Skip to main content

யவனிகா ஸ்ரீராம் சுமக்கும் ஆதிப்பொறுப்பு


பொய் சொல்வதால் ஒருவருக்கு அனுகூலம் கிடைக்கும்போது ஒருவர் ஏன் உண்மையைச் சொல்ல வேண்டும்?

-விட்கென்ஸ்டீனை தத்துவம் நோக்கிச் சிறுவயதில் தூண்டிய கேள்வி இது.


கற்றறிந்தவருக்கும் அறிவுஜீவிக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தையவர் வர்க்க உணர்வு கொண்டவர். தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர். பிந்தையவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல் ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர்.

- பாபா சாகேப் அம்பேத்கர்


கொஞ்சம் நக்கித் தின்னக் கிடைத்தால் போதும்

அன்றே முடிகிறது இந்தியப் புரட்சி

- குஞ்சுண்ணியின் கவிதை

சமகாலச் சிறுகதைக் கலைஞர்களில் முன்னணி ஆசிரியர்களில் ஒருவர். எனது நண்பர். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு நாவல் எழுதும் முயற்சியில் இருப்பதாகச் சொன்னார். குறைந்தபட்சம் நாவலொன்றை எழுதினால்தான் சாகித்ய அகாதமிக்கு தகுதியாவது பெறமுடியுமென்றார். சாகித்ய அகாதமி வாங்கிவிட்டால், தமிழ்நாடு அரசு தரும் வீடு உறுதியாகிவிடும் என்றார். சாகித்ய அகாதமி கிடைப்பதற்கு நாவல் எழுதினால் மட்டும் போதுமா? இன்னும் பல வயதான எழுத்தாளர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். எழுத்தாளர்களாக இருப்பதோடு அதிகாரத் தாழ்வாரங்களில் நுழைந்து ஆள்பிடிக்கும் வல்லமையும் வேண்டாமா? உங்களுக்கு அதுபோன்ற திறமைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே என்று கேட்டேன். அவர் என் நண்பர். நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நாம் ஒரு முயற்சியை நம் குடும்பத்துக்காகச் செய்யவில்லையென்று இருக்கக்கூடாதல்லவா! என தனது நாவல் முயற்சியில் சற்றும் தளராத அவர் உறுதியாகக் கூறினார். நான் பைக்கில் | அவரிடம் உரையாடிக் கொண்டே சென்றதால், சிரித்தது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நிச்சயமாக நீங்கள் முயற்சி செய்துதான் ஆகவேண்டுமென்று சொல்லி அவர் இறங்கவேண்டிய இடத்தில் இறக்கிவிட்டேன்.

தமிழ் நவீன இலக்கியப் பரப்பே விளிம்புநிலைப் பகுதியாக, வெகுமக்களின் ஓர்மையில் கூட வராத பகுதியாக இருந்த நிலை 21 ஆம் நூற்றாண்டில் சற்றே மாறியிருக்கிறது. இதற்கு| எனது சிறுகதை நண்பருக்கு வந்திருக்கும் நம்பிக்கை ஓர் உதாரணம். நாவல், சிறுகதை, வரலாறு, ஆய்வு எழுத்துகளுக்கு வந்திருக்கும் சிறிய வெளிச்சம் மகிழ்ச்சியைத் தருகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செம்மையான கவிதைகளும் இலக்கணமும் எழுதப்பட்ட மொழி என்று இருந்தபோதும் நவீன கவிதை இன்னும், தமிழ்ச்சமூகத்தில் இருட்டிலேயே உள்ளது. சாகித்ய அகாதமி விருது கௌரவம் கடைசியாக கவிதைக்கு, குறிப்பாக சரியான கவிஞனுக்குத் தரப்பட்டு தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஈரோடு தமிழன்பனுக்கும், மு. மேத்தாவுக்கும், வைரமுத்துவுக்கும் தரப்பட்டது கவிஞர்களுக்கானது என்று எந்த வகையிலும் சொல்ல இயலாது. வானம்பாடி| இலக்கியவாதிகளிலேயே நேர்மையும் ஒப்புநோக்க கவித்துவமும் கொண்ட இன்குலாப்புக்கு, மரணத்துக்குப் பிறகே சாகித்ய அகாதமி வழங்கப்பட்டது. அந்த அங்கீகாரத்தை அவர்கள் குடும்பத்தினர் மறுத்து, இன்குலாப்புக்கு அவர்கள் கூடுதல் கௌரவத்தை அளித்துவிட்டனர். 

