Skip to main content

Posts

முதல் ரோஜா

கண்களில் ரத்தமேறி குணத்துக்கு எட்டாத தொலைவில் எரியும் ரணம் உறங்காமல் விழித்திருப்பது ஏன்? 000 நான்குமுனைச் சாலையின் நெரிசலில் பிதுங்கும் வாகனங்களின் சக்கரங்கள் ஏறாமல் ஓரப்பாதசாரிகளால் நெரிக்கப்படாமல் இரும்பு வடிகால் துளையின் மேல் துளிக்காயமின்றி கிழிசலோ வாடலோ இன்றி தூசுகூடப் படாமல் துடித்துக் கிடக்கிறது ரத்தச் சிவப்பில் முன்போ பின்போ இல்லாத முதல் ரோஜா. 000 இங்கே சமீபமாக கொலையோ சித்திரவதையோ புணர்ச்சியோ எதுவும் நடக்கவில்லை நேற்று மாற்றிய வெள்ளை படுக்கையில் குங்குமச் சிவப்பு மிளகாய் பழத்தின் பளபளப்புடன் விபரீதப் பூவாய் பூத்திருக்கிறது ஒரு துளி. (நன்றி: அகழ் இணைய இதழ்)

நண்பர் அரவிந்தன்

எதிர்  பிளாட்பாரத்தில் இறந்து இருண்டு கிடக்கும் எலியின் வாலருகே  மினுங்கிக்கொண்டிருக்கிறது அன்பைவிடச் சிறந்த உணர்ச்சி ஒன்று க்ளிங் ளிங் என்ற ஓசையோடு சாலையில் கால் வைக்க முடியவில்லை முன்னும் பின்னும் முரட்டு வாகனங்கள் இடைவேளை இன்றி ஒரு நாள் ஒரு நூற்றாண்டு பல நூற்றாண்டுகள் திடீர் இடைவெளியில் குறுக்காக ஓடி, ஏறினேன். எதிர் பிளாட்பாரத்தில் தவறிக் கிடக்கும் நீர்த் தாவரத்தின் கசிவில் மினுங்கிக் கொண்டிருக்கிறது, அன்பை விட சிறந்த உணர்ச்சி ஒன்று க்ளிங் ளிங் என்ற ஓசையோடு.  - தேவதச்சன் தேவதச்சன் எழுதிய இந்தக் கவிதையில் திரும்பத் திரும்ப ‘அன்பை விடச் சிறந்த உணர்ச்சி’ என்றொரு உணர்ச்சி குறிப்பிடப்படுகிறது. கவிதைக்குள் அது என்னவென்பதை தேவதச்சன் சொல்லவில்லை.அவருடனான ஒரு தொலைபேசி உரையாடலில் அன்பைவிச் சிறந்த உணர்ச்சின்னா அது மரியாதை தான் ஷங்கர் என்று போகிற போக்கில் சொன்னார்.  அரவிந்தனுடனான 30 வருடத்துக்கும் மேலான தொடர்பைப் பற்றிப் பேசுவதற்காக எங்கள் உறவைத் தொகுத்துப் பார்க்கும்போது, மரியாதை தான் அன்பைவிடச் சிறந்த உணர்ச்சி என்று கவிஞர் தேவதச்சன் உரைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. அன்புக்...

குயில்

நம் தாமச இருட்டுறக்கத்தின் போர்வையைத் துளைத்துக் கிழிக்க முயல்கிறது மீண்டும் மீண்டும் அந்தக் குயிலின் குரல். கதியற்றவர்கள் நாம் என்று அறியுமா அது. எங்கெல்லாம் வந்திறங்கித் தரிக்கிறோமோ அந்த இடமெல்லாம் கதியற்றது என்பதை  அறியுமா அது. மேலான ஒரு கிளையிலிருந்து எங்களைக் குரைத்தெழுப்புவதால் அதுவே ஒரு கதியற்ற பறவை என்றதற்குத் தெரியாமல் போகுமா?

வேண்டாம் எரியட்டும்

நாதியற்றவர் நாம் என்று ஓர்மை மெலிதாய் தொடங்கும்போது உறக்கம், தன் நெசவை ஆரம்பித்துவிடுகிறது கர்மமோ சாவோ சில விளக்குகள் எரியாது. அதை எரியவைக்க முயற்சிக்கவும் வேண்டாம். சில விளக்குகள் அணையாது. அவற்றை அணைக்க முயற்சிக்கவும் வேண்டாம்.

