Skip to main content

அஞ்சல் அலுவலகம் இல்லாத காஷ்மீர்



காஷ்மீரில் சமீபத்தில் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் அனுபவிக்கும் சிறை நிலைமைளோடு, அதுகுறித்து பிராந்திய ஊடகங்களில் நிலவும் மௌனம் கூடுதலாகப் பயங்கரமானது. தொலைபேசி, அலைபேசிச் செய்தித் தொடர்புகள் முதல் விரைவு இணையச் சேவை வரை துண்டிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனைவரது மறதிக்குள்ளும் செலுத்த வற்புறுத்தப்படும் பிரதேசமாக காஷ்மீர் மாறியிருக்கிறது.

ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து துண்டிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நெருங்குவதை முன்னிட்டு, தொடர்ந்து படித்துவரும் செய்திகளின் வழியாக ஏற்பட்ட படபடப்பின் வழியாகத் தான் ஆஹா சாகித் அலியின் ‘தி கன்ட்ரி வித்அவுட் போஸ்ட் ஆபிஸ்’ கவிதைகளை நெருங்கினேன்.

கவிஞர் ந. ஜயபாஸ்கரன் வழியாக எனக்கு அறிமுகமானவர் காஷ்மீரக் கவிஞர் ஆஹா சாகித் அலி. சென்ற ஆண்டில் கவிஞரும் திரைப்பட இயக்குனரும் நண்பருமான லீனா மணிமேகலை, அரிய பரிசாக அனுப்பி வைத்த  ‘தி கன்ட்ரி வித்அவுட் அ போஸ்ட் ஆபிஸ்’ புத்தகம்  எனது அலமாரியில் பத்திரமாக இருந்தது. 

‘தி கன்ட்ரி வித்அவுட் அ போஸ்ட் ஆபிஸ்’ கவிதைத் தொடர் முதலில் ‘காஷ்மீர் வித்அவுட் அ போஸ்ட் ஆபிஸ்’ என்ற பெயரில் தான் முதலில் எழுதப்பட்டது. இந்தக் கவிதை, ஆஹா சாகித் அலியின் பால்ய கால நண்பர் இர்பான் ஹசனிடமிருந்து வந்த கடிதத்தின் தாக்கத்திலிருந்து எழுதப்பட்டது.
ஸ்ரீ நகரில் உள்ள தபால் நிலையத்தில் குவியலாகக் கிடந்த பட்டுவாடா செய்யப்படாத கடிதங்களின் குவியலில் அலியின் தந்தைக்கும், இர்பான் ஹசனுக்கும் அலி எழுதிய கடிதங்களைப் பார்த்த விவரத்தைத் தான் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.

மூடப்பட்ட தகவல்தொடர்பைப் படிமமாக்கி காஷ்மீரியக் கவிஞர் ஆஹா சாகித் அலி எழுதிய புகழ்பெற்ற கவிதைத் தொடரின் பெயர் ‘அஞ்சல் நிலையம் இல்லாத நாடு’ (தி கன்ட்ரி வித்அவுட் அ போஸ்ட் ஆபிஸ்).  1990-ல் ஜம்மு-காஷ்மீரில் நிலவிய சூழலைப் பின்னணியாக வைத்து அவர் எழுதிய கவிதை இன்று மேலும் பொருளுள்ளதாக இருக்கிறது. செய்தி பரப்புவதற்கான ஊடகத்தில்தான் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, செய்தியைச் சொல்ல முடியாத, செய்திகளைக் கொண்டுசேர்க்க முடியாத, செய்தி யாருக்கும் போய்ச்சேராத நிலைமையைப் பொறுத்தவரை மாற்றமே இல்லை.

செய்தி காதலைச் சொல்கிறது. செய்தி நட்பைச் சொல்கிறது. செய்தி உறவைச் சொல்கிறது. செய்தி மரணத்தைச் சொல்கிறது. செய்தி சோகத்தையும் சந்தோஷத்தையும் சொல்கிறது. செய்தி முரண்பாட்டைச் சொல்கிறது. செய்தி எதிர்ப்பைச் சொல்கிறது. செய்தி கண்டனத்தைச் சொல்கிறது. செய்தி ஒரு கொடும் யதார்த்தத்தைச் சொல்கிறது. செய்தி ஏக்கத்தையும் தனிமையையும் சொல்கிறது.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்துபோன காஷ்மீரியக் கவிஞரான ஆஹா சாஹித் அலியின் கவிதையில் அவரது தாயகத்தில் என்ன நடக்கிறது என்று பரிதவிக்கும் இதயம் தெரிகிறது. உலகச் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாகத் தெரியும் ஒரு நிலப்பரப்பு, அரசியல் காரணங்களால் கோரப்படுத்தப்பட்டு அரசுப் பயங்கரவாதமும் தீவிரவாதமும் சேர்ந்து உருவாக்கிய அழிவின் துர்சித்திரங்களைக் கொண்டு இந்தக் கவிதை படைக்கப்பட்டுள்ளது.


எங்கே மினாரெட் புதைக்கப்பட்டிருக்கிறதோ
இந்த நாட்டுக்குத் திரும்பவும் வருகிறேன்
களிமண் விளக்குகளின் திரிகளை
கடுகெண்ணைக்குள் யாரோ ஒருவர் முக்கி நனைக்கிறார்
கிரகங்களின் மீது கீறப்பட்ட செய்திகளைப் படிப்பதற்காக
ஒவ்வொரு இரவும் அவர் மினாரெட்டின் படிகளில் ஏறுகிறார்.

