அகங்கை கொண்டு மூணுபிடி புறங்கை கொண்டு மூணுபிடி அருணாசலத்தாச்சி பாடத் தொடங்க காவேரிப் பெரியம்மாவின் மடியில் உறங்கிக்கொண்டிருந்த நான் திடுமென்று விழித்தேன். கண் திறந்துபார்த்தால் கண் அவிந்துபோய்விடுமென்று சொல்லித்தான் அம்மா அங்கே அழைத்துவந்து படுக்க வைத்திருந்தாள். அப்பாவோ இரவுப்பணிக்குப் போயிருந்தார். மார்புக்குக் குறுக்காக சேலை ஒன்றை மட்டுமே சுற்றி கூடத்தில் அலையும் எங்கள் வளவு வீடுகளைச் சேர்ந்த அத்தைகள். அம்மா பின்கட்டிலிருந்து குளித்த தலையுடன் பாவாடையை மேலேற்றிக் கட்டிக்கொண்டு நுழைந்தாள். சில்வர் பாத்திரத்தில் வெள்ளைக் கொழுக்கட்டைகள் குழு குழுவாக அமர்ந்திருந்த பெண்களால் உருவங்களாகத் தட்டி உருட்டி அடுக்கப்பட்டன. நோஞ்சலான கிழவிகள் கிழவர்கள் கை கால் மண்டையோடு பாடை அகல் விளக்கு எனக்குத் தெரிந்த உருவங்கள் தெரியாத உருவங்களும் கொழுக்கட்டைகளாக அவரவர் சட்டிகளில் விழுந்துகொண்டிருந்தன. சூடன், சாம்பிராணி புகையில் பளீர் குழல் விளக்கு வெளிச்சத்தில் ஆவிகளாய் என் அம்மாவும் அத்தைகளும் மறைந்து இருந்து உருக்கள் மாறித் தோன்றிய அந்த ஔவையார் நோன்பு நடுநிசியை நிஜம்தானென்று இன்று ருசுப்படுத்த அருணாசலத்தாச்ச...