Skip to main content

அகச்சேரனின் கவிதைகள் – அமைதி, அடக்கம், ஆழ்தொனி

 


பெயரிலேயே இல்லை எல்லாம். ஆமாம். பெயரில்தான் என்ன இருக்கிறது? ஆமாம். எல்லாப் பெயர்களும் காலிக்குறிப்பான்களும் அல்ல. சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயரைக் கொண்டவனின் மேதமையைபுதுமைப்பித்தன்என்று அவனே புனைந்துகொண்ட துடுக்குத்தனமும் தேய்ந்த உணர்வும் கொண்ட பெயர் தாங்கி அர்த்தம் கொண்டுவிட்டது.

பெயரில் எல்லாம் இருக்கிறது என்று சொல்லமுடியாவிட்டாலும் பெயர்,சிலவேளைகளில் உயிர், உள்ளடக்கம், அதன் உலகம், அதிலிருந்து சொல்ல விரும்பும் செய்தியை ஏற்றுவிடுகிறது.

நகுலன் என்பது வெறும் பெயரா? விக்கிரமாதித்யன் என்பது வெறும் பெயரா? கண்டராதித்தன் வெறும் பெயரா? ராஜமார்த்தாண்டன் வெறும் பெயரா?. ஜயபாஸ்கரன் வெறும் பெயரா? அபி வெறும் பெயரா? தேவதேவன் வெறும் பெயரா? பிரம்மராஜன் வெறும் பெயரா? ஞானக்கூத்தன் வெறும் பெயரா? ஸ்ரீ நேசன் வெறும் பெயர்தானா?

அப்படித்தான். அகச்சேரனும் எனக்கு வெறும் பெயர் அல்ல.

கடந்த 20 ஆண்டுகளில் நவீன தமிழ்க்கவிதை அகப்படுத்திக் கொண்ட விரிவான உள்ளடக்க, வெளிப்பாட்டு வகைமையில் அது இழந்த அபூர்வப்பண்புகள்  அமைதி, அடக்கம், ஆழ்தொனி.

மிகக்குறைவான கவிதைகள் வெளியாகவே வெளிப்பட்டிருந்தாலும் அமைதி, எளிமை, சுயகம்பீரத்தில் தனியாக நிற்கும் கவியுலகத்துக்கும், அதை உருவாக்கியவர் தனக்குப் புனைந்துகொண்டஅகச்சேரன்என்ற பெயருக்கும் தொடர்பு இருப்பதாகவே கருதுகிறேன்.

அகச்சேரனின் ஆளுமையும் கண்களும் எங்கே பதிந்திருக்கின்றன என்பதை உணர்த்துவதற்குதனிமைஎன்ற இந்தக் கவிதையே போதுமானது.

நெருப்பு பழசா என்ன? நெருப்பு புதுசா என்ன?

நெருப்பு புராதனமானது. அகச்சேரனின் கவிதைகளின் தொனியில் அந்தப் புராதனம் உள்ளது.

 தனிமை

 யாரோ பற்றவைத்த நெருப்பு

ஜ்வலிக்கிறது

நெடுஞ்சாலையோரக் கோயில் மாடத்தில்

 

தன்னந்தனியே அடரிருட்டில்

இருப்பது குறித்து

விசனமேதுமில்லை அதனிடம்

 

 

எதிர்பார்ப்புகளின்றி

கவனித்தலின் ஏக்கங்களின்றி

நின்று கனிகிறது

அவ் ஒளிக்கனி.

 

புதுக்கவிதை நவீன கவிதையாக பரிணமித்தபோது பெரும்பாலும் உதிர்த்துவிட்ட குறிப்புத்தன்மையை அகச்சேரன் சுதந்திரமாகத் தக்கவைத்தபடி போய்க் கொண்டிருக்கிறார்.

காட்டில் தீபமா எரியும்? தீபம் என்று சொல்லும்போது வடிவமும் நேர்த்தியும் நளினமும் மென்மையும் சேர்ந்துவிடுகிறது.

அகச்சேரன் பற்றவைப்பது தீபம் அல்ல. வனத்தின் தன்மையைக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலையோரக் கோயில் மாடத்தில் ஜ்வலிக்கும் ஏகாந்த நெருப்பு.

யார் எந்த மனநிலையில், உணர்வில் பற்றவைத்த நெருப்பு அது?

அந்த நெருப்பைப் பற்றவைத்தவன் எங்கிருந்து தீயை எடுத்தான்? இடுப்பு லுங்கி மடிப்புக்குள்ளிருந்தா? அதற்கு சற்றே நெருக்கத்திலும் தொலைவிலும் உள்ள வயிற்றிலிருந்தா?

