Skip to main content

அமேசான் கிண்டிலில் ராணியென்று தன்னையறியாத ராணி


ராணியென்று தன்னையறியாத ராணி நூலை அமேசான் கிண்டிலில் வாங்க



சென்னை நெசப்பாக்கத்தில், நான் தனியாக ஒரு சிறு வீட்டை எடுத்து வாழ்ந்த இரண்டு வருடங்களில் அறிமுகமான நட்புகளும் ஆதரவாக இருந்த மனிதர்களின் முகங்களும் ஞாபகத்துக்கு வந்துபோகிறார்கள். முதன்மையானவன் ராஜகோபால். நெசப்பாக்கத்தில் மேற்கொண்ட தனிவாழ்க்கையில் தான் நண்பராக ரஃபீக் அறிமுகமானார். ஹஸீன், செல்வம், சுப்ரமணியன், சி. மோகன், சந்தோஷ், சிவா எல்லாரும் வயது பேதங்களின்றி சில வாரங்கள் டிபன்ஸ் காலனி மைதானத்தில் சேர்ந்து ஒரு கிரிக்கெட் டீமை அமைத்து விளையாடிய ஆற்றல் இந்தக் கவிதைகளிலும் சிந்தியுள்ளது. கவிஞர் விக்ரமாதித்யன் ஒரு ஆண்டு அளவுக்குக் கூடவே இருந்தார். தளவாய் வந்து வந்து போய்க் கொண்டிருந்தான். 

நெசப்பாக்கம் வீட்டில் தான், இரண்டு ஜோடி தங்க மீன்களை வளர்த்துப் பிரியத்துடன் அவற்றைப் பராமரிக்கவும் செய்தேன். திரும்ப வேளச்சேரி வந்த பிறகும் அவை என்னுடன் நான்கு ஆண்டுகள் தொடர்ந்தன. தங்கமீனின் உடலை விட நீளமாக வளர்ந்த சிறகு போன்ற வாலை பார்த்து அமைதிகொண்டிருக்கிறேன். இந்தக் கவிதைகள் அந்தத் துடிக்கும் வாலைப் போன்றவை. 

த சன்டே இந்தியன் இதழில் அப்போது பணியாற்றினேன். ஆசிரியர் என். அசோகனும் சுந்தர புத்தனும் செய்த உதவியும்தான் அது. இத்தொகுப்பில் சில கவிதைகள் எழுதப்பட்ட காலத்தில் ஆனந்த விகடனில் பிரசுரமாகிக் கூடுதல் கவனத்தையும் பெற்றன. என் அம்மா அந்தக் கவிதைகள் வெளியான இதழ்களை ஆசையோடு பாதுகாத்தார்.


ராஜகோபாலுடன் 


 இந்தக் கவிதைகளில் நான் சில கனவுகளையும் நம்பிக்கைகளையும் புதைத்திருந்தேன். அவை வெறும் கனவு, வெறும் நம்பிக்கை என்றே எழுதியபோது நினைத்தேன். அவற்றில் சில பின்னர் நிறைவேறின. அந்தக் கவிதைகளைப் படிக்கும்போது கவிதை தொடர்பிலும் வாழ்க்கை தொடர்பிலும் கூடுதலாக நம்பிக்கை கொள்ளலாம் என்று இப்போது தோன்றுகிறது. இந்த முன்னுரையை எழுதி முடித்தபோது, கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்திருந்த சில பழைய புகைப்படங்களைப் பற்றி தளவாயிடம் கேட்டபோது அவனிடம் பத்திரமாக வைத்திருந்ததை அனுப்பிவைத்தான். தொலைந்தவை என நினைத்தவற்றில் சிலவாவது திரும்பும் என்ற நம்பிக்கையை அந்தப் புகைப்படங்கள் அளித்தன.

எனது தனிக்கவிதைத் தொகுதிகளில் உள்ளடக்க வளமை கொண்ட தொகுதி இதுவென்று இப்போது தோன்றுகிறது. மிகுந்த அநாதை நிலையை, இன்மையை, இன்மைகளை உணர்ந்த காலங்களில் தான், பிடிவாதத்துடனும் கனவுடனும் உயிர்ப்புடனும் இருக்கிறேன், இருந்திருக்கிறேன் என்பதை இந்தத் தொகுப்பின் கவிதைகள் திரும்ப ஞாபகமூட்டுகின்றன. 2011-ம் ஆண்டில் நற்றிணை பதிப்பகம் சார்பில் வெளியானது. நற்றிணை யுகனிடம் என்னை ஆற்றுப்படுத்தியவர் பிரபஞ்சன்.  


இத்தொகுதியை ராஜகோபாலுக்குச் சமர்ப்பணம் செய்தேன். அவரவர் தனிமையைச் சேர்த்து மதுவாகக் குடித்துக் களித்த நாட்கள் அவை. அவன் திருமணமாகி ஓர் அமைதியான இல்லறத்துக்குள் சற்றே தூரத்தில் உள்ளான்.

அவனுக்கே இந்த அமேசான் கிண்டில் பதிப்பும் சமர்ப்பணம். இத்தொகுதியில் உள்ள கவிதைகளின் அழகையும் கனவையும் பிரதிபலிக்கும் ஓவியத்தை சண்முகம் வரைந்துள்ளார். அவருக்கு எனது சிறப்பு நன்றி. அமேசான் கிண்டில் வழியாக எனது புத்தகங்களைக் கொண்டு வருவதற்கு ஆலோசனை சொன்ன கவிஞர் இசைக்கும், செந்தில்குமாருக்கும் எனது எப்போதைக்குமான நன்றி.

Comments