Skip to main content

காட்டைப் பிரிந்த யானை நான் - ரமேஷ் - பிரேதன் நேர்காணல்

 


மேற்கத்தியத் தத்துவமும் இந்தியத் தத்துவ மரபுகளும் ஊடாடும் பின்நவீனத்துவப் புனைவுகள், கட்டுரைகள் வழியாகத் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அறிமுகமாகி, சிறுபத்திரிகை வெளியில் காத்திரமாகத் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் ரமேஷ் பிரேதன். எழுத்தாளர் பிரேமுடன் தொடக்கத்தில் இணைந்து இயங்கிய இவர் தற்போது ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் தனியாக இயங்கிவருகிறார். கவிதை, காவியம், சிறுகதை, நாவல், கட்டுரைகள், நாடகம் எனச் செயல்பட்ட எல்லாத் தளங்களிலும் முத்திரை பதித்த அரிதான கலைஞர். சாதிதான் எல்லா இந்தியர்களையும் தமிழர்களையும் பிரிப்பதாகவும் இணைப்பதாகவும் உள்ளது என்ற கருத்தோட்டப் புள்ளியில் நின்று, ஒரு தமிழ்ப் பொது மனிதனையும் அவனுக்கான விடுதலையையும் கனவுகாணும் மூன்று நாவல்கள் ‘அவன் பெயர் சொல்’, ‘ஐந்தவித்தான்’, ‘நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை’. மீபுனைவாக இவர் எழுதிய ‘ஆண் எழுத்து பெண் எழுத்து = ஆபெண் எழுத்து’ எனும் நூலும் தனித்துவமானது.

உங்கள் கவிதைகளுக்கான மரபாக பாரதி, பாரதிதாசன் இரண்டு பேரையும் குறிப்பிடுகிறீர்கள். பாரதி, பாரதிதாசன் இருவரும் உங்கள் படைப்புகளில் செலுத்தும் செல்வாக்கைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்?

பாரதி, பாரதிதாசன் என்னும் இருபெரும் ஆளுமைகளால் எனது பதின்பருவம் கட்டமைந்தது. பாரதி வழியாக இந்தியப் புராணமரபுகளையும் பாரதிதாசன் வழியாகத் தமிழ்த்தேசிய சங்க இலக்கிய மரபுகளையும் வந்தடைந்தேன். பாரதியின் இந்தியத் தேசியக் கவிதையியலும் பாரதிதாசனின் தமிழ்த் தேசியக் கவிதையியலும் வேறுபடும் புள்ளியிலிருந்து என்னை வளர்த்தெடுத்துக்கொண்டேன். பாரதிதாசனைக் கடந்துவந்துவிட்டேன்; பாரதியைத் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். இன்று உலகக் கவிதைகளை அலைந்துத் திரிந்து மேய்ந்துவந்தாலும் நின்று அசைபோடுமிடம் பாரதிதான். பாரதி என்பது ஒருவகை போதை; அப்பழக்கத்திலிருந்து பாரதிதாசனைப்போல என்னாலும் விடுபடமுடியவில்லை. பாரதிதாசனின் நாத்திகத்தின் கவிதையியலை இத்தனை வீரியத்தோடு வேறொருவரிடம் வாசித்ததில்லை. இவர்கள் இருவரையும் தவிர்த்து புதுமைப்பித்தனிடம்தான் எனக்கான முழுமையைக் கண்டடைந்தேன். எனது படைப்புகளின் எல்லா வகைகளிலும் புதுமைப்பித்தனின் நிழல்கள் குறுக்கும் நெடுக்குமாக அலைவதை உற்றுநோக்கினால் காணலாம்.

புதுச்சேரி உங்கள் படைப்புகளின் மையமாகவும், ஒரு விடுதலை நிலமாகவும் உருவகிக்கப்படுகிறது. அதற்கான பின்னணி என்ன? 