பிரமிள், பசுவய்யா, எஸ். வைத்தீஸ்வரன், சி.மணி, ஞானக்கூத்தன் துவங்கி அபி வரை சிறந்த கவிஞர்கள் யாரையும் சாகித்ய அகாதமி தீண்டவேயில்லை. மார்க்சியப் பின்னணியைக் கொண்ட கல்வித்துறையாளர்களான பேராசிரியர் பாலா போன்றவர்களும் சிற்பி போன்ற மார்க்சிய அடையாளத்தை வேஷமாகக் கொண்ட பண்பாட்டு கமிசார்களும் சுந்தர ராமசாமி போன்ற படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாதமி பரிசு சென்று சேரவே கூடாது என்று தீர்க்கமாக நின்று செய்த நடவடிக்கைகளுக்கும், மார்க்சியம் இன்று சின்னஞ்சிறு தாக்கங்களைக்கூட உருவாக்கும் அறிவியக்கமாக, அரசியல் இயக்கமாக இல்லாமல் தேய்ந்ததற்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. இடதுசாரிப் பின்னணியிலிருந்து வந்த அருமையான கலைஞர்களான இராஜேந்திர சோழன், கந்தர்வன் ஆகியோர் இன்றைய இடதுசாரிகளிடம் பரிச்சயமாக இருக்கிறார்களா? வாசிப்புக்காவது உள்ளாகிறார்களா? அதுவும் சந்தேகமே. 

மக்கள் மக்கள் என்று சொல்லிக் கலையை விலக்கியவர்கள், மக்களிடமிருந்தும் விலகி|முகநூல் வழியாக, ட்விட்டர் வழியாக உயிர்தரிக்கும் தற்காலக் கோலம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியது. கடந்த இருபது ஆண்டுகளில் மைய நீரோட்டத்திலும் சிறுபத்திரிகைத் தளத்திலும் படிப்படியாக நடைபெற்ற அரசியல் நீக்கம், இந்துத்துவ கருத்தியல் ஆதிக்கப் போக்குகளுக்கு வசதியாக வழிவிட்டு அமரவைத்ததில் மார்க்சியத்துக்கும் பங்குண்டு. விவசாயிகள் போராட்டங்களிலோ, தலித்கள், சிறுபான்மையினர் வாழ்வுரிமைப் போராட்டங்களிலோ மார்க்சியர்கள் பார்வைக்குக் கூட புலப்படாமல்போனது கடந்த 10 ஆண்டுகளில் கவனிக்கத்தக்கது.

சிற்பிகளும், தமிழவன்களும், பாலாக்களும் குழு நலன், கருத்தியல் வெறுப்புகள் சார்ந்து தாங்கள் பொறுப்பு வகித்த சாகித்ய அகாதமி போன்ற அமைப்புகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளை, அதே பாணியில் தீவிரமாக மாலன் போன்ற வலதுசாரிகள் தொடர்கிறார்கள். ஆத்மாநாம், அவர் காலத்தில் எழுதியிருந்தாலும், இந்தக் கவிதை இப்போதைய நிலைமைகளுக்கு கூடுதலாகப் பொருந்திப் போவது. 

கண்களில் நீர் தளும்ப இதைச் சொல்கிறேன்

இருபதாம் நூற்றாண்டு செத்துவிட்டது

சிந்தனையாளர் சிறுகுழுக்களாயினர்

கொள்கைகளை

கோஷ வெறியேற்றி

ஊர்வலம் வந்தனர் தலைவர்கள்

மனச் சீரழிவே கலையாகத் துவங்கிற்று

மெல்லக் கொல்லும் நஞ்சை

உணவாய்ப் புசித்தனர்

எளிய மக்கள்

புரட்சி போராட்டம்

எனும் வார்த்தைகளிலினின்று

அந்நியமாயினர்

இருப்பை உணராது

இறப்புக்காய்த் தவம் புரிகின்றனர்

என் ஸக மனிதர்கள்

இந்தத் துக்கத்திலும்

என் நம்பிக்கை

நாளை நமதே.

