Skip to main content

Posts

Showing posts from 2025

நான்ஸி 2

கடந்த சில நாள்களாக காலை நடையில் நான்ஸியைப் போலவே அவளது முதிய பதிப்பாய் ஒருத்தி சற்றே இடதுபுறம் சரிந்து என்னைக் கடக்கிறாள். இன்று காலையில் நான்ஸியைப் போலவே அவளது இளையபதிப்பொன்று சற்று வாளிப்பாய் இரண்டு சக்கரவண்டியில் கடந்து போனாள். அசல் நான்ஸியைப் பார்த்து வருஷங்கள் ஓடிவிட்டன. ஆனால் வேறு வேறு நான்ஸிகளின் சாயல்கள் ஏன் இந்தக் கடற்கரை சாலையில். (நன்றி: அகழ் இணை இதழ்)

பெண்களுக்கு அறிவுரை - ஈயூனிஸ் டி சௌசா

(ஈயூனிஸ் டி சௌசா சமகால இந்திய ஆங்கிலக் கவிஞர்களில், தன் வாழ்நாள் காலத்திலேயே கவனிப்புக்கும் விமர்சனப் பார்வைக்கும் உள்ளானவர். தனி அடையாளத்தையும் உலகையும் கொண்ட கவிஞர். கோவாவைச் சேர்ந்த கத்தோலிக்கக் குடும்பத்தில் 1940-இல் பிறந்து மும்பையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, தனியாகவே வாழ்ந்து 2017-இல் மறைந்தவர். சார்லஸ் பூக்கோவ்ஸ்கியின் அப்பட்டமான விமர்சனத் தன்மை, மேரி ஆலிவரின் ஈரத்தன்மையோடு சிறிய கவிதைகளை எழுதியவர். பூனைகள், தெரு நாய்கள், பருந்து, சிறுத்தை, காகம், கிளி என பிராணிகளும் பறவைகளும் ஆண் பால், பெண் பாலாகவே பிரித்து இவர் கவிதைகளில் சுட்டப்படுகின்றன. மூன்று வயதில் தந்தையை இழந்த ஈயுனிஸ் டி சௌஸாவை அந்த மரணம் மிகவும் பாதித்துள்ளது. சுயசரிதைத் தன்மை கொண்ட இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். தோழிகள், தோழர்கள், கணவர்கள், காதலர்கள் கதாபாத்திரங்களாக நேராகவும் மறைமுகமாகவும் உலவுகின்றனர். மற்றமையை, மற்ற உயிர்களுடனான பிணைப்பைக் கொண்டாடுவதோடு மரணத்தையும் விசாரித்தபடி இருக்கும் கவிதைகள் இவருடையவை.) காதலர்களின் மற்றமையோடு சமாளித்துப் போகக் கற்றுக்கொள்வதற்கு பூனைகளை வைத்திருங்கள். மற்றமை என்பத...

நான்ஸி வீட்டுப் பால்கனியில் ஆந்தைப்பூனை

இரவில் ஆந்தையாக மாறும் பூனையை நான்ஸி வீட்டுப் பால்கனியில் தற்செயலாகப் பார்த்து எப்படி என்றேன்? எல்லாம் ஒரு வட்டம் உள்ளே ஒரு முக்கோணம்தான் என்றது சாவதானமாய். 000 

கலிங்…

நூற்றாண்டுத் துயரக் கசப்பின் மதுவைப் பருகி யாரோ ஒருவர் தூக்கி எறிந்த காலிப்புட்டியை தெருவில் பார்த்தேன். கூரிய கருங்கல் ஒன்றை தேடிக் கண்டெடுத்து கலிங்கென நொறுக்கி உடைத்தேன். தன் தொலியுரித்து ஒரு சூரியன் மேலெழுந்தது ரத்தமாய்ப் பூத்தது. (நன்றி : அகழ் இணைய இதழ்) 

காசி காசி காசி காசி

பாலாஜி மந்திர் கருவறைக்குள் அனுமதிக்கப்படாத பிஸ்மில்லா கானின்  பிராணம் தினசரி அபிஷேகம் செய்யப்படும் கங்கை நீரைப்போல மூலவரைத் தினசரி தீண்டியது ஒரு காலம். யுகம் யுகமாய் மூலத்தோடு இணைவதற்கு ஏங்கிய யாசகர்களின் இறைஞ்சலையும் கங்கையின் பிரவாகங்களையும் சேர்த்துக் கொண்ட உஸ்தாதின் ஷெனாய்,  புதிதாக எழுப்பப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்துக்குள் சிறைப்பட்டு குனிந்து நிற்கும் ஞானவாபி மசூதியின்  நீரூற்றுக்குள் கழுத்து நெரிக்கப்பட்டு  புதைக்கப்பட்டுள்ளது. 000 உஸ்தாதின்  ஷெனாய் துளைகளை காசிக்கு சமீபத்தில் வந்த புழுதிப் புயல் மூடிவிட்டது. 000 இளஞ்சிவப்பு படர்ந்த புதிய காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்துக்குள் கம்பிவேலிகளால் நெரிக்கப்பட்டு காயப்பட்ட உடலென நின்றிருக்கும் ஞானவாபி மசூதியின் மேல் எப்போதும்  ஒரு கருப்புச் சூரியன். 000 மூன்றடுக்குக் காவலர் சோதனைகளுக்குப் பிறகு கனத்த மௌனத்துடன் ஞானவாபி மசூதிக்குள்  நுழைகிறார்கள் வழக்கமாய் தொழுகைக்கு வருபவர்கள். வசூகானாவில்  உடலைக் கழுவிக்கொண்டு ஆகாயத்தை அவர்கள் தன்னிச்சையாக வெறிக்கிறார்கள். லிங்கத்தைத் தேடி சர்ச்சையின் மை...

