யாரோ
எறிந்த போதை ஊசி
ரத்தக்கறையுடன்.
ஏதோ ஒரு அவசத்தில்
வீசப்பட்ட
மல்லிகைச்சரம்
தூணோரம்.
ஆதிப்பச்சையில்
வெறித்து நோக்கும் தண்ணீர்
நடமாட்டம் இல்லாமல் போய்
வெளுத்துக் கிடக்கும்
உள்தெப்பக்குளத்தின்
கல்படிகள்
எந்த ஆடி உற்சவத்திலோ
பயன்படுத்திய தேர்வடக் கயிறு
பாம்பணையாய்
சுருண்டு நைந்துவரும்
குளத்தடி இருள்மூலை.
உச்சிகால வேளையில்
நெல்லையப்பருக்கு அன்னம் உபசரிப்பதற்காக
காந்திமதி
மேளதாளத்துடன்
செல்லும் சந்தடி
நெருங்கித் தேய்கிறது.
000
ஊஞ்சல் மண்டபமிருக்கும் நந்தவனத்தில்
வான்கோவின் வாதுமை அரும்புகளைப்
போல
யாரும் பார்க்காமலேயே
மஞ்சள் அரளிகள்
அரும்பி
மொட்டுவிட்டு
பூத்து
மழையில் நனைந்து
உதிர்ந்து மடிகின்றன.
000
உள்தெப்பக்குளத்தின்
பச்சைப் பரப்பைப் பார்த்து
தளிர்த்ததோ
வாழை மரங்களின்
இலைகள்.
வாழை இலைகளின்
பசும்பச்சை
பார்த்து
அரும்பியதோ
நந்தவனத்துக் கிளிகளின்
இறகுகள்.
000
அம்மா மண்டபம்
ஆயிரங்கால் மண்டபம்
ஊஞ்சல் மண்டபம்
சங்கிலி மண்டபம்
மகா மண்டபம்
நீராழி மண்டபம்
வசந்த மண்டபம்
000
வெளிநடை சாத்தும் சத்தம்
மண்டபத்தை
வந்து அறைகிறது.
யுகச்சடவிலிருந்து
ஒருகணம் விழித்தெழும்
சர்ப்ப யாழி.
காலம் சுருண்ட
இருட்டுக்குள் புகவியலாது
சோரும்
இன்னொரு
மத்தியானம்.
000
சங்கிலி மண்டபத்துக்குள்
ஒரு ரீங்காரம்.
பஜாரில்
ஒரு ரீங்காரம்.
இரண்டுக்கும் நடுவே
சரித்திரத்தின்
கார்வை.
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments