Skip to main content

ஆழ்கடல் வேண்டாமா குருவிகளே




பெசண்ட் நகர் மெய்ஞான சபையின் புழக்கடை
வாயிற்கதவை நோக்கி
கரம்குவித்தாற் போல் 
கடற்கரையில் இறந்து கிடக்கிறது
பங்குனி கடலாமை 
ஓட்டுக்குக் கீழே காயம்பட்டிருக்கும்
அதன் பின்புறத்தை 
காலை உணவுக்காகச் சூழ்ந்திருந்தன நாய்கள்
அங்கே
கடலுக்கும் சொந்தமின்றி 
சற்றே அமர்வதற்கு மட்டுமே கரையென
நீரும் நிலமும் தொடும் புள்ளியில்
பறப்பதும் தரிப்பதுமாகத் திரிந்தது 
சிறுகுருவிகளின் கூட்டம்
அலைகளின் தலையைத் தொடுவது போல
பரவளைவாகச் சுற்றி 
கரையில் படர்ந்திருக்கும் அடப்பங் கொடிகளுக்குள்
வந்து மீண்டும் நிற்கின்றன
விருந்துண்ண வந்த நாய்களுக்கோ
குருவிகளோடு ஓயாத ஊடல்
துரத்தி வரும் குரைப்பைச் சீண்டுவதுபோல 
மீண்டும் உயர்ந்தேகி
நம் தலைக்குச் சற்று மேலே
பறந்து கடல் வாயிலுக்குள் நுழைகின்றன 
நாய்களை
அலைகளை
கடலை
என்னை
எதையும் கடப்பதுமில்லை
எதையும் தொடுவதுமில்லை
குருவிகள்
சூரியன் பட்டு 
மினுங்கி மடியும் அலையில்
ஒருகணத்தில் விழுங்கப்படுவது போல
மறைந்துவிடுகின்றன 
மீண்டும்
என் விம்மலில் 
அந்தக் குருவிகளின் கருத்த உயிர்த்தீற்றல்கள்
கடலுக்கு மேல் மடிந்தெழுந்து அணிவகுத்து 
நாய்களோடு விளையாட கரைக்குத் திரும்பிவருகின்றன
குருவிகளே 
கடலின் ஓரத்துச் சிறு குருவிகளே
நீளத்தில் ஆழம் கண்டு
ஆழத்தில் நீளம் கண்டு
கண்டம் தாண்டிப் பயணித்திருக்கக் கூடிய 
வாய்ப்பு கொண்டு
தற்போது
அகாலத்தின் கரையில் ஒதுங்கியிருக்கும்
இந்தப் பங்குனி ஆமையைப் போல்
ஆழ்கடலை அறியவேண்டாமா குருவிகளே.

Comments