இன்னும் விடியாத
கருங்குமென்ற
இருட்டு.
வைகாசி விசாக நாளில்
கோடாகத் துலங்கத் தொடங்கி
தாமிரபரணி
மெலிந்து
குறுக்குத்துறை படித்துறையில் ஓடிக்கொண்டிருந்தாள்.
தங்கச்சிப் பாப்பாவுக்கு
என்னைக் காவலிருக்க வைத்துவிட்டு
பாலுக்கும் காலை டிபனுக்கும்
சில்லறைக் காசுகளை
எனது டிரவுசர் பையில் நிரப்பி
பத்திரமென்று சொல்லி
அம்மா குளிக்கப் போனாள்.
வெள்ளென விடியத் தொடங்க
அவள் இட்ட கட்டளையை
மீறி
கரையில் துணிவிரித்து
படுக்கவைக்கப்பட்டிருந்த
தங்கையை விட்டுவிட்டு
ஆற்றுக்குள் இறங்கித் திளைத்து
டிரவுசரில் உள்ள காசுகளை எல்லாம்
தொலைத்தேன்.
நல்ல நாளன்று பிச்சையெடுக்க
விட்டு விட்டாயே
அம்மா திட்டியபடி
ஆத்திரம் தீர
என்னை வழியெங்கும்
அழ அழ
திருவிழாக் கூட்டத்தினூடாக
வீட்டுக்கு அழைத்துவந்தாள்.
ஆற்றின் அலாதி அழகைப் பார்த்து
என்னை மறந்து
கடமையை மறந்து
அன்று காசுகளைத் தொலைத்தேன்
மந்திராலய பிராகாரத்தின் ஏகாந்த அழகில் லயித்து
என் குட்டிமகளை ஒருநாள் தொலைக்க இருந்தேன்
ஆர்ப்பரித்து மடிந்து பாதங்களில் வந்து விளையாடிய
கடல் அலைகளில் திளைத்து
வீட்டின் சாவியை இன்று தொலைத்தேன்
நடுவே நண்பர்களை
காதலியை மனைவியை தொலைத்து விட்டேன்.
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments