(ஈயூனிஸ் டி சௌசா சமகால இந்திய ஆங்கிலக் கவிஞர்களில், தன் வாழ்நாள் காலத்திலேயே கவனிப்புக்கும் விமர்சனப் பார்வைக்கும் உள்ளானவர். தனி அடையாளத்தையும் உலகையும் கொண்ட கவிஞர். கோவாவைச் சேர்ந்த கத்தோலிக்கக் குடும்பத்தில் 1940-இல் பிறந்து மும்பையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, தனியாகவே வாழ்ந்து 2017-இல் மறைந்தவர். சார்லஸ் பூக்கோவ்ஸ்கியின் அப்பட்டமான விமர்சனத் தன்மை, மேரி ஆலிவரின் ஈரத்தன்மையோடு சிறிய கவிதைகளை எழுதியவர். பூனைகள், தெரு நாய்கள், பருந்து, சிறுத்தை, காகம், கிளி என பிராணிகளும் பறவைகளும் ஆண் பால், பெண் பாலாகவே பிரித்து இவர் கவிதைகளில் சுட்டப்படுகின்றன. மூன்று வயதில் தந்தையை இழந்த ஈயுனிஸ் டி சௌஸாவை அந்த மரணம் மிகவும் பாதித்துள்ளது. சுயசரிதைத் தன்மை கொண்ட இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். தோழிகள், தோழர்கள், கணவர்கள், காதலர்கள் கதாபாத்திரங்களாக நேராகவும் மறைமுகமாகவும் உலவுகின்றனர். மற்றமையை, மற்ற உயிர்களுடனான பிணைப்பைக் கொண்டாடுவதோடு மரணத்தையும் விசாரித்தபடி இருக்கும் கவிதைகள் இவருடையவை.)
காதலர்களின் மற்றமையோடு
சமாளித்துப் போகக் கற்றுக்கொள்வதற்கு
பூனைகளை வைத்திருங்கள்.
மற்றமை என்பது எப்போதும் புறக்கணிப்பாக
இருக்க வேண்டியதில்லை.
பூனைகள் தேவையான வேளையில்
கழிக்கும் தட்டுகளுக்கு வருகின்றன..
பூனைகள் ஜன்னலுக்கு வெளியிலுள்ள
எதிரிகளிடம்
மூர்க்கம் கொள்வதில்லை.
பூனைகளின்
மகத்தான பச்சைக் கண்களிலுள்ள
சாசுவத விந்தை
தனிமையில் சாக
உங்களுக்குக் கற்றுத்தரும்.
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments