சிறுமிக்கும் குமரிக்கும்
இடையிலுள்ள இருட்டில்
கண்பதித்திருக்கிறாள்
சிற்றுடல் கொண்ட காந்திமதி.
அவள் சன்னிதிக்குப் பக்கவாட்டில்
வசந்த மண்டபத்தில்
ஆளரவமற்ற
மத்தியானத்தில்
ஆடிக்கொண்டிருக்கும்
ஓர் ஊஞ்சல்.
கூலக்கடை பஜார்
சந்தடியையும் உறிஞ்சிவிடக்கூடிய
மதில் சுவருக்கு அப்பால்
நிழல் எதையும் பிரதிபலிக்காது
அடர்பாசியால் மூடி
விலக்கவே இயலாத
பச்சைத் தனிமையில்
உள்தெப்பக்குளம்
நிகழ்த்திக் கொண்டிருக்கும்
அந்தர் தியானம்.
(நன்றி : அகழ் இணையத்தளம்)
Comments