போக்குவரத்து நெருக்கடியும் பரபரப்பும் மிக்க மாநகரமாக சென்னை ஒரு தோற்றத்தில் தெரிகிறது . ஆனால் , பரபரப்புக்கு அருகிலும் அமைதியும் ஆசுவாசமும் கொண்ட நிழலிடங்களும் இங்கே உண்டு . வேளச்சேரியிலிருந்து கடற்கரை நிலையம் வரை செல்லும் ரயில் நிலையப் பாதையும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களும் இதற்கு உதாரணம் . ஐம்பது வருடங்களுக்குப் பின்னரும் வரவிருக்கும் பயணிகளின் எண்ணிக்கையை உத்தேசித்து கட்டப்பட்ட பிரமாண்ட ரயில் நிலையங்களும் அதைச் சுற்றி ஏகாந்தமாக இருக்கும் காலியிடங்களும் குறுக்குவெட்டாகச் சென்னையைப் பறவைக் கோணத்திலிருந்து பார்க்கும் சவுகரியமும் கொண்ட தடம் அது . அப்படித்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பெருங்குடி ரயில் நிலையமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இருந்தன . பெருங்குடி ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் சாலை ஒரு நிலை வரை போடப்பட்டு நடுவில் உள்ள ஏரியால் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. காலை நடைப் பயிற்சியாளர்கள், மாலை நடை செல்லும் வயோதிகர்கள், உடன் வரும் ராஜபாளையம் நாய்கள், அரிதாக வரும் காதலர்கள், கோடைக் காலத்தில் வீல் ஸ்கேட்டிங்...