Skip to main content

தனி தனி குழந்தைகள்



அன்று நண்பகலில் 
கம்பர் தெருவில் இருக்கும் 
அடுக்குமாடிக் குடியிருப்பின் 
முதல் தளத்து வீட்டின் ஜன்னல் கம்பிவலையில் 
தோன்றிய முகம் முதலில் 
ஏதோவொரு நீர்வண்ண ஓவியமாகவே தோன்றியது

ஜன்னல்கள் வழியாக 
உள்ளிருந்து வேடிக்கை பார்க்கும்
முகங்களை 
சமீபமாக 
வீடுகளில் நான் பார்க்கவேயில்லை 
அதனால் அந்தச் சித்திரத்தை 
ஊன்றிப் பார்த்தேன்

கம்பி வலையில் பதித்து 
தெருவை வெறித்துக் குத்திப் பார்த்திருந்த 
கண்கள் 
மூன்று வயது குழந்தையுடையது

உதடு தடித்து கண்கள் பழுத்து 
ஓரங்களும் 
கனவுகளற்று அழுந்தியிருந்த 
அந்த முகத்தில் 
ஆட்டிசம் உருகிக் கொண்டிருக்கிறது

குட்டிப்பையா 
குட்டிப்பாப்பா 
மதி இறுகிய ஊர் இது 
மதி இறுகிய தெரு இது 
நீயும் நானும் 
உள்ளேயும் வெளியேயும் 
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் 
தனி தனி 
குழந்தைகள்.

Comments