புதுச்சேரி எனது தாய்வழி நிலம். பிரெஞ்சுக்காரர்களின் காலத்தில் உள்நாட்டுப் பகுதியான பாகூரிலிருந்து நகரக் கடற்கரையோரம் தாயின் முன்னோர்கள் குடிபெயர்ந்தனர். பிரெஞ்சுப் பண்பாடு கலந்தத் தந்தைவழி வாழ்க்கை முறையும் கல்வி பொருளாதாரச் சமூகநிலையும் என் அம்மாவை வடிவமைத்தது; நான் என் அம்மாவால் ஆனவன். இந்த நிலத்தின் குடிமக்களிடம் பொருளாதார ஏற்றத்தாழ்வைத் தவிர்த்து மதச் சாதீய வல்லுறசல்கள் இல்லை. பிரெஞ்சிந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியத் தமிழக அரசியல் இடையீடுகளால் புதுச்சேரி தனது தனித்துவத்தைத் தக்கவைக்க முடியாமல் போனது. நான் வளர வளர இந்நிலப்பகுதி தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக உருத்திரிந்தது. இந்த உருத்திரிபிலிருந்து உள்திரும்பி இம்மண்ணுக்கான இலக்கியத்தை எழுதிப்பார்க்கிறேன். ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகளை முன்வைத்து அதற்கும் முந்தைய வரலாறை அகழ்ந்தெடுக்க வேண்டும். குடிகளின் வாழ்வு நாட்டுப்புறக்கதைகளாகவும் அவர்தம் பண்பாட்டுக்கூறுகள் நாட்டார் வழக்காறுகளாகவும் நினைவுகூறப்படும்போது, அதிகாரவர்க்கத்தின் நடைமுறை நிகழ்வுகள் வரலாறாக நிலைநிறுத்தப்படுகிறது. நான் இந்த இரட்டை எதிர்நிலைகளிலிருந்து எனது புனைவுச் சொல்லாடலை எழுதுகிறேன். எழுத்திலிருந்து விடுதலைகண்ட நிலத்தை வரைந்தெடுக்கிறேன். புதுச்சேரி என்னும் நெய்தல் திணை கடலாலானது; கடல், கதைகளை அள்ளித்தரும். 

புதுமைப்பித்தன், மா. அரங்கநாதன், நகுலன் எனத் தொடங்கி புனைவின் வழியாகச் சிந்திக்கும் நவீன தமிழ் இலக்கிய மரபின் தொடர்ச்சி நீங்கள். உங்கள் படைப்புகளில் பூக்கோவும் வள்ளலாரும் சந்திக்கும் தருணங்கள் நிகழ்கின்றன. கோட்பாடுகளும் சிந்தனைகளும் அறிவும் வரலாறும் வெறும் நுகர்வாக மாறியிருப்பதாக சொல்லப்படும் காலகட்டத்தில் சிந்தனைக்கும் விடுதலைக்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்களா?

அறிவே வரலாறைக் கட்டுடைத்து மறுஆக்கம் செய்கிறது. அறிவே அதிகாரம். அறிவின் சமச்சீரின்மை சமூகப் பாசிசத்தை வளர்த்தெடுக்கும். அறிவைப் பொதுமைப்படுத்துவதே பொதுவுடைமைச் சிந்தனையின் அடிப்படை. அறிவைக் கைக்கொள்ளுதல் என்பது ஒரு வர்க்கத்திற்கோ வர்ணத்திற்கோ மட்டுமே உரித்தானது அன்று. அறிவியல் அறிவும் அரசியல் அறிவும் சமூகக் கட்டுமானத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். அறிவின் விடுதலையை மதம் ஒருபோதும் ஒப்பாது. அறிவியலாளர்களே மனித வரலாறை வழிநடத்துகிறார்கள். மதத்திலிருந்து வெளியேறாத சமூகம் அறிவு ஊனம் கொண்டதாகவே விளங்கும். உள்ளமும் உடம்பும் விடுதலையை நுகர்வதே சமூக அறம். நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்பதோர் அனார்க்கியக் கூற்றில் விடுதலை இறையியலை நுகரலாம். திருவள்ளுவர், திருமூலர் தொடங்கி பதிணென் சித்தர்கள் வழி அருட்பிரகாச வள்ளலாரில் சமூக விடுதலைக் கோட்பாட்டை வரைந்தெடுக்கலாம். ஃபூக்கோ முதலான பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் தொடங்கி வள்ளுவம் வழி வள்ளலாரில் வந்துமுடியும் ஒரு வரைபடத்தை எனது படைப்புகள் வழி உருவாக்குகிறேன். பாசிசம் அண்டாத அறிவின் பெருவிழிப்பே எனது புனைவுகள் வகுக்கும் அறம்.  

