Skip to main content

Posts

Showing posts from 2025

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

விழுவதற்காக நியூட்டன் மரத்தின் கிளையை அர்ஜூனனாய் பார்த்துக்கொண்டே இருந்தார். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று ஆப்பிள் நியூட்டனைப் பார்த்து ஏகடியம் பேசியது. ஒங்கொம்மால என்று பின்பக்கம் படிந்திருந்த புழுதியை உதறிவிட்டுக்கொண்டே எழுந்த நியூட்டன் கீழே கிடந்த கல்லை எடுத்து படாரென்று ஆப்பிளின் காம்பை குறிவைத்துத் தாக்கினார்.

மான்கள்

மரங்கள் கல்லறைத் தூபிகள் இடையிடையே தலையைத் திருப்பி சிலைத்து நிற்கும் மான்கள். (நன்றி: அகழ் இணைய இதழ்)

காடு

அவனுக்கும் அவளுக்கும் இரண்டிரண்டு முள்ளம்பன்றி முட்களை சமப்பரிசாய் கொடுத்தது காடு. வாழ்வு மரணம் அழகு கோரம் அன்பு வெறுப்பு இடையில் நிற்கும் வேலியில் தந்திரங்கள் எதையும் பயிலாத மூன்று நரிகள் அப்போதுதான் விடிந்து உடைந்துகொண்டிருக்கும் வெளிச்சத்தில் கடந்துபோகின்றன. நடந்து கடப்பவர்களுக்குத் கொடும் வலியை தற்காலிகமாகக் கொடுக்கும் கட்டெறும்பின் தலையிலுள்ள நுண்கொடுக்கு மட்டும் எப்போதும் எரிநிலையில். (நன்றி - அகழ் இணைய இதழ்)

ராகுதசை

பாம்பின் உடல் மனிதத் தலை கொண்ட ராகு தசை நடப்பதால் நிலைகொள்ளாத இன்பவாதைகளின் மேடையாக உன் கபாலம் திகழும் என்றான் ஜோதிடன். மணி, மனத்தில் தொடங்கி மனத்தில் வரைந்து முடிக்கும் வாழ்வுதான் உனக்கு என்று சொன்னவள் அம்மா. (நன்றி: அகழ் இணைய இதழ்)

வலிகளுக்கு விடைசொல்லிப் போய்விட்டார் ரமேஷ்

பிரேம், ஷங்கர், ரமேஷ் (புகைப்படம்:குட்டி ரேவதி, 2002) சென்ற நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்த கோட்பாட்டு எழுத்துகளை அறிமுகப்படுத்தியவர்களே, கூடுதல் பரபரப்போடும் மேட்டிமைத்தனத்தோடும் வன்முறையோடும் தங்கள் எழுத்துகள் வழியாக வெளிப்பட்டுக்கொண்டிருந்த சிறுபத்திரிகை சூழலில் அழுத்தமாக அறிமுகமான பெயர்களில் ஒன்று ரமேஷ்-பிரேம். அ.மார்க்ஸ், ரவிக்குமாரின் எழுத்துகள் நன்றாகத் தொடர்புறுத்துபவை. பூக்கோவையும், ரோலன் பார்த்தையும், ஆஷிஸ் நந்தியையும், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸையும், பின்னர் ஆங்கிலம் அறிந்தபின்னர் படித்தபோது இவர்கள், அந்த ஆசிரியர்களுக்குச் செய்தது எத்தனை பயங்கரமென்று உணரமுடிந்தது.  ரமேஷ்- பிரேம் இருவரும் சேர்ந்து எழுதிய ‘கிரணம்’ குறுங்காவியம் என்னை முழுமையாக ஈர்த்த படைப்பு. புரிந்தும் புரியாமலும் அச்சத்துடனும் ‘ புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும் ’ நாவலையும், ‘ஆதியிலே மாமிசம் இருந்தது’ நாடகங்களையும் வாசித்திருக்கிறேன். ‘புதைக்கப்பட்ட மனிதர்களும் எழுதப்பட்ட மனிதர்களும்’ நாவலின் அட்டைப்படத்தில் உள்ள தாழியில் வைக்கப்பட்ட சடலத்தின் கோரமான...

