குடும்ப இடுகாடு
வெகுகாலத்துக்கு முன்னால்
ரௌத்திர ஆண்கள்
சீற்றம்கொண்ட
பெண்கள்
அருகருகே
புதைக்கப்பட்டனர்.
அவர்கள் விட்ட
சாபங்களும்
நெரிக்கப்பட்ட கதறல்களும்
மரங்களை
இன்றும்
நடுங்கவைக்கின்றன.
எனது தூக்குமேடை எங்கே?
ஆக்கிரமிக்கப்பட்ட
ஒரு நகரத்தில்
ஒரு குழந்தையைப்
போல
ஜன்னலுக்கு
வெளியே
பார்த்துக்கொண்டிருந்தேன்
இடுகாட்டைப்
போன்ற நிசப்தம்.
காற்று வீசிய நாள்
இரண்டு ஜோடி உள்ளாடைகள்
ஒன்று வெள்ளை
இன்னொன்று ரோஜா
நிறம்
துணிக்கொடியில்
மேலும் கீழுமாக
ஆடிப் பறக்கின்றன
தங்கள் உக்கிரக் காதலை
ஒட்டுமொத்த
உலகத்துக்கும் உரைத்தபடி.
இரவு எண்ணங்கள்
ஒளி அவற்றை அச்சமூட்டுகிறது
இருட்டும்கூட
அவை நமது கட்டிலை
நோக்கி
ஊர்ந்துவருகின்றன
பேசுவதற்கு
அல்ல,
கிசுகிசுக்க.
பிணவறையில்
ஒருவர் செய்வதைப்
போன்று.
காற்று ஓய்ந்துவிட்டது
எனது குட்டிப்படகே,
பத்திரமாய் இரு.
பார்வைக்கு
எட்டும் தூரத்தில்
கரை இல்லை.
Comments