சிறுகதை வடிவத்தில் சாதனை நிகழ்ந்த இடம் நம்முடையது. அந்தப் பின்னணியில் பார்க்கும் போது தற்போது எழுதப்படும் சிறுகதைகளில் ஒரு தேக்கம் நிலவுகிறதா?

சிறுகதை, நாவல் என்னும் இரு பெரும் வடிவங்களையும் நான் புனைவு என்ற சொல்லாலேயே ஒருமுகப்படுத்துகிறேன். ஒரு கவிதையைச் சிறுகதையாகவும் ஒரு சிறுகதையை நாவலாகவும் வளர்த்தெடுக்கும் தன்மையில்தான் நான் எழுதுகிறேன். புதுமைப்பித்தனின் பெரும்பாலான சிறுகதைகளும் கலாப்பிரியாவின் எட்டயபுரம், சுயம்வரம் முதலான நெடுங்கவிதைகள் யாவும் நாவல்தன்மை கொண்டவையே. மெளனன் யாத்ரிகாவின் வேட்டுவம் என்ற ஒரே பொருளாலான கவிதைத் தொகுப்பை ஒரு நாவலாகத்தான் வாசித்தேன். நாளிதழ்களில் காணப்படும் பத்தி எழுத்துக்கள் புனைவுகளாகவும் தலைப்புச் செய்திகள் கவிதைகளாகவும் உருமாற்றமடைகின்றன. முன்பெல்லாம் டைரியில் எழுதப்பட்ட நாட்குறிப்புகள் யாவும் இன்று முகநூல் பதிவுகளாகின்றன. காலப்போக்கில் முகநூல் பதிவுகளின் தொகுப்புகள் நூலாக்கம் பெற்று ஓர் இலக்கிய வகைமையாகலாம். ஆக, படைப்பின் வகைமைப் பெருகி உருமாற்றமடையும்போது தேக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அளவிலோ உலக அளவிலோ; தனது சொந்தச் சமூகத்திற்குள்ளோ எந்தவொரு ஏற்பையும் பெறாதத் தமிழிலக்கியம் வரலாற்றில் ஒருபோதும் தேக்கமடைந்ததில்லை. சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற பிரிவுகள் பக்கங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரையறை செய்யப்படுகின்றன. நூலக அறிவியல் இந்த உட்பிரிவுகளை ஏற்பதில்லை; அங்கு கவிதை, நாடகம், புனைவு, கட்டுரை என்பனதாம் பெரும் பிரிவுகளாகும். ஆக, தமிழ்ப் புனைவில் சிலப்பதிகாரம் தொடங்கி நீர்வளரி வரை தேக்கம் என்பதேயில்லை.

இந்திய, தமிழ்ச் சூழலில் விடுதலையை ஒரு தன்னிலை அடைவதற்கு சாதி எவ்வளவு தடையாக இருக்கிறது என்பதை உங்கள் புனைவுகளிலும் கட்டுரைகளிலும் பேசியவர் நீங்கள். சாதியைத் தாண்டும் சாத்தியமுள்ள காஸ்மாபொலிட்டன் தன்மை கொண்ட கனவு நகரமாக பாண்டிச்சேரியை நீங்கள் உருவகிக்கிறீர்களா...

