Skip to main content

ஜிம்மி - நகுலன்

(கவிஞரும் நண்பருமான ந. ஜயபாஸ்கரன் தபாலில் அனுப்பிவைத்த நகுலனின் சிறுகதை  இது. காவ்யா வெளியிட்ட நகுலனின் கதைத் தொகுப்பில் இடம்பெறாத கதை. நகுலனின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. ‘ஜிம்மி’ என்ற பெயரில் 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் தாமரை இதழில் வந்துள்ளது. நகுலனின் நூற்றாண்டையொட்டி இந்தக் கதை எனக்குக் கிடைத்துள்ளது. நகுலனின் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள் ஆகியவை இந்த நூற்றாண்டுத் தருணத்தை ஒட்டியாவது சிறப்பாகப் பதிப்பிக்கப்பட வேண்டும்.  நண்பர் ஜயபாஸ்கரன் பல ஆண்டுகளுக்கு முன்னர் நகுலன் ஆங்கிலத்தில் எழுதிய ‘முகமது இப்ராகிம்’(https://www.shankarwritings.com/2013/08/blog-post_30.html) கதையை அனுப்பி அதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். நகுலன் இந்தக் கதை தொடர்பில் கட்டுரை ஒன்றையும் எழுதியிருக்கிறார். அதையும் பின்னர் பகிர்கிறேன். இந்தக் கதை தொடர்பிலான எனது குறிப்பை அடுத்தாற்போலப் பகிர்கிறேன்.)  


அவன் கல்லூரியிலிருந்து திரும்பி வந்துவிட்டான்- 10.30க்கே. அன்று கல்லூரி மாணவர்கள் கோட்டயம், ஆழப்புழை, பிறகு கொல்லம் முதலிய இடங்களில் நடந்த நான்கு ஐந்து விளையாட்டுப் பந்தயங்களில் வெற்றி பெற்றதால் எதிர்பாராத விதமாக விடுமுறை. அதுவும் திங்கட்கிழமை விடுதலையென்றால் சந்தோஷத்திற்குக் கேட்பானேன். மழைக்காலம் நெருங்கும் சமயமாக இருந்தாலும் நல்ல வெயில். வீட்டில் வந்ததும் பனியனை அவிழ்த்துவிட்டுப் படுத்துக் கொண்டான். அவன் தகப்பனார் அவர் அறையில் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொள்வதற்குப் போய்விட்டார்.

அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்தாள். அவன் தனது அறையில் களைப்பாறிக் கொண்டிருந்தான். கேட் திறக்கும் சப்தம்.

தூரத்திலிருந்து அவன் எழுந்து பார்த்ததும் செல்லாயி வருவது தெரிந்தது. 

வழக்கமாகக் காய்கறி போடுகிறவள். 

வங்கக் கலைஞர் தீட்டும் ஒல்லிய ஒயில் படைத்த உருவம்; பிரசன்னமான முகம். 

“யாரும் இல்லையா?”

“ஏன்?”

அவன் அவளைப் பார்த்தான். 

“யாரும் இல்லையா, சாமி?”

அவன் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“சாமிக்கு இன்னிக்குக் காலேஜிக்குப் போகவேண்டாமா?”

“ஏன் போகணுமா?”

தனது நினைவுகளை உசுப்பிக் கொண்டு, அவளைப் பார்த்து , “இரு, அம்மாவை வரச் சொல்கிறேன்" என்றான். 

அம்மா வந்தாள்.

"அணாவுக்கு மூன்று வெண்டைக்காயா? நல்ல கூத்து".

 “கொடுக்கிற விலை சொல்லு"

“சரி, எடுத்துக்கோ அம்மா.”

அம்மா காசு எடுக்கப் போனாள்.

அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.

அம்மா வந்ததும் அவள் சென்று மறையும் உருவைக் கண்டு கொண்டு நின்றான். மீண்டும் அவன் அறைக்கு வந்தான். 

‘அவள்’ ஞாபகம் வந்தது; ஆனால் அவள் அவன் நோக்கத்தைப் புரிந்துகொண்டும் பச்சாதாபப்பட்டாளே தவிர, பரிவு காட்டவில்லை; அவனும் வருகின்ற வரனையெல்லாம் ஏதோ ஆசையால் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தான். 

அப்பா அவர் அறையிலிருந்து வந்தார். அவன் மேஜை மீதிருந்த பேப்பரைப் பார்த்துவிட்டுத் தெரிந்திருந்தும், “இன்னிப் பேப்பர் தானே"! என்றார். அவன் பதில் சொல்லவில்லை. அவர் போய்விட்டார். ரிடையறான பிறகு அவருக்குப் பொழுது போவதில்லை. 

வாசலில் சைக்கிள் மணி விடாமல் அடித்தது; பிறகு "சாமி சாமி" என்று வழக்கமான தங்கத்தின் குரல்.

அவன் ஓடினான்; அவன் எதிர்பார்த்தவை. தன் கவிதை தாங்கிய "நக்ஷத்திரம்"; கதை பிரசுரமான ‘உருவம்’;

நான்கு ஐந்து நாட்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தன் நாவலின் 5 பிரதிகள். ஆனால் கிடைத்தது "நக்ஷத்திர"த்திற்கு அனுப்பிய சந்தாவின் மணி ஆர்டர் ரசீது.

அம்மா கேட்டாள். "உனக்குப் பத்திரிகையிலிருந்து ஏதாவது திரும்பி வந்ததா?”

அவன் "ஒன்றுமில்லை" என்றான்.

