Skip to main content

சக்தியை வணங்குவதே எண்ணம்






தமிழ் நவீன கவிதையில் அதிக வாசகர்கள் நினைவில் மனப்பாடமாகச் சொல்லக்கூடிய வரிகளை எழுதிய மக்கள் கவிஞர் என்ற வரையறைக்கு அருகில் வரக்கூடிய கவிஞர் விக்ரமாதித்யன்.குறுந்தொகை தொடங்கி தமிழ் மரபிலக்கியத்தில் தேர்ந்த அறிவும் அதன் செழுமையான தாக்கத்தையும் பெற்ற அரிதான தமிழ் கவிஞர்களில் ஒருவர். அவரிடம் இந்து தமிழ் திசைக்காக எடுத்த பேட்டியின் முழுவடிவம் இது...

கவிதையின் இன்றியமையாத அம்சம், தேவை என்னவென்று சொல்லுங்கள்?

கவிதைதான் மொழியின் கொடுமுடி. அதில்தான் உச்சபட்சமும் சாத்தியம். லண்டன் மெட்ரோ ரயிலில் இடம்பெற்ற ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்று தொடங்கும் குறுந்தொகை கவிதை ஏ. கே. ராமானுஜத்தின் மொழிபெயர்ப்பாக, ஒரு உலகப்பொதுவான விஷயத்தை அழகுபடப் பேசுகிறது. அத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அது புதிதாகவும் உள்ளது.

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கிவள்/ உயிர்தவச் சிறிதே காமமோ நனிபெரிதே’ என்று ஈரடிகளில் பெண்ணொருத்தியின் நிலையைக் காண்பிக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, கவிதை தோன்றுவது; தோன்றுவது என்பதனாலேயே உயர்வானது. சங்கத்திலிருந்து தனிப்பாடல் திரட்டு வரை ந. பிச்சமூர்த்தியிலிருந்து சபரிநாதன் வரை கவிதை வரிகளில் தெறிக்கிற உணர்வு தென்படும் அனுபவ உலகம் இவற்றையே எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்.

லக்ஷ்மி மணிவண்ணனின் ‘உற்சாகமற்ற பழைய பியட் கார்’ யவனிகா ஸ்ரீராமின் ‘உலகம் இசக்கியை உழைக்கவே வைக்கிறது’, பிரான்சிஸ் கிருபாவின் ‘பயணத்தில் பிறந்த கடவுள்’ கண்டராதித்தனின் ‘பிழையான விலங்கை ஏற்பதும் மறுப்பதும் சட்டப்படி குற்றமல்ல’, வெயிலின் ‘நுரையீரலின் பாடல்கள்’ மாதிரியான நவீன கவிதைகள் உலகக் கவிதைக்கு இணையானவை.

கவிதையின் ருசி உங்களை எப்போது தீண்டியது?

கவிதையின் ருசியை, முதல்முதலாக, திரைப்படப் பாடல் வரிகள் வாயிலாகவே உணர்ந்தேன். அன்றைய காலகட்டத்தில் திருநெல்வேலி டவுணில் வசதியுள்ள வீடுகள் எல்லாவற்றிலும் ரேடியோ இருக்கும். பெரும்பாலும் காம்பவுண்ட் வீடுகள் அவை. அதனால் அங்கே வசிக்கும் இல்லாதவர்களும் கேட்க முடியும். சத்தமாக வைத்திருப்பார்கள். சிலோன் வானொலியில் கம்பதாசனின் வரிகளான ‘கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே/ நிலாவீசும் வானில் இருள் சூழலாச்சே’, கல்யாண ஊர்வலம் வரும்/ உல்லாசமே தரும்/ மலர்ந்து நான் ஆடிடுவேன்’ போன்றவை தான் முதலில் ஈர்த்தன. கம்பதாசன் என்ற பெயர் பின்னால் தான் தெரியும். ‘திங்கள் உறங்கியபோதும் தென்றல் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமோ’ என்ற மருதகாசியின் பாடல் வரிகளும் அப்போது என்னை ஆட்கொண்டன. உடுமலை நாராயண கவி, கு. மா. பாலசுப்ரமணியம், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ஆகியோரின் பாடல்கள் என் கவிதையின் ஞாபகங்களாக உள்ளன. தேவதாஸ் பாடல்களைத் திரும்பத் திரும்ப விரும்பிக் கேட்டிருக்கிறேன். ‘விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே/ வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடு எங்கள் திராவிடப் பொன்னாடு/ கலைவாழும் தென்னாடு’ என்பது போன்ற கண்ணதாசனின் வரிகளின் வழியாகவே கவிதையின் ருசியை அறிந்துகொண்டேன்.