இல்லை. புதுச்சேரி மட்டுமில்லை, இந்தியாவில் எந்தவொரு நிலப்பகுதியின் சந்துப்பொந்தில் வாழும் ஒரு தன்னிலையும் தான் சார்ந்த சாதியைத் தாண்டி வந்ததில்லை. இத்துணைக்கண்டம் ஊரும் சேரியுமாகத்தான் பிரிந்திருக்கிறது. பாக்கிஸ்தான் – இந்தியா பிரிந்திருப்பதைப்போல ஊரும் சேரியும் பிரிந்திருக்கின்றன. அரசியல் அழுத்தங்களால் பிரிந்த நிலம் இணையலாம்; இருப்பினும், மனம் இணையாது. புதுச்சேரி, பிரெஞ்சிந்தியாவாக இருந்தபோது முதல் உலகப்போரிலும் இரண்டாம் உலகப்போரிலும் பங்கெடுக்கக் கூலிப்போராளிகளாய்த் தலித்துகள் கப்பலேற்றப்பட்டனர். உயிரோடு திரும்பியவர்கள் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்று பொருளாதார ஏற்றம் பெற்றனர். ஆயினும், பிறருடன் சாதிக்கலப்பு நிகழ்ந்துவிடவில்லை; ஆனால், பொருள் வசதி தலித்துக்களைப் பழைய சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்தது. ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகளில் பரங்கியர், கிறித்துவர், இசுலாமியர், தமிழர்கள், பறையர்கள் என்றே குடிமக்கள் தொகுக்கப்பட்டுள்ளதைத் தெளிவாக அறியலாம். தலித் அல்லாதார் அனைவரும் தமிழர் எனப்பட்டனர்.  இந்தச் சமூக நிலையிலிருந்து தலித்துகளைப் பிரெஞ்சு காலனியம் விடுதலைச் செய்தது. பிரிடிஷ் இந்தியாவில் ஞானகுரு. அம்பேத்கர் அவதரிப்பதற்கு முன்பே பிரெஞ்சிந்தியாவில் தலித் சமூகத்தில் பொருளாதார ஏற்றம் வழியாக ஒரு பண்பாட்டு விடுதலை நிகழ்ந்துவிட்டது. இந்த அரசியல் பின்னணியில் எனது கதைக்களத்தைக் கட்டியெழுப்பும்போதும், அவற்றைத் தமிழ்நாட்டுப் பின்னணியில் வாசிப்பவருக்கு விநோதப் புனைவாக இருக்கிறது. தனிப்பட்டமுறையில் எனக்குப் பொந்திஷேரி என்றால் இந்தக் கிழக்குக் கடல் தவிர வேறொன்றுமில்லை.

உங்களைப் பாதித்த சித்தர் மரபிலக்கியம் பற்றிச் சொல்லுங்கள்?

 பாரதி அறுபத்தாறு இப்படித் தொடங்குகிறது, ‘’எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா/ யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்.‘’ பாரதியின் வழியில்தான் சித்தர்களையும் சித்தர் இலக்கியங்களையும் கற்றேன். திருமந்திரம் கற்ற பிறகு பிறர் என்னை ஈர்க்கவில்லை; ஆனால், அனைவரையும் படித்திருக்கிறேன்; ஆனால், பேரனுபவமாக உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை. புதுச்சேரி ஒரு சித்தர் நிலம். இங்கு வாழ்ந்த சித்தர்களின் மாயயெதார்த வாழ்க்கைக் கதைகளைத்  தொகுத்து ஒரு நாவல் எழுதவும் எண்ணம். திருமூலர் எனது கவிதைகளில் தொடர்ந்து வருகிறார்.   பேய்மையின் கவிதையியலைக் கட்டமைத்த புனிதவதியாரும் இம்மரபில் பொருந்திவருவார். சமூக வழமையிலிருந்து வெளிப்பிதுங்கி நிற்பவர்களைச் சித்தர் எனச் சொல்வது சமூகப் பொதுப்புத்தி; இது தமிழர் இறையியல் மற்றும் கவிதையியலில் சிவத்தில் தொடங்கிச் சிவத்தில் தொடர்வது. நவீன/ பின்நவீன அரசியல் கோட்பாடுகள் சார்ந்த ஈடுபாட்டால் இம்மரபில், நவீனக் கவிகள் சிலரைப்போல் என்னைப் பொருத்திக்கொள்ள இயலவில்லை.

மது அருந்துவதைக் குற்றச்செயலாகக் கருதும் ஒரு சமூகத்தில் அதற்கு எதிராகப் பரப்புரை செய்துகொண்டே, மது விற்பனையை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. பாண்டிச்சேரிவாசியாக மது அருந்தும் பண்பாடு பற்றிய உங்கள் பார்வை?

இனக்குடி சமூகம், உழுகுடி சமூகம், அலைகுடி சமூகம் முதல் எல்லா வளர்ந்த சமூகங்களும் தனக்கான போதையைக் கொண்டுள்ளன. மூளையின் இயக்கம் சமன் குலையும் நிலையைச் செயற்கையாக ஏற்படுத்தும்போது போதையுண்டாகும். அதன் சக்தி கூடக்கூட போதை, வெறியாகும், படிப்படியாகப் பைத்தியமாகும். பைத்தியம், மரணம்வரை கொண்டுசெல்லும். அளவோடு நின்றால் சாவைக்கூட தொட்டு எழலாம். சாதியால் மூடுண்ட இச்சமூகம் அதீத போதையால் ஒரு திறப்பை உண்டாக்கப் பார்க்கிறது. கடைநிலை வர்க்கத்தினர், சாதியினர் போதையை அதிகமாக ஏற்கின்றனர். மூன்றாம் உலக நாட்டினர்க்கு, குறிப்பாக இந்தியர்க்கு போதை என்பது கொண்டாட்டத்திற்கானதாக இருந்ததில்லை. நஞ்சுக் கலவையை மது என்ற பெயரில் குடிக்கக் கொடுத்து விளிம்புநிலை மக்களை அரசு கொஞ்சம்கொஞ்சமாக அரசு சட்டபூர்வமாகக் கொல்கிறது. மனித உரிமை அமைப்புகள் இதைக் கண்டுகொள்வதில்லை. கொரோனா கிருமியின் பாதிப்புக்கு ஆளாக்கிச் சாவைத் தழுவும் தமிழரின் எண்ணிக்கையைவிட குடிநோயாளிகளாகிச் சாகும் மக்கள் அதிகம். போராயுதங்களால் நிகழ்த்தப்படும் போரைப் போல, கிருமிகளால் நிகழ்த்தும் உயிரியல் போரைப் போலப் போதைப் பொருட்கள் வழியாகவும் ரத்தமின்றி சப்தமின்றி நடத்தப்படுவதே இந்தப் போதை நுகர்வோர் அழித்தொழிப்பு. ஆஸ்திரேலிய அபாரிஜின்கள் போல மண்ணின் தமிழ்க்குடிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகிறார்கள். போதைப்பொருட்களும் போராயுதங்களும் இல்லாத சமூகமே உயிரியல் வரலாற்றில் நிலைக்கும்.  புதுச்சேரி குடிக்கும் கவிதைக்கும் பெயர்பெற்ற நிலம். பாரதி, அரவிந்தர், பாரதிதாசன், வாணிதாசன், தமிழ் ஒளி, புதுவைச் சிவம் என சிலையாகி நிற்கும் கவிகள் இம்மண்ணில் உண்டு. வீரைவெளியனாரும் காரைக்கால் புனிதவதியாரும் இம்மண்ணின் மாந்தர்கள். வாழும் கவிகள் ஆயிரம்பேர் இருக்கிறார்கள். புதுச்சேரி ஒரு சித்தர் பூமி, இங்குக் குடிப்புகுந்து பத்தாண்டுகள் வாழ்ந்ததால்தான் பாரதி தனது பெரும்படைப்புகளை எழுத முடிந்தது. இதுவொரு பாரதிதாசனூர்; அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழவி பிறக்காத நாளிலும் கவி பிறப்பார். நான் அப்படித்தான் ஓரிரவு ஐப்பசி அடர்மழையில் பிள்ளையாரின் உடைந்தத் தந்தத்தைப் பிடித்தபடி பிறந்ததாக அம்மா சொல்வார்.

படைப்பில் பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து பார்த்தவர் நீங்கள். தமிழில் எழுத ஆசைப்படும் ஒருவனுக்கு வாசிக்கவும் கற்கவும் வேண்டிய அடிப்படைகள் என்று சிலவற்றைச் சொல்ல முடியுமா?

பிறர் எழுத்துக்களை முன்வைத்தே எனது எழுத்துக்களை நான்  அளவிட்டும் இடப்படுத்தியும் கொள்கிறேன். யாரும் சுயம்பு கிடையாது; சுயம்பு எனச் சொல்வது பிரதி ஆக்கத்தின் இயங்கியலுக்கு எதிரானது. நான் திருக்குறள் தொடங்கி அனைத்து செவ்வியல் பிரதிகளையும் பயில்கிறேன். பெரும்பாலும் சமூக எதிர்வினை எழுத்துக்களை நான் படித்து, ஒதுக்கிவிடுகிறேன்; அவை வரலாற்றில் நிலைக்காது. நெஞ்சு பதைபதைக்கும் ஒரு கொடூரச் செயலின் செய்தியை முன்வைத்து என்னால் கவிதை செய்ய இயலாது. அச்செயலின் அரசியல் தத்துவக் கேள்விகள் என்னுள் கிளர்த்தும் சொல்லாடல்களிலிருந்தே படைப்புக்கானக் கூறுகளைத் தொகுத்துக்கொள்கிறேன். கழுத்தில் டயரை மாட்டிக் கொளுத்தப்பட்டு எரியும் யானையோடு செல்ஃபி எடுக்கும் செயலைப்போல எல்லோரும் அவசர அவசரமாகக் கவிதை எழுதி முகநூலில் பதிவிடுகிறார்கள். அவற்றை வாசித்து வெறுமனே கடந்துசெல்ல முடியவில்லை; நானும் அதைப்பற்றி எழுதாததின் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி உள்ளம் நோகிறேன்.  இலக்கியப் படைப்பாளர்கள் ரசவாதிகளாகவேண்டும்; பத்திரிகை செய்தியாளர்களாக உருத்திரியக்கூடாது. நாம் செம்மொழியில் எழுதும் பின்நவீனகாலப் படைப்பாளர்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும். அனைத்தையும் வாசிக்கவேண்டும்; எழுதுவதைத் தள்ளிப்போட வேண்டும். உண்மையில், இதை எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்; பிறருக்குச்  சொல்லவில்லை; போதிப்பதற்கு நான் என்ன கடவுளின் முகவரா?

தமிழில் சமீபத்தில் நாவல் வடிவத்தில் நிறைய சாதனைகள் நடந்திருக்கின்றன. உங்களைக் கவர்ந்த நாவல்கள், நாவலாசிரியர்கள் பற்றிக் கூறுங்கள்.

ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், ரமேஷ் பிரேதன் இவர்களைத்  தொடர்ந்து வாசிக்கிறேன். முன்புபோல நிறைய வாசிக்க இயலவில்லை. உடல்நிலை மோசமாகிக்கொண்டுவருவதால் நேர்ந்த பொறுப்பின்மை. புலியூர் முருகேசன், கரன் கார்க்கி, முத்து நாகு, சு. தமிழ்ச்செல்வி, லக்ஷ்மி சரவணகுமார் இவர்களை வாசிக்கிறேன். பா. வெங்கடேசனையும் சு. வெங்கடேசனையும் யுவன் சந்திரசேகரையும் மொத்தமாக வாசிக்கவேண்டும். ஈழத்தின் இளைய தலைமுறையினருக்காக ஓராண்டை மொத்தமாக ஒதுக்கவேண்டும். இந்தியாவின் கிழக்கு விளிம்பில் நிற்கிறேன்; கால் இடறி கடலில் விழுந்துவிடுவேனோ என்ற பயமும் இருக்கிறது. ஜெயமோகனின் வெண்முரசு நூல்களை அடுத்த பிறவியில்தான் படிக்கவேண்டும்.

ரமேஷ் பிரேதன் தன்னைப் பற்றி வைத்திருக்கும் உருவகிப்பு என்ன? 

வாசலில் நிற்கும் காட்டைப் பிரிந்த கோயில் யானை.

Comments