- ஆத்மாநாம்


இந்தச் சூழலில் மார்க்சியத்தைப் பின்னணியாகக் கொண்டு, சோவியத் உடைவுக்குப் பிறகு ஏற்பட்ட உலகளாவிய அரசியல், கருத்துநிலை மாற்றங்களுக்கு முகம் கொடுத்து, முற்றிலும் வேறான உள்ளடக்கத்துக்குள் சென்று, சமூக, பொருளாதார பண்பாட்டு அலகாக உலகம் மாறும் கோலத்தை, புதிய அழகியலுடன், கவிதைகளை எழுதிய நவீன குறிசொல்லி யவனிகா ஸ்ரீராம். ஆத்மாநாமைப் பற்றி பிரம்மராஜன் சொல்லும் இலக்கணப்படி, தமிழில் சமயவேல், மலைச்சாமி எனத் தொடங்கிய மரபில் committed poetry என்னும் சமூகப் பொறுப்புடைய கவிஞர்கள் வகையினத்தின் முதன்மைக் கவிஞன் இன்று யவனிகா ஸ்ரீராம் தான்.

தமிழ் மார்க்சியர்கள் இலக்கியம், நுண்கலைகள் மீது என்றுமே கூரிய கவனத்தோடு இருந்ததில்லை. 

முக்கியமாக சமகாலக் கலைஞர்களை அவமதித்தும் இருட்டில் ஆழ்த்தியும் வைக்கவே பெரும்பாலான தர்க்கங்கள் அவர்களுக்கு உதவியிருக்கின்றன. பின் நவீனத்துவம், அமைப்பியல் என எல்லாக் கோட்பாடுகளும் அதற்காக செலவிடப்பட்டிருக்கின்றன. அதே அடிப்படையில்தான் அசலான மார்க்சிய கவிஞனான யவனிகா ஸ்ரீராமையும் அது மிக சமீபகாலம் வரை புறக்கணித்து வந்திருக்கிறது. .

தன் கருத்தியலை ஒரு அழகியல் பொறுப்பாக ஏற்றுக்கொண்டவன் யவனிகா ஸ்ரீராம். அவனை தமிழ் மார்க்சியர்கள் புறக்கணித்ததன் விளைவுதான், பவா செல்லத்துரை போன்ற தரகு முதலாளிகள் அங்கிருந்தே பிறந்து, மார்க்சியப் பண்பாட்டு மேடைகளைத் தவறுதலாகப் பயன்படுத்திக் கொழுத்திருக்கும் ஆபாசம்..

நம் மரபில் கவிஞன் ஒருவன்தான், கவிதை தவிர வேறெதற்கும் பொறுப்பேற்காத சுதந்திரம் உள்ளவன். நவீன கவிஞனான யவனிகா ஸ்ரீராமோ, மார்க்சியத்தையும் கார்ல் மார்க்சையும் மனித நாகரிகத்தின் வளர்ச்சிப் படிநிலையின் அருமையான ஞாபகங்களாகச் சுமப்பவன். மார்க்சிய மேடைகளும் அங்கீகாரங்களும் அவனைப் புறக்கணித்தாலும் தமிழ் மரபின் அடிப்படையில், கவிஞனுக்கான உதிரித்  தன்மையை ஏற்றுக்கொண்டு சமூகப் பொறுப்புகளையும் விட்டுவிடாமல் அலையும் கவிஞன். தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் சமீபகாலத்தில் உருவாகியிருக்கும் நிறுவனங்கள், நவீன ஜமீன்கள் எதிலும் போய் அவர்களது திண்ணைகளில் கொஞ்சம் சாய்ந்தமர்ந்திருந்தாலும், குல்லாய்களும் விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்திருக்கும். கவிதையை ஆதிப்பொறுப்பாய், கவிதையை மட்டுமே தண்டாயுதமாக கொண்டு அலைந்துவரும் உதிரிப் பயணிகள் மிகச் சிலரில் ஒருவன் யவனிகா ஸ்ரீராம்.