உன் பூ

வெளியே நிசப்தத்தில் தன் மகத்துவத்தின் இருட்டில் யார் பார்வையும் படாத இந்நடுச்சாமத்தில் கொத்துக் கொத்தாய் பூத்து உதிர்ந்துகொண்டிருக்கும் சரக்கொன்றை மரமே எந்தப் பயங்கரத்திலிருந்து விடாமல் சொரிகிறது உன் பூ?

பேரிக்காய்

மூடிய ஒற்றை நிலைக்கதவுக்குப் பின்னால் அம்மா விசும்பிக் கொண்டிருக்க அப்பாவின் உறுமல் உயர்ந்தபடியிருந்த மத்தியான வேளை. வழக்கம்தானே இது என்று ஆறுதல் சொல்வதைப் போல அசந்தர்ப்பத்தில் வந்து சிமெண்ட் முற்றத்தில் என் முகத்தைப் பார்த்தபடி இறுக்கமாய் அமர்ந்திருந்தாள் அத்தை. வீட்டுக்கு காய்கறி வாங்கிப்போகும் உரச்சாக்குப் பையிலிருந்து துழாவி பேரிக்காயை எடுத்துக் கொடுத்தாள். அன்று எனக்கு முதல்முதலாக அறிமுகமான பேரிக்காயைக் கடித்தபோது மிகக் கசப்பாகவும் அந்த மத்தியானத்தின் கனத்தை அதிகரிப்பதாகவும் இருந்தது. நானும் அத்தையும் அந்த வீட்டின் திண்ணையில் ஒன்றாகத்தான் அமர்ந்திருந்தோம். அத்தை எப்போது கிளம்பிச் சென்றாள்? எனக்கு ஞாபகத்தில் இல்லை. அன்றிலிருந்து பேரிக்காயை பார்க்கும்போதெல்லாம் எனக்கு உடம்பெங்கும் பரவுகிறது  அந்தக் கசப்பு.

திருப்பதி

மூன்றாம் சாமத்தின் முடிவு எதுவுமே தெரியாத எதுவுமே பிறக்காத இருட்டினுள் திருப்பதிக்கு அழைத்துச் சென்றாள் அம்மா பெருமாளைப் பார்ப்பதற்கு முன்னால் மலையில் சுற்றும் புலிகளைக் கடக்க வேண்டுமென்றாள். புலி வாயில் சிக்கினாலும் பெருமாளின் திருவடியைப் பார்த்தமாதிரிதான் அவள் உண்டாக்கிய இன்னொரு இருட்டில் கேலியா? சரணாகதியா? எனக்குத் தெரியவில்லை. தென்மூலையில் பிறந்த அம்மாவுக்கு திருப்பதி என்பது சிறுவயதில் கனவாகவும் கதையாகவுமே இருந்திருக்கும். பெருமாளே மகாலட்சுமியைத் தேடி இங்கே வந்தவன்தானே. காலம்காலமாக கூட்டம் கூட்டமாக ஜனங்களும் அந்த லட்சுமியைத்தான் தேடி வந்துகொண்டே இருப்பதாய் திருப்பதியின் திசையைக் காட்டிச் சொன்னாள் அம்மா. ஆட்டோவின் மங்கலான முன்விளக்கொளியில் வாழைத் தோப்புகள் கடப்பதைப் பார்த்தோம் சில்லிடும் ஐப்பசிக் குளிரில் அம்மாவின் உடலோடு நெடுங்காலத்துக்குப் பிறகு கதகதப்புக்காக கட்டிக்கொண்டேன் ‘மணி, இந்த இருட்டுதான் அம்மா’ அசரீரியா என் மனக்கோலமா தெரியவில்லை அவள் முகத்தையே பார்க்க முடியவில்லை. நடுவில் ஆட்டோ திடுக்கிட்டு நின்றது முன் பைதாவுக்கு சற்று முன்னர் வெள்ளை வேட்டி கட்டிய தடித்த சிவப்பு தேகம் வ...