மிகச் சிறிய வயதிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டீர்கள் இல்லையா?

திருநெல்வேலியில் தொண்டைமான் முடுக்குத் தெருவில் இருந்த நாட்களில் பக்கத்துக் காம்பவுண்டில் உள்ள ரத்னா டாக்கீஸ் ஆப்பரேட்டர் அண்ணாச்சி வீட்டில் குமுதம் வாங்குவார்கள். நறுமண சென்ட் மணக்க வரும். குனேகா என்ற சென்டுக்கு விளம்பரம் அது. ஓவியர் வர்ணம் வரைந்த அட்டைப்படம் இருக்கும். அண்ணாச்சிக்குத் திருமணமான புதிது. மதினி எனது அக்காவிடமும் என்னிடமும் பிரியமாக இருப்பார்கள். அவர்கள் வீட்டிலிருந்து எடுத்துவந்து படிப்போம். இப்படித்தான் வாசிப்பு ஆரம்பித்தது. 1956-ல் அப்பா சிங்கம்பட்டி ஜமீனுக்குச் செயலாளராக வேலை பார்த்தார்கள். குடும்பம் கல்லிடைக்குறிச்சிக்குக் குடிபெயர்ந்து வந்தது. மெய்ன் ரோட்டில் சிலோனிலிருந்து திரும்பிவந்த ஒருவர் பெரியதொரு மளிகைக் கடையை ஆரம்பித்திருந்தார். அவசரத்துக்கு சட்னி அரைக்க மிளகாய், தேங்காய், பொரிகடலை வாங்க இப்படியாக அந்தக் கடைக்குப் போனபோதுதான் ஆனந்த விகடனில், இலங்கையின் மகாவம்சம் தொடராக வெளிவந்ததைப் படித்தேன். தில்லானா மோகனாம்பாளும் வந்துகொண்டிருந்தது. கடைக்காரரிடம் கேட்டு வாங்கிப் படிக்கிற பழக்கமும் ஆரம்பித்தது. பேரூராட்சி அலுவலகத்தின் முன்முற்றத்தில் தினத்தந்தியைப் படிக்கப் போட்டிருப்பார்கள். அரண்மனைக்கு வரும் வார, மாதப் பத்திரிகைகளை அப்பா படிப்பதற்கு எடுத்து வருவார்கள். வீட்டில் கிடக்கும். இவ்வாறாகத் தொடர்ந்தது. வெலிங்டன், ராக்ஸி, பிரபாத் மற்றும் தமிழகமெங்கும் என்று கொடுக்கப்பட்ட சினிமா விளம்பரங்களைக் கத்திரித்துச் சேகரித்துமிருக்கிறேன். குடும்பம் சென்னைக்கு வந்தபிறகு, பிரேமா பிரசுரம் வெளியிட்ட சிரஞ்சீவி, மேதாவி, சந்திரமோகன் ஆகியோரின் துப்பறியும் நாவல்களைப் படிப்பது என்று வளர்ந்தது. நடுவே பள்ளிக்கல்வி துண்டிக்கப்பட நேரிட்டது. காயலான் கடையில் வேலைபார்த்து வந்தேன். அங்கே வரும் பழைய பேப்பர்களில் ஒன்றில் தான் ந. பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாராயணன்’ கவிதை படித்தேன். அக்காலகட்டத்தில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் எழுச்சி பெற்று வந்துகொண்டிருந்தது. தெருவுக்கு நான்கு திமுக படிப்பகங்கள் இருக்கும். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி மன்றம், புரட்சி நடிகர் எம்ஜிஆர் மன்றம், இலட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் படிப்பகம், அண்ணா மன்றம் இப்படி இப்படி. படிப்பகமென்றால் சும்மா தெருவோரத்தில் தெருச்சுவரில் கயிறுகோர்த்தோ, சன்னமான கம்பியிலோ பத்திரிகைகளைத் தொங்க விட்டிருப்பார்கள்.
திராவிட நாடு, தென்றல், இனமுழக்கம், மன்றம், நம்நாடு, தனியரசு என்று படிக்கக் கிடைக்கும். இங்கர்சால், மாஜினி, கரிபால்டி, ரஸ்புடின் ஆகியோரைப் பற்றியெல்லாம் திமுக சஞ்சிகைகள் வழியாகவே தெரிந்துகொண்டேன்.

அதன் தொடர்ச்சியாக அண்ணா, தம்பிக்கு எழுதிய கடிதங்களின் உரைநடை பாதிப்பு எனது கட்டுரைத் தமிழில் பாதித்திருப்பதை உணர்ந்திருக்கிறேன். இதுபோன்ற ஒரு மன்றத்தில் காவியக் கழகம் வெளியிட்ட கண்ணதான் கவிதைகள் நூல் படிக்கக் கிட்டியது. அதிலிருந்துதான் கண்ணதாசன் ரசிகன் ஆனேன். .பொ.சியின் சிலப்பதிகாரப் பேச்சுகளும் எனது தமிழைப் பாதித்துள்ளது.

உங்களது பத்திரிகையாளர் அனுபவம் உங்கள் படைப்பு, பார்வை, உலகியலை வடிவமைத்தது எப்படி?

பத்திரிகையாளனாக இருந்ததில்தான் தமிழக அரசியல் பற்றிய சரியான புரிதலே ஏற்பட்டது. அரசியல்வாதிகள் பற்றி வெகுவாக அறிந்துகொள்ள முடிந்தது. தமிழ் திரையுலகம் பற்றி நல்லதொரு கண்ணோட்டம் ஏற்பட்டது. தராசு பத்திரிகை தொடர்பில் வெவ்வேறு அரசியல்வாதிகளையும் நெருக்கமாகச் சந்தித்தேன். விடுதலைப் போராட்டம், தொழிற்சங்க வரலாறு பற்றியெல்லாம் தெரிந்துகொண்டேன். மைய நீரோட்ட வாழ்க்கை அத்தனை எளிதல்ல என்பதை உணர்ந்துகொண்டேன். தன்னலமற்ற அரசியல் தலைவர்களும் பணிசெய்திருக்கிறார்கள் என்பதை உணரமுடிந்தது. வெகுஜன சினிமாவிலும் அரசியலிலும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். வெகுஜனக் கலை, வெகுஜன அரசியல் சார்ந்த பொறுப்புகள், அவர்களது பணிகள் பற்றிய எனது ஏளனமான பார்வை விலகியது. பத்திரிகை பணியின் மூலமாகக் கிடைத்த கொடை அது. மைய நீரோட்டத்தை மதிப்பதற்கு பத்திரிகை பணிதான் கற்றுக்கொடுத்தது.

சின்ன வயதில் பார்த்த சென்னை, இப்போது வந்துகொண்டிருக்கும் சென்னை… என்ன வித்தியாசம் …

நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த சென்னை இயல்பும் எளிமையும் கொண்ட அழகிய நகரம். மாம்பலத்திலிருந்து மைலாப்பூருக்கு நடந்தே போகலாம். பேருந்தில் உட்கார இடம் கிடைக்கும். எங்கேயும் நெரிசல் கிடையாது. நாங்கள் வசித்துவந்த மேற்கு மாம்பலம் பகுதியில் பிராமண மக்கள் பின்னரே வந்தனர். கிணறும் மாமரமும் கொண்ட வீடுகள் நிறைய உண்டு.