மரணத்தைக் கலையாக்கிய காந்தி

ஓவியம்: ஆதிமூலம் ‘காந்தி – அஹிம்சையின் முடிவு’ நூலைப் படித்து முடிக்கும்போது, அசோகமித்திரன் எழுதிய சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘காந்தி’யின் வாக்கியம் கூடுதலாக நம்மை அறைந்து எதிரொலிக்கிறது. ‘உண்மை கசப்பானது’ என்ற வாக்கியமே அது. சத்தியத்தின் கண்ணாடியில் நெருக்கமாகத் தன் சுயத்தை, வாழ்க்கை முழுக்க பிரதிபலித்துப் பார்த்துக்கொண்டேயிருந்த காந்தியும் அவரது சமகாலத்தவருக்கு மட்டுமல்ல இன்றைய தலைமுறையினருக்கும் ஏன் வரலாற்றுக்கும் கூட, விழுங்கிச் செரிக்க இயலாத கசப்பானதொரு வியக்தியென்ற உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் நூல் இது. இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் பிரிவினையின்போதும் இனப்படுகொலை என்று சொல்லப்படக்கூடிய அளவில் நடந்த இந்து – முஸ்லிம் மோதல்களைச் சுற்றி காந்தியும், அவரது அஹிம்சையும், அவர் தன் சுயத்துடன் மேற்கொண்ட அசாத்தியமான வீரமும், காந்தியை அவநம்பிக்கையை நோக்கி, துயரத்தை நோக்கி அலைக்கழிப்பை நோக்கி எப்படித் தள்ளியது என்பதைப் பகுப்பாய்வு செய்யும் நூல் இது. 000 இருபதாம் நூற்றாண்டில் உலகளவில் மூன்று இயக்கங்கள் வரலாற்றுப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி வெகுமக்களின் வாழ்க்கை மீதும் தாக்கத்தை ஏ...

முதல் வெளிச்சம்

  தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து விரட்டிய பைத்தியமும் பாட்டியால் ரகசியம் காக்கப்பட்ட தாய் தந்தையரின் சாவும் அமானுஷ்யம் பூண்டிருந்த மாளிகையின் அறையில் அடைக்கப்பட்ட மூத்த சகோதரனின் நள்ளிரவு ஓலங்களும் சாமங்களில் விடாது ஒலித்த ஆந்தையின் அலறலும் இடைவெளியின்றி அவன் தலையில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. குழப்படிகள் மற்றும் நிச்சயமின்மைகளின் கனத்த இருட்டிலிருந்து தர்க்கத்தின் வெளிச்சத்தை, அதன் நிச்சயத் தன்மையைக் கனவுகண்டு சிறுவன் பெட்ரண்ட் ரஸ்ஸல், டிரினிட்டி கல்லூரிக்கு நகர்ந்தான். முதல் காதலி ஆலிஸை 17 வயதில் ரஸ்ஸல் அங்கேதான் சந்தித்தான். வேட்கையின் களங்கமும் காதலின் தூய்மையும் ரஸ்ஸலை புதிதாகப் பிளந்தன. நாகரிகத்தின் பாவனையும், விவேகத்தின் தர்க்கமும் வாலிபன் ரஸ்ஸல் மீது அடுத்த தாக்குதலைத் தொடுத்தன. டிரினிட்டி கல்லூரியின் பரந்த பூங்காவில், ஆளரவமற்ற பிற்பகல் பொழுதொன்றில், ஒரு எலுமிச்சை மரத்துக்குக் கீழே, தனது மார்பகங்களைத் திறந்து முத்தமிட ரஸலுக்கு ஈந்தாள் ஆலிஸ். அதுவரை அனுபவித்த இருட்டெல்லாம் படீர் படீர் என வெடித்தது; ஒருகணம் பெட்ரண்ட் ரஸ்ஸலின் தலைக்கோலம் பளீர் வெளிச்சம் கண்டது. (நன்றி: அகழ் இண...

