்கடை பஜார் சந்தடியையும் உறிஞ்சிவிடக்கூடிய மதில் சுவருக்கு அப்பால் நிழல் எதையும் பிரதிபலிக்காது அடர்பாசியால் மூடி விலக்கவே இயலாத பச்சைத் தனிமையில் உள்தெப்பக்குளம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அந்தர் தியானம். (நன்றி: அகழ் இணையத்தளம்)

அண்மைக் காட்சி சேய்மைக் காட்சி

  முதல்முறையாக அம்மா அப்பாவுடன் உணவுகத்துக்கு புரோட்டா சாப்பிட வந்த குழந்தை வறுத்த நாட்டுக்கோழிக் கறியை மட்டும் தேர்ந்து புரோட்டாவை அம்மாவின் இலைக்கு வீசி எறிகிறது. இது ஒரு அண்மைக் காட்சி. காஸாவின் அகதிமுகாம்களில் உணவில்லாமல் மண்தின்று இறந்துபோகும் குழந்தைகள், அவர்கள் இறந்ததை ஏற்கமுடியாமல் மார்பில் அடித்து அழும் தாய்மார்கள் என் அலைபேசித் திரையில் தினசரி திரள்கின்றனர். இது ஒரு சேய்மைக் காட்சி. கைவிடப்பட்டோம் என்று முகங்களாலேயே சொல்லும் எத்தனையோ பிராணிகளைக் கடந்துவந்துதான் எனது வளர்ப்புயிர் பிரௌனியுடன் தற்காலிக நிறைவு என்னும் குமிழை தினசரி உருவகித்துக்கொண்டு உறங்கச் செல்கிறேன். இங்கே எல்லோரையும் காப்பாற்றமுடியாமல் போனதால் தான் நாம் யாரையாவது காப்பாற்றிக்கொண்டிருக்கிறோமா? (நன்றி: அகழ் இணைய இதழ்)

மெய்ஞான சபை

உயிர் சந்தடியே இல்லாமல் போன அடையாறு பிரம்மஞான சபை வளாகத்தின் காட்டிலிருந்து கடைசி வண்ணத்துப்பூச்சிக் கூட்டம் பின்தொடர ஜே. கிருஷ்ணமூர்த்தி வெளியேறி பல தசாப்தங்கள் சென்றுவிட்டன. பிரம்ம ஞான சபையின் எல்லையை கட்டியம் கூறிநிற்கும் பனைமரங்கள் கல் மரங்களாக கடலைப் பார்த்து நிச்சலனமாய் வெறித்து நிற்கும் சோகத் தோற்றம். சகோதரன் நித்யாவின் மரணத்துக்குப் பிறகு புத்தகங்கள் அனைத்தும் ஒருகணம் சடலங்களாக சிறுவன் கிருஷ்ணமூர்த்திக்கு தோற்றம் கொடுத்த மறைஞான நூலகத்தின் படிக்கட்டுகள் இப்போது உடைந்து தூர்ந்துவிட்டன. அன்னிபெசண்ட் அம்மையாரே எப்படித் தொலைத்தீர்கள் கிருஷ்ணமூர்த்தியை? அன்னிபெசண்ட் அம்மையாரே ஏன் பிரம்மஞான சபையிலிருந்து கிருஷ்ணமூர்த்தியோடு வெளியேறின வண்ணத்துப்பூச்சிகள்? (நன்றி: அகழ் இணைய இதழ்)

உள்தெப்பக்குளம்

சிறுமிக்கும் குமரிக்கும் இடையிலுள்ள இருட்டில் கண்பதித்திருக்கிறாள் சிற்றுடல் கொண்ட காந்திமதி. அவள் சன்னிதிக்குப் பக்கவாட்டில் வசந்த மண்டபத்தில் ஆளரவமற்ற மத்தியானத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஓர் ஊஞ்சல். கூலக்கடை பஜார் சந்தடியையும் உறிஞ்சிவிடக்கூடிய மதில் சுவருக்கு அப்பால் நிழல் எதையும் பிரதிபலிக்காது அடர்பாசியால் மூடி விலக்கவே இயலாத பச்சைத் தனிமையில் உள்தெப்பக்குளம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அந்தர் தியானம். (நன்றி : அகழ் இணையத்தளம்)