இயல்பிலிருந்து அதீதம்; சாதாரணத்திலிருந்து பயங்கரம்; எதார்த்தத்திலிருந்து அற்புதம் எனச் சுருக்கமான மூன்று விவரணைகளில் மராத்திய, ஆங்கில எழுத்தாளர் விலாஸ் சாரங்கின் கதைசொல்லும் குணத்தைச் சுட்டிவிடலாம். மராத்திய புதுக்கவிதைகள் இயக்கத்திலும் பங்குபெற்றவர் விலாஸ் சாரங்க். புத்தரின் சரிதையையொட்டி இவர் எழுதி தமிழிலும் ஏற்கெனவே வெளியாகியுள்ள 'தம்மம் தந்தவன்' நாவலை ஒரு கவிஞனின் சாதகமான அம்சங்களை உட்கொண்ட நாவல் என்று சொல்ல முடியும். 'கூண்டுக்குள் பெண்கள்' சிறுகதைகளில் பெரும்பாலானவை பழைய பம்பாயில் நிகழ்பவை. பம்பாயின் யாசகர்கள், பாலியல் தொழிலாளர்கள், கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாடத்தை, ஆசாபாசங்களை, நிராசைகளை, ஏக்கதாபங்களை சாதாரணம் போலத் தொனிக்கும் மொழியில் ஆனால் வன்மையாகச் சொல்வதில் விலாஸ் சாரங் தமிழ் சிறுகதைக் கலைஞர் அசோகமித்திரனை ஞாபகப்படுத்துபவர். மிக எதார்த்தமாகக் கதையை உழுதுகொண்டிருக்கும் போதே மையத்தில் ஒரு அற்புதத்தை, அதிசயத்தை உருவாக்கிவிடுகிறார். அப்படி விலாஸ் சாரங்க் உருவாக்கும் அதிசயம் அல்லது அற்புதம் ஒரு கவித்துவப் படிமமாக ஆகி, வாசிப்பவருக்கு ஒரு புராணக்கதையை வாசிக்க...