திங்கள்கிழமை

புகைப்படம் - ஏ.வி.மணிகண்டன் இன்று திங்கள்கிழமை  போகத் தேவையில்லாத அலுவலகம் விடுவிக்கத் தேவையில்லாத படகு.

பிருத்விராஜனும் நான்ஸியும்

குதிரையில் வரமாட்டான் பிருத்விராஜன் பைக்கில்  வந்துகொண்டிருப்பவனுக்காக ஒயிலாய் திரும்பி வளையும் குட்டி நிழல்சாலையின்  முனையில் பூவரச மரத்துக்குக் கீழே பேரமைதியின் எழில் சுமந்து தோள்பையுடன் வாலின் மேல் அமர்ந்து  காத்திருக்கிறாள் நான்ஸி. 

நீல குண்டு பல்பு

பல்துலக்கிகள் தொப்பிகள் குப்பிகளை எல்லாம் பாதுகாத்த மூடிகள் பந்துகள் இறந்தவர் இருப்பவர் பிரிந்தவர் சேர்ந்து வாழ்பவர் தகவல் ஏதும் சொல்லாத  புகைப்படச் சட்டகங்கள் பயன் எல்லாம் முடிந்து ஓய்ந்த  ஆசுவாசம்  அமைதி விச்ராந்தி. இவற்றோடு சேர்ந்து இன்னும் பளபளப்பான கண்ணுடன் உடைந்த பாலத்தின் கழிமுகத்துக்கு வந்து சேர்ந்து மணலில் ஒரு நீல குண்டு பல்ப் அரசனைப் போல வீற்றிருக்கிறது . தொங்கட்டான்களின்  ஒளிச்சிணுங்கல்கள் முனகல்களாய் கீறும் சண்டைகள் கண்ணீர் சுடரும் வெதும்பல்கள் ஆறுதல்கள் மரணத்தை பார்த்திருப்பாய் நீல குண்டு பல்பே. நள்ளிரவில் விழித்து விடாமல் அழுதுகொண்டிருக்கும்  குழந்தையை அரைத்தூக்கத்திலேயே நின்றபடி தொட்டிலில் ஆட்டிய இளம்தாயை நீ மட்டும்தான் விழித்தபடி பார்த்தபடியிருந்தாய் நீல குண்டு பல்பே. 

உள்தெப்பக்குளம் – மேலும் சில காட்சிகள்

யாரோ எறிந்த போதை ஊசி ரத்தக்கறையுடன். ஏதோ ஒரு அவசத்தில் வீசப்பட்ட மல்லிகைச்சரம் தூணோரம். ஆதிப்பச்சையில் வெறித்து நோக்கும் தண்ணீர் நடமாட்டம் இல்லாமல் போய் வெளுத்துக் கிடக்கும் உள்தெப்பக்குளத்தின் கல்படிகள் எந்த ஆடி உற்சவத்திலோ பயன்படுத்திய தேர்வடக் கயிறு பாம்பணையாய் சுருண்டு நைந்துவரும் குளத்தடி இருள்மூலை. உச்சிகால வேளையில் நெல்லையப்பருக்கு அன்னம் உபசரிப்பதற்காக காந்திமதி மேளதாளத்துடன் செல்லும் சந்தடி நெருங்கித் தேய்கிறது. 000 ஊஞ்சல் மண்டபமிருக்கும் நந்தவனத்தில் வான்கோவின் வாதுமை அரும்புகளைப் போல யாரும் பார்க்காமலேயே மஞ்சள் அரளிகள் அரும்பி மொட்டுவிட்டு பூத்து மழையில் நனைந்து உதிர்ந்து மடிகின்றன. 000 உள்தெப்பக்குளத்தின் பச்சைப் பரப்பைப் பார்த்து தளிர்த்ததோ வாழை மரங்களின் இலைகள். வாழை இலைகளின் பசும்பச்சை பார்த்து அரும்பியதோ நந்தவனத்துக் கிளிகளின் இறகுகள். 000 அம்மா மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் ஊஞ்சல் மண்டபம் சங்கிலி மண்டபம் மகா மண்டபம் நீராழி மண்டபம் வசந்த மண்டபம் 000 வெளிநடை சாத்தும் சத்தம் மண்டபத்தை வந்து அறைகிறது. யுகச்சடவிலிருந்து ஒருகணம் விழித்தெழும் சர்ப்ப யாழி. காலம் சுருண்ட இருட்டுக்...

