பாலாஜி மந்திர்
கருவறைக்குள் அனுமதிக்கப்படாத
பிஸ்மில்லா கானின்
பிராணம்
தினசரி அபிஷேகம் செய்யப்படும்
கங்கை நீரைப்போல
மூலவரைத் தினசரி தீண்டியது
ஒரு காலம்.
யுகம் யுகமாய்
மூலத்தோடு
இணைவதற்கு ஏங்கிய
யாசகர்களின் இறைஞ்சலையும்
கங்கையின் பிரவாகங்களையும் சேர்த்துக் கொண்ட
உஸ்தாதின் ஷெனாய்,
புதிதாக எழுப்பப்பட்ட
காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்துக்குள்
சிறைப்பட்டு குனிந்து நிற்கும்
ஞானவாபி மசூதியின்
நீரூற்றுக்குள்
கழுத்து நெரிக்கப்பட்டு
புதைக்கப்பட்டுள்ளது.
000
உஸ்தாதின்
ஷெனாய் துளைகளை
காசிக்கு சமீபத்தில் வந்த
புழுதிப் புயல்
மூடிவிட்டது.
000
இளஞ்சிவப்பு படர்ந்த
புதிய காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்துக்குள்
கம்பிவேலிகளால் நெரிக்கப்பட்டு
காயப்பட்ட உடலென நின்றிருக்கும்
ஞானவாபி மசூதியின் மேல்
எப்போதும்
ஒரு கருப்புச் சூரியன்.
000
மூன்றடுக்குக் காவலர் சோதனைகளுக்குப் பிறகு
கனத்த மௌனத்துடன்
ஞானவாபி மசூதிக்குள்
நுழைகிறார்கள்
வழக்கமாய் தொழுகைக்கு வருபவர்கள்.
வசூகானாவில்
உடலைக் கழுவிக்கொண்டு
ஆகாயத்தை அவர்கள்
தன்னிச்சையாக வெறிக்கிறார்கள்.
லிங்கத்தைத் தேடி சர்ச்சையின் மையமான
நீர்த்தொட்டி
அறியாது
புறாக்கள் வரவே வராத காரணம்.
000
’பாம்பும் கயிறும்’ நாவலில்
பனாரஸின் பரத்தைகள்
திடகாத்திரமான அங்கங்களுக்காக
பார்வதியை காலம்காலமாகப் பிரார்த்திப்பதாக
ஒரு கதை வருகிறது.
இன்னொரு முனையிலோ
கங்கை படித்துறைகளில்
அங்கங்கள் நெருப்பில் சீறி வெடித்து
அவிந்து அமையும் காட்சியையும்
அடுத்தபடியாக நாவலாசிரியன் காட்டுகிறான்.
“மரணம் வேட்கையை வசீகர எழில் கொண்டதாக்குகிறது
மரணம் ஆசைநாயகியை தவிர்க்கமுடியாதவளாக்கிவிடுகிறது”
ராஜா ராவின் சொற்கள் உண்மைதான்.
000
காலபைரவரை நெருங்கும்
முடிவுறாத வரிசையில்
தலைதலையாக
சுற்றுத் தெருக்களில்
நின்றுகொண்டிருந்தோம்..
உதட்டுச்சாயம் சிவப்பாகத் தீட்டிய
வடக்கத்திய இளம்பெண்
சாணி ஈரத்தில் நின்றபடி
சுயப்படங்களை செல்பேசியில்
எடுத்துத் தள்ளி
பரப்பிக்கொண்டிருந்தாள்.
பைரவ அஷ்டகம் ஒலிக்க
நாங்கள் நின்றிருந்த வரிசை
நெருங்க நெருங்க
ஏதோ இனிப்புப் பண்டம் சாப்பிட வேண்டி
என் வாய்க்கு
அடங்காத தவிப்பு.
யார்தான் கேட்கிறார்கள் அத்தனை இனிப்பு?
000
குரு ராமானந்தரின்
பாதம் தலையில்பட்டு
ராமபக்தனான
ஏழை இஸ்லாமிய நெசவாளி
கபீர்
ஒரு நினைவு
காலை நடைதிறப்பின் போது
விஷ்ணு முதலில் பார்த்த
முகங்களில் ஒன்றான
பிஸ்மில்லா கான்
சமீபத்தில்
இன்னொரு நினைவு.
000
சத்தியத்தையும் சேர்த்துக்கொண்டு
மரணம் எரிவதால்தானோ
என்னவோ
அரிச்சந்திரா படித்துறை மயானம்
கரைமேட்டில் அமைந்திருந்தாலும்
அதலபாதாளத்தில்
தோற்றம் காட்டுகிறது.
வெறுமனே கரையைக் கடக்க அருகே
காத்திருக்கிறார்கள் யாத்ரிகர்கள்.
வேறு வேறு ஜோதிகள்
வேறு வேறு தீக்கள்
நீரில், கரைகளில், பருவங்களில்
சடலங்களில்
எரிந்தெரிந்து அவிகின்றன.
பெயர் தெரியாத ஒரு மகன்
தன் தந்தையின்
தலையில்
எரியும் கற்பூரத்தை இடுகிறான்.
புராதனத்திலிருந்து பார்த்துப் பார்த்து
வெடிப்புகள் கண்ட பழுப்புச் சுவர்களில்
எழுதப்படுகிறது
இன்னொரு கரும்பாழின் சரிதம்.
முற்றாத பச்சை மூங்கில்களைக் கொண்டு
ஏணிபோல கட்டப்பட்ட
பாடைகள்
அரிச்சந்தரன் படித்துறைக்கு மேலே
அடுக்கப்பட்டு காத்திருக்கின்றன.
தங்கியிருந்த
சத்திரத்துக்கு மீண்டபின்னும்
என் முகத்தில் கனன்று எரிந்துகொண்டிருக்கிறது
தீ.
000
வாரணாசியின் கங்கை
படித்துறைகள்
கோயில்கள்
புறநகரின் வயல்கள்
வீடுகள்
எல்லாவற்றையும் சிறுசதுரங்களாக
அடுத்து கோடாய் புள்ளியாய்
ஆக்கி
விமானம் உயர்ந்தபோது
குட்டித்தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.
ரொம்ப காலத்துக்குப் பின்னர்
டேய் மணி
என்று வாத்சல்யமாய்
ஓர் குரல் எங்கோ ஆழத்திலிருந்து.
சென்ற ஆண்டு மே மாதம்
திருநெல்வேலி சிந்துபூந்துறை
மின்மயானத்தில்
எரித்து ஆற்றில் விட்ட
என் அப்பாவின் அதே குரல்
கலைந்து எழுந்தேன்.
000
பூர்வ நினைவுகள்
அழிக்கப்பட்டு
ஆயிரக்கணக்கான
பரிவார தெய்வங்களின் வீடுகள்
இடிக்கப்பட்டு
அழுக்குப்படியாத இளஞ்சிவப்பில்
அச்சமூட்டும் திலகத்தை அணிந்திருப்பது போல
நிற்கிறது
காசி விஸ்வநாதர் வளாகம்.
அதன் புதிய நினைவில்
காசியின்
பழைய நினைவுகளுக்கும்
சேர்த்து
மணிகர்ணிகாவில்
தர்ப்பணம் அளிக்கிறேன்.
காசி
காசி
காசி.
காசி.
(பிஸ்மில்லா கானின் வாழ்க்கையில் ஒரு நாளை கதையாகவும் வாரணாசியை கவிதைகளாகவும் எழுதிய கவிஞர் சுகுமாரனுக்கு)
Comments