சைதாப்பேட்டைக்கு அந்தப் பக்கம் போகவேண்டிய தேவையே இருந்ததில்லை. ஜாபர்கான்பேட்டை, மேட்டுப்பாளையத்துக்கு மேற்கே ஏரி இருந்தது. இன்றைய அசோக் நகர் பகுதி எல்லாம் காடு மாதிரி இருந்தது. யாரும் போவதில்லை. மேற்கு மாம்பலத்தை அடுத்து மாந்தோப்பு என்றே ஒரு குடியிருப்பு பகுதி இருந்தது. உஸ்மான் சாலையில் மட்டுமல்ல அனேகமாக எல்லா சாலைகளிலும் பெரிய பெரிய மரங்கள் நிற்கும். வெயிலே தோற்றாது. பாண்டி பஜார் அருகில் கலைஞன் பதிப்பகம், குயிலன் பதிப்பகம், பாரதி பதிப்பகம், வானதி பதிப்பகம் எல்லாமே ஒரேபகுதியில் இயங்கிவந்தன. எம். வி. வெங்கட்ராம் அங்கேதான் தங்கியிருந்தார். நித்தியகன்னி படித்து பரவசமாய் இருந்த காலம் அது. கந்தர்வன் அவரை என்ன மாமா என்று பிரியமாகக் கூப்பிடுவார். உங்கள் வாசகன் என்று அவரிடம் என்னை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். காலையில் காபி கிடைக்க கீதா கபேக்குத்தான் வருவார் தமிழ்வாணன். கருப்புக் கண்ணாடி, தொப்பி அடையாளம் இல்லாமல் வருவார்.
ஜெயகாந்தன் சேத்பட் மெக்நிகல்ஸ் சாலையில் தனது தாயாருடன் இருந்தபோது அவரைப் பார்க்க வாசகனாகப் போயிருக்கிறேன். திருமணம் ஆகவில்லை. மாடியில் எழுதிக் கொண்டிருப்பார். கண்ணதாசனைத் தேடிப் போய்ப் பார்த்திருக்கிறேன். அந்தப் பகுதியெல்லாம் மிக அழகாக இருந்தவை.

இன்றைய சென்னை விரிவாக்கம் பெற்றுவிட்டது. நெரிசல் மிகுந்துவிட்டது. தலைநகரம் இவ்வளவு பெரிதாக மாறுகிறதென்றால் அந்த மாநிலம் சீராக இல்லையென்றே பொருள். ஏன் எல்லா மக்களும் பட்டணம் வரும் நிலை? அவரவரும் அவரவர் ஊரிலே வாழ வசதியற்றுப் போய்விட்டதா?

அன்றைய சென்னையைப் பார்த்த எனக்கு இன்றைய சென்னையின் வளர்ச்சி மாற்றம் எல்லாம் சங்கடப்படுத்துவதாகவே உள்ளது.

நான் மவுண்ட் ரோட்டில் நடந்தே போனவன். இன்று அதைப் பார்க்கவே விளங்கவில்லை.

சினிமாவில் நடிக்கும் அனுபவம்

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரிடம் எனக்குப் பிடித்த விஷயம் நடிப்பை நன்றாகச் சொல்லிக் கொடுப்பார். அவர் சொல்லித் தருவதைச் செய்துகொடுத்தாலே போதும். என்னால் நடிக்க முடியும் என்று கற்பித்துக் கொடுத்த ஆசிரியர் அவர். வசந்த பாலன், திருக்குமரன், வெங்கட் பிரபு, சுரேஷ், பாக்கியராஜ் கண்ணன் எல்லாருமே விஷயம் உள்ளவர்கள்; வித்தை தெரிந்தவர்கள். எல்லாரிடமும் நான் நடிப்பைக் கற்றுக்கொண்டவன். திரைப்படத் துறையில் நடிகக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முதல் தயாரிப்பில் பணியாற்றுபவர்கள் வரை எல்லாரிடமும் காணப்படும் தொழில் பக்தி மிகுந்த மதிப்புக்குரியதாக உள்ளது.

இலக்கியம் தவிர ஜோதிடம், ஸ்தல புராணங்களிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டல்லவா?

