Skip to main content

இயற்கைத் துறைமுகம்



பாடப்புத்தகத்துக்கு முன்னர் 

எப்போதும் சென்று கொண்டிருந்த 

என் அம்மா 

பணியிட மாறுதல் ஆகி

தூத்துக்குடிக்குப் போனாள்

இயற்கைத் துறைமுகத்துக்கும் செயற்கைத் துறைமுகத்துக்கும்

வித்தியாசம் அப்போதுதான் தெரிந்தது

கப்பல்கள் நின்று செல்வதற்கான அமைப்பு

இயற்கையாகவே அமைந்திருக்கும் இடம்தான்

இயற்கைத் துறைமுகம் என்று

தூத்துக்குடிக்கு நாங்கள் குடியேறிய போதே

சொல்லிவிட்டாள்

ஏற்கெனவே தூத்துக்குடி துறைமுகம் 

என்னிடம் ஆழப்பட்ட பிறகுதான் 

தூத்துக்குடி துறைமுகத்தை நேராகப் பார்த்தேன்

அம்மா பிறந்து வளர்ந்த ஊர் தூத்துக்குடி

தற்போது அங்குமிங்கும் பன்றிகள் மேயும் ஊராக

எனக்குத் தெரியப்போகும் உவர் நிலத்தை மகிமைப்படுத்த

துறைமுகத்தை அடையாளமாகச் சொல்லியிருக்கலாம்

அவள் பிறந்ததால்.

அது இயற்கைத் துறைமுகமாகவும் 

முன்பு இருந்தது ஒரு தற்செயல்.

உதவிப் பொறியாளராக வேலைபார்த்த

அப்பாவின் தாய்மாமனான 

தாத்தாவுடன்

துறைமுகத்துக்குள் உள்ளே நுழைந்தபோது

கடலோடு கலன்கள் ஆட

என் காலடியில் தார் பூசப்பட்ட தரைத்தளமும்

ஆட

எனக்கும் படகுகளுக்கும்

எனக்கும் தூரத் தெரிந்த கப்பலுக்கும் இடையில்

எண்ணெயும் அழுக்கும் மிதந்த கடலின் ஆழத்தில்

அம்மா சொன்ன 

இயற்கையைத் துறைமுகத்தில் தேடியபடி

இருந்தேன்.

பெரியவனாகிச் சென்னைக்கு வந்தபின்னர்

மெரினாவிலிருந்து தெரியும் துறைமுகத்தை

ஒரு நாள் நண்பனுடன் பார்த்தபோது

அது செயற்கைத் துறைமுகம்தானென்று

இளப்பமாகச் சொன்னேன்

நண்பனுக்கு எனது வேறுபாடு தெரிந்திருக்காது

துறைமுகங்கள் ஆழத்தில் பிரிந்த ஒரு கதை

அவனுக்கு எப்படித் தெரியும்

இயற்கைத் துறைமுகமென்று

அம்மா

எதை 

யாரைச் சொன்னாள்?

  

Comments