Skip to main content

நான்ஸி


ஒருகை குறைய

துரியோத்தின் இளம் மனைவி நான்ஸி

முதல்முறையாக அவன் நண்பர்களுடன்

ரம்மி ஆட அமர்கிறாள்

இதுவரை கேட்காத உற்சாகச் சிரிப்பொலிகளை

மூன்று மாதங்களில் இடிக்கப்படவுள்ள

பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு

கேட்கத் தொடங்குகிறது.

ராஜா ராணி அதிகம் சேர்ந்தாலும் தரித்திரம்தான்

திவாகர் உதடு பிதுக்குகிறான்.

ஜோக்கர் இருப்பவன் இல்லாதவன்

இரண்டு பேர் முகத்திலும் வித்தியாசமே காணமுடிவதில்லை

நள்ளிரவிலும் புழக்கமற்ற பால்கனிகளில் தங்கியிருக்கும்

புறாக்களின் முனகல் நிற்பதில்லை

சலிக்கிறான் துரியோத்.

ஒழுங்கா அடுக்கத் தெரியாதவனும்

நான்காவது ரவுண்டிலேயே ரம்மியில் ஜெயிக்கிறான்

ரம்மியைப் பொறுத்தவரை உள்ளேயும்

வெளியேயும்

ஜோக்கர்கள் கண்ணுக்குப் புலப்படாமல்

கைமாறுகிறார்கள்

சீட்டுகளை நெஞ்சோடு மறைத்து

சிரத்தையோடு விளையாடுபவனும்

ஜெயிக்கிறான்

எல்லாரும் பார்க்க

சீட்டுகளை முறையற்று விரித்து விளையாடுபவனும்

ஜெயிக்கிறான்

பரஸ்பர நிதி ஆலோசகன் தர்மராஜின் ஆரூடம்.

ஜோக்கராகவே இருந்தாலும்

தேவையில்லாத நேரத்தில்

கூடுதலாக ஏறக்கூடாது

ராஜாவும் ராணியும் அமைச்சரும்

படம்கொண்ட பாம்புகள்

ஜோக்கரோ சீட்டின் எல்லையைத் தாண்டி நெளிபவன்

புறாக்கள் தங்கத் தொடங்கும் கட்டிடங்களில்

பூனைகள் விபரீதமான

காரியங்களைச் செய்யத் தொடங்குகின்றன

சமையலறைகளுக்குள்

கடிபட்ட தலைகளை

பட்டுவாடா செய்துவிடுகின்றன.

டிக் என்று சொல்லி

யாரும் எதிர்பாராத வேளையில்

உபரிச் சீட்டை இறக்கி

ஆட்டத்தைப் பெருமிதத்துடன்

முடித்தாள்

நான்ஸி.

சபாஷ் என்று நான்ஸி தொடையில்

தட்டுகிறான்

அருகில் விளையாடிக்கொண்டிருந்த

அம்பலவாண தேசிகன்.

அஸ்தினாபுரம் என்ற பெயர் கொண்ட

அந்தப் பழைய குடியிருப்பு வீடு

இன்னொரு நிசப்தத்தை விழுங்கியது.


(நன்றி: அகழ் இணைய இதழ்)

Comments

Anonymous said…
அருமை சார்