தலபுராணங்களிலுள்ள புனைவுகள் பெரும் புலவர்களால் கட்டப்பட்டவை. அதனாலேயே அவை மாயம் கொண்டவையும் கூட. மாயம் கலை இலக்கியத்தில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அதற்கு வசீகரமே உண்டாகிறது.

இன்னமும் கோயில்களுக்கு அலுக்காமல் செல்கிறீர்களே?

பக்தி என்ற நோக்கத்துக்காகத் தான் நான் கோயில் கோயிலாக அலைகிறேன். சிவன் வழிபாடு என்பதுதான் சிந்தையே. சக்தியை வணங்குவதே எண்ணம். மனம் சாந்தி கொள்ளவும் சாதாரண மனிதன் தான் நான் என்று நினைவுபடுத்திக் கொள்ளவும் என்றே அமைகிறது. போகிற வழியில் நிலவெளி அழகைப் பார்த்துக் கொண்டிருப்பேன். மனத்துக்கு உவகை தருவது அது. ஜனங்களின் பேச்சுத் தமிழைக் கவனிப்பேன். தாராசுரம் போனால் வேறு ஒருவனாகிவிடுவேன். ஹொய்சாள சிற்பக் கலையின் நுணுக்கங்களை மலைப்புத் தட்டப் பார்த்துக் கொண்டிருப்பேன். திருப்புன்கூர் நந்தியின் திமிர்ந்த தோற்றம் கண்டு ஸ்தபதி எவ்வளவு பெரிய வித்தைக்காரன் என்று நினைத்துக் கொள்வேன்.

வெள்ளியம்பலத்தில் நடராஜப் பெருமான் கால்மாற்றி ஆடியதை ஊன்றிக் கவனிப்பேன். திருவாலங்காட்டில் நடராஜர் சிலாரூபத்துக்குக் கீழ் உள்ள காரைக்காலம்மையார் வடிவு மனசை என்னவோ செய்யும்.

பயணங்கள் வழியாக வெவ்வேறு இடங்கள் மக்களைப் பார்ப்பது பேசுவதில் ஈடுபாடுள்ளவர் நீங்கள். மாற்றங்களைச் சொல்லுங்கள்…

காவிரி டெல்டா பகுதி உலர்ந்து கிடப்பது என்னை மிகவும் பாதிக்கிறது. வேளாண்மை நசிந்திருப்பது வேதனை தருகிறது. வாழ்க்கையை இத்தனை வேகமாக கொண்டு செலுத்த வேண்டுமா என்று யோசிக்க வைக்கிறார்கள் ஜனங்கள். பொருள் தேடுவதில் ஏன் இத்தனை வேகம் என்று தோன்றுகிறது. டாஸ்மாக் கடைகளின் பெருக்கம் தமிழினத்தின் அழிவுக்கு பிரதான காரணமாய் அமையும் என்று பயமாக இருக்கிறது. மொழி, இன உணர்வு குன்றி வருவது வேதனையளிக்கிறது. அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தொலைக்காட்சி பார்ப்பது நீண்டநேரம் ஆகியுள்ளது. சொந்தவீடு கட்டவேண்டுமென்ற ஆசை அனேகமாக எல்லாருக்கும் வந்திருக்கிறது. திருமணம் ஒரே நாளில் முடிந்துவிடுகிறது. தமிழர் உணவுப் பழக்கத்தில் உப்பு, காரம் குறைந்திருக்கிறது. எல்லா ஊர்களிலும் ஒரேமாதிரியான ஒரே மாதிரியான சாப்பாடு, சிற்றுண்டி தான். தஞ்சை, நெல்லை மாவட்டங்களின் தனி ருசி போயே போய்விட்டது. இன்னொருபுறம் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஜனக்கூட்டம் கூடுதலாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தின் நவகிரக பரிகார ஸ்தலங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஜோதிட நம்பிக்கை அதிகமாகியுள்ளது. எதிர்காலத்தில் இலக்கியம் தழைக்குமா, கவிதை வாழுமா என்றெல்லாம் யோசனை வருகிறது.

( புகைப்படம் : புதுவை  இளவேனில்) 

Comments