சங்க கால மரங்கள்

வெள்ளை நிறத்தில் கொத்துக் கொத்தாய் பூ பூத்தது மரா. இறால்களின் தோற்றத்தில் காய்களை விட்டது உகா. (நன்றி: அகழ் இணைய இதழ்)

தக்காளிகள்

தக்காளிகள் தப்பி தரையில் உருள்கின்றன. தக்காளிகள் நழுவி விழுந்துவிடுவது இயல்பாக நடக்கிறது. தக்காளிகள் கைநழுவிப் போய்விடுகின்றன. தக்காளிகள் உருண்டு உருண்டு கண்மறைவாகப் போய்க் கொண்டிருக்கின்றன. நழுவித் தொலைந்துவிடாமல் தக்காளியைப் பிடிக்க தக்காளிக்கு முன்னால் நான் விழுந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. தக்காளிக்கு தான் விழக்கூடாதென்ற பொறுப்பும் கிடையாது. தக்காளி நீ உடைந்துவிடக் கூடாது. தக்காளி நீ நொறுங்கிவிடக் கூடாது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

உள்தெப்பக்குளம்

சிறுமிக்கும் குமரிக்கும் இடையிலுள்ள இருட்டில் கண்பதித்திருக்கிறாள் சிற்றுடல் கொண்ட காந்திமதி. அவள் சன்னிதிக்குப் பக்கவாட்டில் வசந்த மண்டபத்தில் ஆளரவமற்ற மத்தியானத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஓர் ஊஞ்சல். கூலக்கடை பஜார் சந்தடியையும் உறிஞ்சிவிடக்கூடிய மதில் சுவருக்கு அப்பால் நிழல் எதையும் பிரதிபலிக்காது அடர்பாசியால் மூடி விலக்கவே இயலாத பச்சைத் தனிமையில் உள்தெப்பக்குளம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அந்தர் தியானம். (நன்றி: அகழ் இணையத்தளம்)

அண்மைக் காட்சி சேய்மைக் காட்சி

  முதல்முறையாக அம்மா அப்பாவுடன் உணவுகத்துக்கு புரோட்டா சாப்பிட வந்த குழந்தை வறுத்த நாட்டுக்கோழிக் கறியை மட்டும் தேர்ந்து புரோட்டாவை அம்மாவின் இலைக்கு வீசி எறிகிறது. இது ஒரு அண்மைக் காட்சி. காஸாவின் அகதிமுகாம்களில் உணவில்லாமல் மண்தின்று இறந்துபோகும் குழந்தைகள், அவர்கள் இறந்ததை ஏற்கமுடியாமல் மார்பில் அடித்து அழும் தாய்மார்கள் என் அலைபேசித் திரையில் தினசரி திரள்கின்றனர். இது ஒரு சேய்மைக் காட்சி. கைவிடப்பட்டோம் என்று முகங்களாலேயே சொல்லும் எத்தனையோ பிராணிகளைக் கடந்துவந்துதான் எனது வளர்ப்புயிர் பிரௌனியுடன் தற்காலிக நிறைவு என்னும் குமிழை தினசரி உருவகித்துக்கொண்டு உறங்கச் செல்கிறேன். இங்கே எல்லோரையும் காப்பாற்றமுடியாமல் போனதால் தான் நாம் யாரையாவது காப்பாற்றிக்கொண்டிருக்கிறோமா? (நன்றி: அகழ் இணைய இதழ்)