ஜம்மு - காஷ்மீரின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றான மினாரெட்டும், அதன் அன்றாட அத்தியாவசிய மனிதர்களில் ஒருவரான தொழுகைக்கு அழைப்பவரும் வருகிறார்கள். பூமியில் செய்திகளே மறுக்கப்பட்ட நிலையில், கிரகங்களின் மீது கீறப்பட்ட எழுத்துகளைப் படித்து ஆருடம் தெரிந்துகொள்வதுதானே நமது நியதியும் நம்பிக்கையும்.

அடுத்தடுத்த வரிகளில் கவிதை காஷ்மீர் இன்றும் எதிர்கொள்ளும் யதார்த்தத்தில் இறங்கிவிடுகிறது. தொழுகைக்கு அழைக்கும் மனிதர், தபால் அதிகாரியாக ஆகிறார்.

புதைக்கப்பட்ட அல்லது 
காலிசெய்யப்பட்ட வீடுகளின் முகவரிக்கு
எழுதப்பட்ட கடிதங்களின் குவியலிலிருந்து கடிதங்களை எடுத்து
அவனது விரல்ரேகைகள் ஸ்டாம்ப் இடப்படாத கடிதங்களை 
ரத்துசெய்கிறது.

கவிதையில் அடுத்து, வீடுகளைக் காலிசெய்து சமவெளிக்கு ஓடிப்போன பண்டிதர்கள் வருகின்றனர். அடுத்து, வீடுகளுக்கு ராணுவத்தினர் தீவைக்கும் சம்பவம் விவரிக்கப்படுகிறது. இலைகளைப் போல வீடுகள் எரிகின்றன. பண்டிதர்களின் வீடுகளும் சரி, எங்களின் வீடுகளும் சரி… ஒவ்வொரு நாளும் புதைக்கப்படுகின்றன. தாங்கள் இன்னமும் விசுவாசத்துடன் இருப்பதால் தங்கள் புதைக்கப்பட்ட வீடுகளுக்கு மலர்வளையம் வைக்கிறோம். தீயின் சிறையில் அவர்கள் இருக்கிறார்கள். வெளியே எரியும் வெளிச்சம். உள்ளே தீக்குள் இருப்பவர்களையோ குகை இருட்டாகச் சூழ்கிறது என்கிறார்.

‘அஞ்சல் நிலையம் இல்லாத நாடு’ கவிதைத் தொடரின் நான்காவதும் கடைசியுமான கவிதையில், மினாரெட் என்ற படிமம் எதைக் குறிக்கிறது என்பது தெளிவாகிவிடுகிறது.

இதுவொரு சொற்களின் சன்னிதி
எனக்கு எழுதிய கடிதங்கள் இங்கே கிடைக்கும். நான் உங்களுக்கு எழுதிய கடிதமும்
சீக்கிரம் வாருங்கள் 
தொலைக்கப்பட்ட இந்த உறைகளைக் கிழித்துத் திறக்க 

சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க முடியாத கடிதங்களைப் படிக்கத் தொடங்குகிறான் அவன்.

நான் அவற்றை வாசிக்கிறேன், காதலர்களின் கடிதங்கள், பைத்தியம் 
பிடித்தவர்களின் கடிதங்கள்
நான் அவனுக்கு எழுதிப் பதில்களே வராத கடிதத்தையும்
நான் விளக்குகளை ஏற்றுகிறேன், எனது பதில்களை அனுப்புகிறேன்,
பிரார்த்தனைக்கான அழைப்பையும் கண்டங்களாகப் பரவியுள்ள
செவிட்டு உலகங்களுக்கு
எனது புலம்பல், மரணம் கிட்டத்தட்ட அருகில் இருக்கும் நிலையில் 
உலகத்துக்கு எழுதப்பட்டு இறந்துபோன கடிதங்களைப் போல எனது 
அழுகையும் புலம்பலும் உள்ளது

இதை எழுதும்போது மழைபெய்கிறது. என்னிடம் பிரார்த்தனை இல்லை, வெறும் கூச்சல்தான் உள்ளது என்று மறுகுகிறார். சிறையில் நொறுங்கும் அழுகையோலங்கள்தான் இந்தக் கடிதங்கள்.



இந்த நாளில் ஆஹா சாகித் அலியின் ‘ஒரு அஞ்சல் நிலையம் கூட இல்லாத நாடு’ கவிதைகளோடு இருப்பதைத் தவிர, காலியாக்கப்பட்ட வீடுகளின் முகவரிகளுக்கு எழுதப்பட்ட இந்தக் கடிதங்களைப் படிப்பவனைப் போலப் படித்துத் துக்கத்தை அனுஷ்டிப்பதைத் தவிர, வேறொன்றும் செய்வதற்கு திராணியிலேன்.

அஞ்சலும் செய்தியும் வெறும் தொழில்நுட்பம் மட்டும்தானா? அது நாகரிகத்தின் சின்னம் இல்லையா? இத்தனை நவீன வசதிகளுடன் நாம் எதை இழந்து நிற்கிறோம்? சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கைக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து நாம் அந்த மக்களுக்குக் கொடுத்த பரிசு இதுதானா? இதுதான் நாகரிகமா?

பைத்திய இதயமே, தைரியமாய் இரு என்று முடிக்கிறார் கவிஞர்! தைரியமாகத் தான் இருக்கவேண்டும், இந்தக் கொடுங்காலத்தில்.

Comments

shabda said…
அன்புடனும் தைரியத்துடனும்
Saravana Raja said…
நூல் அறிமுகத்திற்கு நன்றி.

//என்னிடம் பிரார்த்தனை இல்லை, வெறும் கூச்சல்தான் உள்ளது// இதனை விட வேறென்ன சொல்ல?