“சரி, மணி 12 ஆகிவிட்டது, காப்பி சாப்பிட வா" என்றாள்; போனான். பிறகு, வெற்றிலை போட்டுக் கொண்டு தன் நோட்புக்கைத் திறந்து குறிப்பு எழுதிக் கொண்டிருந்தான். “இந்த ஆசிரியர் இலக்கியக் கோட்பாடுகளை விட்டிஜென்ஸ்டீனின் கொள்கையை வைத்துக்கொண்டு, எப்படி எல்லா விளையாட்டுக்களும் ஒரு அடிப்படை தாங்கியது என்று சொல்ல முடியாமல் இருப்பது என்பதுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட விளையாட்டை வைத்துத்தான் ஒரு விளையாட்டை விளையாட்டு என்று எடுத்துக் காட்ட முடியும் என்பதும். பல விளையாட்டுகளில் சில ஒற்றுமைகள் தான் இருக்கின்றன என்றுதான் சொல்லமுடியும் என்பது போல் குறிப்பிட்ட தனிப்பட்ட இலக்கியங்களை வைத்துக் கொண்டு, இதுதான் இலக்கியம் என்று வரையறுத்துக்காட்ட இலக்கிய விமர்சனத்தால் முடியாது என்று எழுதியிருக்கிறான். இது எனக்குச் சரி என்றுதான் படுகிறது; ஏன் என்றால் மௌனி எழுதுவதும் கதைதான்; லா ச ராவும் சிறுகதைதான் எழுதுகிறார்; கு. ப. ராவும்தான். ஆனால் இவை ஒன்றிற்கொன்று எவ்வளவு மாறுபட்டவை. ஆனால் இந்த ஆசிரியன் சொல்வதுபோல் இவைகளின் தன்மைகளை விளக்குவதில்தான் எனக்கு இலக்கிய விமர்சனத்தின் இன்பம் கிடைக்கிறது" நோட்புக்கை மூடிவிட்டான். இதைப் படித்துவிட்டுச் சிலர் "இவன் கல்லூரி ஆசிரியர் என்பது சரிதான் என்று சொல்வார்கள் என்பதை நினைக்க அவனுக்கே சிரிப்பு வந்தது.” சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்; எழுதுபவன் எழுதிக் கொண்டே இருப்பான்" என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

விஷயம் பிடிபட வார்த்தை கிடைக்காத அவஸ்தை; வானம் இருண்டது. 

மணி 3.

படபட என்று மழைத்துளிகள். 

பிறகு ஒரு கால்மணி நேரம் சுமாரான ஆனால் ஆளை அடியிலிருந்து முடிவரை நனைக்கக்கூடிய மழை. 

அறையிலிருந்து சென்று வாசலில் தெருவைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

பள்ளிக்கூடம் முடிந்து நான்கு ஐந்து பெண் குழந்தைகள் நனைந்துகொண்டே போனார்கள்.

ஒரு குழந்தை மிகவும் அழகாக இருந்தது. பாவாடையைத் தூக்கிப்பிடித்த வண்ணம் (அதன் உள்பாவாடை தெரிந்தது) உடல் மழைத் தண்ணீரில் மினுமினுக்க வந்து கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் அவளும் அவள் தோழிகளும் வாய்விட்டு விழுந்து விழுந்து உரக்கச் சிரித்துக் கொண்டே ஓடினார்கள்.

பின்னால் வந்த பையன்கள் கூவினார்கள். 

மழை நிற்க ஆரம்பித்தது. 

அவன் திரும்பியும் தன் அறைக்குள் வந்தான்.

தகப்பனார் வந்து அவனிடம் "நீ இன்று வெளியில் போகப்போகிறாயா?” என்று கேட்டார்.

"ஆமாம்" என்றான்.

அடுக்களையிலிருந்து அம்மா, “போவதற்குமுன் காபி குடித்துவிட்டுப் போ" என்றாள். 

அவன் தகப்பனார் வழக்கம்போல் (பேப்பர் படித்தாகிவிட்டது) பூப்பறிக்க முல்லை படரவிட்ட கொடியின் அருகில் இருக்கும் செம்பருத்திச் செடியிடம் சென்றார். சிறிதுநேரம் கழித்து அவனை ஓசைப்படாமல் வரச் சைகை செய்தார். இப்பொழுது நன்றாக வெயில் அடித்தது. அவன் சென்றதும் அவர் செம்பருத்திச் செடியின் கீழ் யார் கண்ணுக்கும் எளிதில் தென்படாத ஒரு மூலையில் சுருண்டு கிடந்த ஜிம்மியைக் காட்டினார். அவன் அவரைப் பார்த்தான். 

“செத்துவிட்டது"

அவன் மீண்டும் அவரைச் சந்தேகத்துடன் பார்த்ததும் அவர் அங்கிருந்த செம்பருத்திச் செடியின் ஒரு உலர்ந்த கம்பை எடுத்து அதை "நெம்பி"க் காட்டினார். அது விறைத்துக் கிடந்தது. 

அப்பொழுது அவன் போய்விட்டானோ என்று பார்க்கவந்த தாயாரிடம் அவன் ‘ஜிம்மி’ செத்துவிட்டது என்றான். 

அவன் வெளியே போகத் தயாரானான். 

அவர்கள் இருவரும் உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள்.

அவன் தாயார் சீக்கிரம் திரும்பி வந்துவிடு என்றாள். 

அவன் ‘சரி’ என்று சொல்லிவிட்டுப் போனான்.  

Comments