யவனிகா, ஒரு கவிஞன். கவிதையைத் தவிர எதற்கும் பொறுப்பேற்கவோ விசுவாசமாக இருக்கவோ வேண்டியதில்லை. குடும்பத்துக்கு, காதலிக்கு, சமூகத்துக்கு, குழந்தைகளுக்கு, நிறுவனங்களுக்கு, மேடைகளுக்கு, எதையும் அவன் நிரூபித்தாக வேண்டியதில்லை., நாவலாசிரியராகியே தீரவேண்டும், அதன் மூலம் அரசு வீடு வாங்கவேண்டுமென்ற லட்சியங்களுக்கெல்லாம் கவிஞன் பொறுப்பேற்கவே வேண்டியதில்லை. கவிதையும் அழகுமே ஆதிப்பொறுப்பு என்பதை ஞாபகப்படுத்திக் கொள்வதற்காகவே யவனிகாவுக்கு இந்த கௌரவமென்று நான் நினைக்கிறேன். 

நான் 1998 -ல் யவனிகா ஸ்ரீராமுடன் அறிமுகம் ஆனேன். அப்போது அவன் பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் சிகரெட்களை மலேசியாவிலிருந்து வாங்கிவந்து எங்களுக்கும் தந்து அடித்துகொண்டிருந்தான். படிப்படியாக அவன் சில மாதங்களிலேயே பீடி பிடிப்பவனாக மாறினான். எனக்கு அப்போது அவன்வயது தோற்றவில்லை. இப்போதும் தோற்றவில்லை. இந்தியா ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலமாக பிரமாண்டமான அ- சமத்துவத்துக்குள் நுழையப் போவதை முன்னுணர்ந்து காட்சிகளாய் கவிதைகளில் ஆக்கியவன். இரவு என்பது உறங்க அல்ல என்று உரைத்த முன்னறிவிப்பு இன்று நாம் வாழும், உறக்கத்துக்கு அனுமதிக்காத மெய்நிகர் வாழ்க்கைக்கான தீர்க்கதரிசனமாக மாறியுள்ளது. அறிவுத்தளத்தில் புழங்கப்பட்ட அபுனைவு மொழியைப் பயன்படுத்தி நவகவிதை செய்தவன். தமிழின் சிறந்த நவீனகவிஞர்களில் முன்னணிக் கலைஞன் அல்லது இறந்த மண்டையோட்டின் பல்வலியாகக் கவிதையை உடலில் தக்கவைத்திருப்பவன். அதை ஞாபகப்படுத்தும் நிகழ்வே இது.


எழுதுதல் என்பது

வெகுதூரம் ஓடிவந்த ஒரு நாயின் நாக்கு

வியர்ப்பது

அல்லது

தாவரங்களின் விதைகளிலிருந்து

அர்த்தங்களைத் துண்டிப்பது

அல்லது

எழுதுதல் என்பது

இளம்பெண்ணின் இனப்பெருக்க

உறுப்புகள் வளர்ந்துவருவது

அல்லது

பறவைகள் வந்தடையும் இரவுநேர

மரத்தை வரைய முயல்வது

எழுதுதல் என்பது

பழங்கால மதத்தின் எதிர்காலத்திற்கான

நிகழ்காலக் குற்றம்

அல்லது

இறைச்சிக்கென காயடிக்கப்பட்ட

பன்றிகளின் கொட்டிலில் ஒரு முனகல் |

எழுதுதல் என்பது|

தொழிற்சாலைகளில் உறுப்பிழக்கும் ஆபத்து

அல்லது

அலைகள் மட்டுமே சப்தமிடும் |

தீவின் நடுவில் ஒரு வதைமுகாம்

எழுதுதல் என்பது

மொழி தோன்றுமிடத்தின் பரிணாம அவஸ்தை

அல்லது

இறந்த மண்டையோட்டின் பல்வலி

மேலும் எழுதுதல் என்பது

வரலாற்றிலிருந்து

தானியக்கூடங்களைப் பாதுகாப்பது

அல்லது

வனங்களில் விலங்குகளுடன்

உடலுறவுக்கு முயல்வது.

(யவனிகா ஸ்ரீராமுக்கு நல நிதி வழங்கும் நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை. இடம் - டிஸ்கவரி புக் பேலஸ்)

Comments

சார் இன்று காலைதான் உரை கேட்டேன், சுவாரசியமாக இருந்தது.