அவன் பற்றவைத்தது பிரார்த்தனைக்கா? ஏவலுக்கா?

அவனது எத்தனம் இருட்டை அகற்றுவதா? அடரிருட்டைப் பெருக்குவதா?

தன்னந்தனியே யாரும் காணாமல் அடரிருட்டில் இருப்பது குறித்து நின்றெரியும் நெருப்புக்கு ஏன் இல்லை கவலை?

எதிர்பார்ப்புகளின்றி கவனித்தலின் ஏக்கங்களின்றி நின்று கனியும் உலகுதான் அகச்சேரனின் கவிதை உலகம்.

இரைச்சலும் பரபரப்பும் அதிகரித்துவிட்ட மும்முரமான நவீன கவிதை என்ற இந்த ஊரின் மூலையில் நடந்துகொண்டிருக்கும் நண்பனுடனான அந்தரங்க உரையாடலை, பாலத்தின் கீழ் பூத்திருக்கும் பெயர் தெரியாத பூக்களைப் பார்த்துக் குறித்துவைத்துக் கொண்டிருக்கிறது அகச்சேரனின் கவிதைகள்.

000

அகமும் புறமும் இணக்கமாய் இயையும் இடம் அகச்சேரனுடையது. ஓவியனும் என்பதால் எண்ணிக்கை குறைந்த கோடுகளிலேயே சித்தரம் செம்மைப்பட்டு குணம் ஏறிவிடுகிறது.

 

வீறிட்ட ஒலிப்பானுக்குத் துணுக்குற்று நகர்கிறது

 

டீ அடித்த கையோடு வரும் அன்னாசிப்

பழத்தட்டு

 

கோடை காய்த்த உடம்பில் தாவணி சரிய

ஜன்னல் விடாமல் எக்குகிறது

 

வியர்வையில் புரள்கிறது கழுத்துமணி

 

கூச்சம் உடைக்க பருவம் பட்டபாடுகளை

அனாயசமாக மறக்க வைத்திருக்கிறது

வியாபாரம்

 

விழுப்புரம் தாண்டியும் ஜன்னலோடு

பயணிக்கிறது

சாயம்போன ரப்பர் வளையல்.

 

கலாப்ரியாவின் புகழ்பெற்ற இந்த சித்திரக் கவிதை ஏனோ அகச்சேரனின் இந்தக் கவிதையைப் படிக்கும்போது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

 

கொலு வைக்கும் வீடுகளில்/ஒரு குத்து சுண்டல்/அதிகம் கிடைக்கும் என்று

தங்கச்சி பாப்பாக்களை/தூக்க முடியாமல்/தூக்கி வரும்/அக்கா குழந்தைகள்..!

 

அகச்சேரனின் கவிதையில் வரும் யுவதியை உடலற்றவளாகவே வரைந்திருக்கிறார் அகச்சேரன். அவள் வியாபாரத்தைக் காட்டும் அன்னாசிப்பழத்தட்டு கவிதையில் இருக்கிறது. அவளது தாவணி உடை இருக்கிறது. கழுத்துமணி இருக்கிறது. பருவத்தை எண்ணிப் பூரிக்க இயலாது அவளைத் துரத்தும் வாழ்க்கை இருக்கிறது. பேருந்துகளோடு பயணிக்கும் அவள் அணிந்திருக்கும் சாயம்போன ரப்பர் வளையல் இருக்கிறது.

 அவளை வரையாமலேயே துக்கத்தை வரைந்துவிடுகிறார் அபூர்வமாக அகச்சேரன்.

000

ஒரு குறிப்புணர்த்தல், ஒரு சகுனம், ஒரு சித்திரம், ஒரு விபரீத தந்திச் செய்திஇதுவே கவிதையாகிவிடுகிறது அகச்சேரனுக்கு.சிரித்த வண்ணமிருக்கிறாள் போன்ற கவிதையில் அதுவே துணுக்காய் திரிந்தும் விடுகிறது. ‘மகளின் நினைவில் வாசற்படியில்போன்ற கவிதைகளில் மேன்மையும் கொண்டுவிடுகிறது.

 வெளியே மழைபெய்து கொண்டிருக்கிறது

 ஒழுகும் கழிப்பறையில்

சிறுநீர் கழிக்கும் என்முதுகில்

விழுந்த ஒருதுளி

உணர்த்தியது

பெருமழையின் உயிர்மை

 

இப்போது

வெளியே

மழை பெய்துகொண்டிருக்கிறது.