மெய்ஞான சபை

உயிர் சந்தடியே இல்லாமல் போன அடையாறு பிரம்மஞான சபை வளாகத்தின் காட்டிலிருந்து கடைசி வண்ணத்துப்பூச்சிக் கூட்டம் பின்தொடர ஜே. கிருஷ்ணமூர்த்தி வெளியேறி பல தசாப்தங்கள் சென்றுவிட்டன. பிரம்ம ஞான சபையின் எல்லையை கட்டியம் கூறிநிற்கும் பனைமரங்கள் கல் மரங்களாக கடலைப் பார்த்து நிச்சலனமாய் வெறித்து நிற்கும் சோகத் தோற்றம். சகோதரன் நித்யாவின் மரணத்துக்குப் பிறகு புத்தகங்கள் அனைத்தும் ஒருகணம் சடலங்களாக சிறுவன் கிருஷ்ணமூர்த்திக்கு தோற்றம் கொடுத்த மறைஞான நூலகத்தின் படிக்கட்டுகள் இப்போது உடைந்து தூர்ந்துவிட்டன. அன்னிபெசண்ட் அம்மையாரே எப்படித் தொலைத்தீர்கள் கிருஷ்ணமூர்த்தியை? அன்னிபெசண்ட் அம்மையாரே ஏன் பிரம்மஞான சபையிலிருந்து கிருஷ்ணமூர்த்தியோடு வெளியேறின வண்ணத்துப்பூச்சிகள்? (நன்றி: அகழ் இணைய இதழ்)

உள்தெப்பக்குளம்

சிறுமிக்கும் குமரிக்கும் இடையிலுள்ள இருட்டில் கண்பதித்திருக்கிறாள் சிற்றுடல் கொண்ட காந்திமதி. அவள் சன்னிதிக்குப் பக்கவாட்டில் வசந்த மண்டபத்தில் ஆளரவமற்ற மத்தியானத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஓர் ஊஞ்சல். கூலக்கடை பஜார் சந்தடியையும் உறிஞ்சிவிடக்கூடிய மதில் சுவருக்கு அப்பால் நிழல் எதையும் பிரதிபலிக்காது அடர்பாசியால் மூடி விலக்கவே இயலாத பச்சைத் தனிமையில் உள்தெப்பக்குளம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அந்தர் தியானம். (நன்றி : அகழ் இணையத்தளம்)

நான்ஸி யார்?

என் சமீபத்திய கவிதைகளில் இடம்பெறும் நான்ஸி யாரென்று கேட்டான் நண்பன். வேளச்சேரியின் புராதன பங்களா வீட்டில் தனியாக வசிக்கும் பூனை என்றேன். நான்ஸியைக் கடக்கும் நான்ஸி அழகின் உச்சாடனத்தைத் தாங்கியிருக்கும் பெயர்கள்… அவற்றுக்கு உடல் இல்லை வீடு இல்லை ஊர் இல்லை காணி இல்லை தெரு இல்லை சுற்றுச் சுவர்கள் இல்லை பூட்டு இல்லை சாவிகூட இல்லை வெறும் நிழல்கள் மட்டுமே என்றபடி நான்ஸி வசிப்பதாகச் சொல்லப்படும் வீட்டைத் தாண்டி இருளுக்குள் சென்று மறைந்தது நான்ஸி. 000 (நன்றி: அகழ் இணைய இதழ்)

அனேகத்தின் ருசி - சார்லஸ் சிமிக் கவிதைகள்

உடல் ஓயும் அதே தருணத்தில் மனமும் நிரோத நிலையில் ஓய்ந்துவிடுகிறது. அதனால்தான் அறிஞர் விட்கன்ஸ்டைன், சாவு என்பது வாழ்க்கையோடு தொடர்புடையதே அல்ல என்கிறார் போலும். உடல் உட்கொள்ளும் புரதம் தரும் சக்தியில் எரிவதுதான் மனம். அதனால், கண்ணுக்குத் தூலமாகத் தெரியும் உடல்தான் உபாதைகளுக்கும் தண்டனைகளுக்கும் வலி வறுமை செல்வநிலை இனம் நிறம் மதம் சாதி அதிகாரம் சார்ந்த பாகுபாடுகளுக்கும் உள்ளாகிறது. கண்ணுக்குத் தெரியாத மனம், அதைத் துயரம், சந்தோஷம், குரோதம், விரோதம் என்ற புறாக்கூண்டுகளில் அடுக்கித் தொகுத்துக்கொள்கிறது. உடலுக்கு நேரும் அனுபவங்களை விசாரித்துச் சலித்துத் தொகுத்துக்கொள்ளும் மனத்துக்கு உயர்நிலையை அளித்த ஒரு மரபின் தொடர்ச்சியாக இருந்த புதுக்கவிதையின் ஐம்பது ஆண்டுகாலப் பயணத்தில், உடல்தான் பிரதானம் என்று ஆதாரமாக ஏற்பட்ட பார்வை மாற்றத்தில்தான் அது, நவீன கவிதையாக உருமாறுகிறது. இது எனது ஊகம். முந்தைய நூற்றாண்டுகளில் தாயுமானவர், வள்ளலார், பாரதியார் முதலியோரில் தொடங்கிய போக்கு, புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம், நகுலன், பசுவய்யா வரை நீண்டது. அத்வைதச் சிந்தனையோடு மோதிமோதி த்வைத உலகைச் சந...

மாம்பழங்கள்

மாம்பழங்களின் பருவம் சமீப ஆண்டுகளாக கோடை தாண்டியும் நீள்கிறது. மாம்பழங்களின் அளவு பப்பாளிப் பழங்களுக்குப் போட்டியாக பெருக்கத் தொடங்கிவிட்டது. மாம்பழங்களின் பருவம் நீளும் போது, அவை பப்பாளிப் பழங்கள் அளவுக்குப் பெருக்கும்போது சற்றே வடுபட்ட மாம்பழங்களை தாராளமாகப் பணிப்பெண்களுக்கு வீட்டுக்காரர்கள் கொடுப்பது நடக்கிறது. பைகளில் தங்கள் குழந்தைகளுக்காக வீட்டுப் பணிப்பெண்கள் அந்த மாம்பழங்களைச் சுமந்து செல்லும்போது மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிடுகிறது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

முதல் பால் பல்

பிச்சிப்பூ, நெட்டிலிங்க மரங்களின் வரிசையில் தோட்டத்தின் மூலையில் நின்றிருந்த ஒற்றை நாரத்தையின் கீழ் அமர்ந்து முதல் இரவின் கதையை அக்காக்களிடமிருந்து கேட்டிருந்த அனுபமா எனக்கு பரம ரகசியமாய் பரபரப்புடன் தெரியப்படுத்தியபோது எங்களுக்கு வயது வயது ஏழு. ஆணும் பெண்ணும் தொட்டு உடைகளைக் களைந்து நிர்வாணமாகும் காட்சியை அவள் படிப்படியாக விவரித்தபோது அடைந்த கிறுகிறுப்பில் சாயங்காலம் தைலத்தன்மையுடன் கருஞ்சிவப்பானது. ஆணும் பெண்ணும் பரஸ்பரம் அம்மணமாகித் தொடுவதற்கும் குழந்தைகள் பிறப்பதற்கும் உள்ள தொடர்பு அவள் சொல்லித்தான் கலங்கலாக எனக்கு விளங்கியது. பிள்ளையார் தும்பிக்கையால் நள்ளிரவுகளில் அம்மாக்களின் வயிற்றைத் தடவி குழந்தைகளை விட்டுச் செல்வதில்லையா என்று அனுபமாவிடம் கேட்டேன். அன்றைக்குத்தான் வெகுநாள்கள் விழாமல் இருந்த முதல் பால் பல்லும் விழுந்தது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

ஹேமா

அழைத்தாலும் அழைக்காதது போன்று அதலபாதாளத்து  நினைவிலிருந்தெழும் அசரீரியாய் பட்டுமிருதுடன் தொனிக்கும் அவள் பெயர் ஹேமா... சிவனின் மனைவி பார்வதியின் இன்னொரு நாமகரணம் ஹைமவதி என்கிறது புராணம். பொன், தூய்மை என்றும் பொருள்படும் பெயர் ஹேமா. மலையில் காட்டில் நதியில் அருவியில் காற்றாக ஒலிக்கிறது ஆதிப்பெயர்களில் ஒன்றான ஹேமா ஹேமா ஹேமா ஹேமா. (நன்றி: அகழ் இணைய இதழ்)

குயில் குப்பை குப்பி

ஒரு குப்பியை உடை ஒரு குயில் வெளியே வந்து பாடும் ஒரு விடுதலைப் பாடல். எந்தக் குப்பையில் எங்கே ஒழிந்து கிடக்குது ஐயா அந்தக் குப்பி? குயில் குப்பை குப்பி இது என்ன எழவுடா ? நன்றி: அகழ் இணைய இதழ்

பாசிசத்தை நோக்கி இந்தியா: மோடி செய்த மாற்றங்கள் - பிரேம் சங்கர் ஜா

(இந்தியாவை பாசிசத்தை நோக்கி மோடி படிப்படியாக மாற்றிய வரலாற்றை எண்ணற்ற கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் குடியுரிமை, ஜனநாயகப் பாதுகாவலர்கள் விவரமாகப் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் பலரும் , எந்தக் குற்றச்சாட்டும் சொல்லப்படாமல் ஆண்டுக்கணக்கில், பிணையில்லாமல் சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். பாசிசத்துக்கு இந்தியாவை மோடி எவ்வாறு அழைத்துச் சென்றார்? அந்தப் பயணத்தை பெருங்கோடுகளில் இந்தக் கட்டுரை தீட்டுகிறது.)  1. பன்முகத்தன்மை வாய்ந்த, பல்வேறு இனங்கள் வசிக்கும் ஜனநாயகமென்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெருமைப்பட்டு குறிப்பிட்ட அம்சங்களை, அவருக்குப் பின்னால் வந்த நரேந்திர மோடி, பிரதமர் பதவியேற்று சில வாரங்களில்,  அகற்றத் தொடங்கிய முதல் நடவடிக்கை இது. மத்திய அமைச்சகங்கள் இயங்கும் இடங்களின் நுழைவாயிலில் முதலில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியதுதான் அந்த முதல் நடவடிக்கை. அத்துடன் பத்திரிகை தகவல் பணியகம்((Press Information Bureau), சிறப்பு செய்தியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகள் வாபஸ் பெறப்பட்டன. பத்திரிகையாளர்கள் எந்த அமைச்சரகத்த...

தலைகீழாகத் தொங்கும் பொம்மைகள்

சிறுதடமும் இன்றி காதுமடல்கள் இரண்டும் மழித்து அகற்றப்பட்ட அந்தப் பையனுக்கு நண்பர்களென்று யாரும் இல்லை. தன் வீடிருக்கும் வீதியில் இறங்கி எப்போதாவது நூல் கோர்த்த கார் பொம்மையை இழுத்து விளையாடும் நண்பகல்களில் தெரு கூடுதல் நிசப்தத்தை அடைந்துவிடுகிறது. தோளில் புத்தகப்பையைச் சுமந்து தலைகுனிந்தபடி டியூசனுக்குப் போய்விட்டுத் திரும்புபவன் கூர்ந்து பார்க்கும் என்னைக் கண்களாலேயே தவிர்த்து கடந்துவிடுகிறான். அவன் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் பால்கனியிலிருந்து விலை உயர்ந்த பொம்மைகள் வெளியே வீசப்படுவது வழக்கம். தரையில் விழாமல் பொம்மைகள் பெரும்பாலும் கேபிள் வயர்களில் தலைகீழாகத் தொங்கும் காட்சிதான் காதுகள் மழிக்கப்பட்ட அந்தச் சிறுவனின் முகத்தைவிட எனக்கு அதிவினோதமானது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

