அது டெக்சாசில் நடந்ததாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் இன்னொரு மாநிலத்தில் நடந்த சம்பவம் அது. அந்தச் சம்பவத்தில் ஒரேயொரு முதன்மைப் பாத்திரம்தான் (ஒவ்வொரு கதையிலும், ஆயிரக்கணக்கான முதன்மைப் பாத்திரங்கள், தெரிந்தும் தெரியாமலும் உயிருடனும் இறந்தும் இருக்கத்தான் செய்கிறார்கள்). அந்த மனிதனின் பெயர், ஃப்ரெட் முர்டாக் என்று கருதுகிறேன். அவன் அமெரிக்கர்களைப் போலவே உயரமானவன்; அவனது முடி பொன்னிறமும் அல்ல, கருப்பும் அல்ல, அவனது தோற்றம் கூர்மையானது, அவன் மிகவும் குறைவாகவே பேசினான். குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த அம்சமும் அவனிடம் இல்லை. இளைஞர்கள் வெளிப்படுத்தும் பாவனையான ஒரு தனித்தன்மைகூட அவனிடம் இல்லை. இயல்பாகவே அவன் மரியாதையுடையவனாக இருந்தான். அத்துடன் அவன் புத்தகங்களையோ அவற்றை எழுதிய ஆண்கள் மற்றும் பெண்கள் மீதோ அவநம்பிக்கை கொண்டவனாக இல்லாமல் இருந்தான். இன்னமும் தான் யார் என்பதை அறியாத வயதில் அவன் இருந்தான். எனவே, தன் வழியில் என்ன வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றனவோ அதற்குள் தன்னைச் செலுத்திக்கொள்வதற்குத் தயாராக இருந்தான் - பாரசீக மறைஞானம் அல்லது ஹங்கேரியர்களின் அறியவராத பூர்...