 

இந்தக் கவிதையில் வரும் அனுபவம் பலருக்கும் பொதுவானது. ஆனால், ஒவ்வொரு முறையும் ஒழுகும் கூரையிலிருந்து கழுத்திலோ முதுகிலோ தண்ணீர் விழும்போது, துளைத்து சிலிர்க்கும் அனுபவம் முதலில் கவிதை வழியாக உறையவைக்கப்படுகிறது. சிலீர் என்ற அந்த அனுபவம் தான் பெருமழையின் உயிர்மையை அந்தக் கணத்தில் உணர்த்துகிறது.

 அதற்கு அப்புறம்

 இப்போது மழை சாதாரணமாய் பெய்துகொண்டிருக்கிறது, கவிதைக்கு வெளியே கவிஞனுக்கு வெளியே கூர்ந்த அனுபவத்துக்கு வெளியே.

 000

அகச்சேரனின் அமைதி, அடக்கம், இருட்டு, ஏகாந்தம், நிறைவு எங்கிருந்து கிடைத்ததென்ற செய்தியை புதுமைப்பித்தன் பற்றி எழுதிய கவிதையின் வழியாகத் தருகிறார்.

தமிழில் சமீபத்தில் எழுதப்பட்ட அபூர்வமான கவிதைகளில் ஒன்று இது. புதுமைப்பித்தனின்இருட்டுகவிதைக்கான பதில் இது. 21-ம் நூற்றாண்டு தமிழ் நவீன இலக்கியம் அபரிமிதத்தின் வெளிச்சத்தில், தளுக்கில் மறந்துவிட்ட, தொலைத்துவிட்ட இருட்டை ஞாபகப்படுத்தும் கவிதை இது.

 ஸ்தானம் அல்லது புதுமைப்பித்தன் எழுதிக்கொண்டிருக்கிறார்

 முடிவாக

வேறுவழியின்றி

என் சந்துமுனை விளக்குக் கம்பத்தினடியிலேயே

நின்றுகொள்ள எண்ணினேன்

 

அந்த விளக்கின் ஒளிபரவாதது

 

கடை மறைக்கிறதென இட்லிக்காரக்

கிழவியால் துரத்தி அடிக்கப்பட்டேன்

போய் நின்றதுமே

 

உச்சியில் அமர்ந்து

கவிழ்ந்த வெளிச்சத்தின்

பின்மண்டையில் கால்மிதித்தபடி

 

இருளில் புதுமைப்பித்தன்

எழுதிக் கொண்டிருந்தார்.

 

அகச்சேரன் வரைந்திருக்கும் ஓவியம் வழியாக காலபைரவனைப் போல கம்பீரமாக எழுகிறார் புதுமைப்பித்தன்.

 

000

அகச்சேரனின்அம்மா விழுந்தாள்என்னை தனிப்பட்ட வகையில் பாதித்த கவிதைகளில் ஒன்று. இதைப்பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.

 

அம்மா விழுந்தாள்

அம்மா விழுந்தாள்

நன்றாகவே பின்கட்டிலிருந்து

தேநீர்த் தட்டோடு நடந்துவந்தவள்

வீட்டின் சகல

ஜடங்களும் உயிர்களும் பார்க்க

இடறி

 

தூக்க எத்தனிக்காத

என் கற்கைகளை நண்பனிடம்

குறைப்பட்டேன்

 

வீட்டில் மறைந்திருந்த

பாழுங்கிணற்றை அறிந்த பீதியில்

இன்றைய தேநீரோடு

அம்மா நடந்துவருகிறாள்

நான் என் கைகளை கைகளை.

அவரவர்க்குத் தெரிந்த தனி அம்மா ஒருத்தி இருக்கிறாள். தனி அம்மாக்களையெல்லாம் ஒரு இழையில் இணைக்கும் பொது அம்மா ஒருத்தியும் இருக்கிறாள். இந்த தனி அம்மாவுக்கும் பொது அம்மா என்ற பேருருவத்துக்கும் இடையே உள்ளதுதான் நாம் அவளைத் தொட இயலாத பாழ்குழி போல.

 

எப்படி ஏன் அம்மாவைத் தொடமுடியாமல் ஆனோம்?

 

அதை வரலாற்றுக் கேள்வியாக மட்டும் சுருக்கிவிடமுடியுமா?

 

வலிமிக்க அந்தப் புதிர்தான் என்ன?

 

வீடுகளில் தோன்றிவிட்ட பாழுங்கிணறுகளை நாம் மூட இயலுமா?

 அகச்சேரன் இப்படியான பல புதிர்மிக்க கேள்விகளை எழுப்ப சாத்தியமுள்ள ஒரு உலகத்தைகற்கைதொகுதியின் வழியாக கட்டி எழுப்புகிறார். சால்ட் பதிப்பகம் அகச்சேரன் கவிதைகளை நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது.

 

அகச்சேரனுக்கு எனது வாழ்த்து.

(நன்றி : திணைகள் இணைய இதழ்)

Comments