களத்தூர் கண்ணம்மா

கமல்ஹாசன் நடித்திருக்கும் சினிமா என்று திருநெல்வேலி லட்சுமி தியேட்டருக்கு அழைத்துப் போனாள் அம்மா. பழைய படங்களாக அழைத்துச் செல்லப்பட்டு நிறைய ஏமாந்திருந்தாலும் கமல்ஹாசன் என்றதால் கொஞ்சம் நப்பாசையில் உடன் போனேன். கருப்பு – வெள்ளைப்படம் தொடங்கியது. அழகிய சிறுவன் ஒருவனைக் காண்பித்து இவன்தான் கமல்ஹாசன் என்றாள். அவன் வளர்ந்துவிடுவான் என்று எதிர்பார்த்தேன். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே என்று எல்லாரையும் அழவைக்கும்படி அனாதை இல்லத்தில் சக குழந்தைகளுடன் அவன் பாடியபோது வளர்ந்து மோட்டார் சைக்கிளை உதைத்து முடுக்கி சண்டைபோடுவான் என்ற நம்பிக்கை தளரத் தொடங்கியது. ஒரு பங்களா வீட்டின் புறக்கடைத் தோப்பில் ஜெமினியும் சாவித்திரியும் பிழியப் பிழிய அழுதுபிரியும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அம்மா ஏமாற்றிய துக்கத்தை இவனால் அப்போது தாளவே முடியவில்லை. கமல் வளர்வானா என்று கடைசிவரை அந்தப் பையன் கேட்கவுமில்லை. (தக் லைஃப் திரைப்படம் தந்த அனுபவத்துக்கு) (நன்றி: அகழ் இணைய இதழ்)

கவிஞர் மதார்

திருநெல்வேலி பெருமாள்புரம் உள்சாலைகளில் நடைபயிற்சி போகும் கவிஞர் மதார்  தினசரி எதிரே சந்தித்துவிடும்  வண்ணதாசனை அன்று சந்திக்கவில்லை. மாணிக்கவாசகர் தெருவின் முனையில் பஞ்சால் அலங்கரிக்கப்பட்ட மரக்குதிரை பொம்மை ஒன்று குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருப்பதைப் பார்த்தார். செவ்வாய்கிழமை காலையிலேயே தன் கவிதைக்கான கருப்பொருள் என்று உவகையுற்று பட்டினத்தார் தெருவில் திரும்பினார். பட்டினத்தார் தெருவின் நடுப்பகுதியை கடக்கும்போது ஓரத்தில் நள்ளிரவில் குடித்து உடைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகளின் நடுவே காலை நீட்டி இறந்துகிடந்த பூனையின் சடலமொன்றைப் பார்த்தார். பூனையின் சடலத்தை முதலில் பஞ்சு பொம்மை என்றே  நம்புவதற்கு விரும்பினார் கவிஞர் மதார். இறந்த பூனையின் சடலத்திலிருந்து கண்ணை எடுத்து வேகமாக பட்டினத்தார் தெருவைக் கடந்து வீடுபோய் சேர்ந்துவிட்டார் கவிஞர் மதார். இறந்த பூனைகளே தெருவில் வீசப்படாத ஊர் ஒன்றுக்கு கவிஞர் மதார் இடமாற்றம் கேட்டிருப்பதாக சமீபத்திய செய்தி.