Skip to main content

லூக் - மேரி ஆலிவர்


மலர்களை நேசித்த

ஒரு நாய்

என்னிடம் இருந்தது.

வயல் வழியாக பரபரப்பாக

ஓடும்போதும்

தேன்குழல் பூ

அல்லது ரோஜாவுக்காக

நின்றுவிடுவாள்

அவளின் கருத்த தலையும்

ஈர மூக்கும்

ஒவ்வொரு மலரின் முகத்தையும்

பட்டிதழ்களோடு ஸ்பரிசிக்கும்.

மலர்களின் நறுமணம்

காற்றில் எழும்வேளையில்

தேனீக்கள்

அவற்றின் உடல்கள்

மகரந்தத் துகள்களால் கனத்து

மிதந்துகொண்டிருக்கும்

போது

அவள் ஒவ்வொரு பூவையும்

அனாயசமாக ஆராதித்தாள்

இந்த பூ அல்லது அந்தப் பூவென்று

கவனமாக

நாம் தேர்ந்தெடுக்கும்

தீவிரகதியில் அல்ல-

நாம் பாராட்டும் அல்லது பாராட்டாத வழியில் அல்ல-

நாம் நேசிக்கும்

அல்லது

நேசிக்காத வழியில் அல்ல—

ஆனால் அந்த வழி

நாம் ஏங்குவது-

பூவுலகில் உள்ள சொர்க்கத்தின் மகிழ்ச்சி அது-

அந்தளவு மூர்க்கமானது

அவ்வளவு விரும்பத்தக்கது. 

Comments