நான் தொலைத்தேன்

இன்னும் விடியாத கருங்குமென்ற இருட்டு. வைகாசி விசாக நாளில் கோடாகத் துலங்கத் தொடங்கி தாமிரபரணி மெலிந்து குறுக்குத்துறை படித்துறையில் ஓடிக்கொண்டிருந்தாள். தங்கச்சிப் பாப்பாவுக்கு என்னைக் காவலிருக்க வைத்துவிட்டு பாலுக்கும் காலை டிபனுக்கும் சில்லறைக் காசுகளை எனது டிரவுசர் பையில் நிரப்பி பத்திரமென்று சொல்லி அம்மா குளிக்கப் போனாள். வெள்ளென விடியத் தொடங்க அவள் இட்ட கட்டளையை மீறி கரையில் துணிவிரித்து படுக்கவைக்கப்பட்டிருந்த தங்கையை விட்டுவிட்டு ஆற்றுக்குள் இறங்கித் திளைத்து டிரவுசரில் உள்ள காசுகளை எல்லாம் தொலைத்தேன். நல்ல நாளன்று பிச்சையெடுக்க விட்டு விட்டாயே அம்மா திட்டியபடி ஆத்திரம் தீர என்னை வழியெங்கும் அழ அழ திருவிழாக் கூட்டத்தினூடாக வீட்டுக்கு அழைத்துவந்தாள். ஆற்றின் அலாதி அழகைப் பார்த்து என்னை மறந்து கடமையை மறந்து அன்று காசுகளைத் தொலைத்தேன் மந்திராலய பிராகாரத்தின் ஏகாந்த அழகில் லயித்து என் குட்டிமகளை ஒருநாள் தொலைக்க இருந்தேன் ஆர்ப்பரித்து மடிந்து பாதங்களில் வந்து விளையாடிய கடல் அலைகளில் திளைத்து வீட்டின் சாவியை இன்று தொலைத்தேன் நடுவே நண்பர்களை காதலியை மனைவியை தொலைத்து விட்டேன். (நன்றி: அக...

ஓர் இரவு

அகங்கை கொண்டு மூணுபிடி புறங்கை கொண்டு மூணுபிடி அருணாசலத்தாச்சி பாடத் தொடங்க காவேரிப் பெரியம்மாவின் மடியில் உறங்கிக்கொண்டிருந்த நான் திடுமென்று விழித்தேன். கண் திறந்துபார்த்தால் கண் அவிந்துபோய்விடுமென்று சொல்லித்தான் அம்மா அங்கே அழைத்துவந்து படுக்க வைத்திருந்தாள். அப்பாவோ இரவுப்பணிக்குப் போயிருந்தார். மார்புக்குக் குறுக்காக சேலை ஒன்றை மட்டுமே சுற்றி கூடத்தில் அலையும் எங்கள் வளவு வீடுகளைச் சேர்ந்த அத்தைகள். அம்மா பின்கட்டிலிருந்து குளித்த தலையுடன் பாவாடையை மேலேற்றிக் கட்டிக்கொண்டு நுழைந்தாள். சில்வர் பாத்திரத்தில் வெள்ளைக் கொழுக்கட்டைகள் குழு குழுவாக அமர்ந்திருந்த பெண்களால் உருவங்களாகத் தட்டி உருட்டி அடுக்கப்பட்டன. நோஞ்சலான கிழவிகள் கிழவர்கள் கை கால் மண்டையோடு பாடை அகல் விளக்கு எனக்குத் தெரிந்த உருவங்கள் தெரியாத உருவங்களும் கொழுக்கட்டைகளாக அவரவர் சட்டிகளில் விழுந்துகொண்டிருந்தன. சூடன், சாம்பிராணி புகையில் பளீர் குழல் விளக்கு வெளிச்சத்தில் ஆவிகளாய் என் அம்மாவும் அத்தைகளும் மறைந்து இருந்து உருக்கள் மாறித் தோன்றிய அந்த ஔவையார் நோன்பு நடுநிசியை நிஜம்தானென்று இன்று ருசுப்படுத்த அருணாசலத்தாச்ச...

கல் ஆந்தை

மகா கருணை மகா அமைதி மகா பரிவு பங்களா வீட்டின் மேல்மாடத்தில் புத்தராய் மாறி வெறிக்கும் கல் ஆந்தை. (நன்றி: அகழ் இணைய இதழ்)

நான்ஸி

ஒருகை குறைய துரியோத்தின் இளம் மனைவி நான்ஸி முதல்முறையாக அவன் நண்பர்களுடன் ரம்மி ஆட அமர்கிறாள் இதுவரை கேட்காத உற்சாகச் சிரிப்பொலிகளை மூன்று மாதங்களில் இடிக்கப்படவுள்ள பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு கேட்கத் தொடங்குகிறது. ராஜா ராணி அதிகம் சேர்ந்தாலும் தரித்திரம்தான் திவாகர் உதடு பிதுக்குகிறான். ஜோக்கர் இருப்பவன் இல்லாதவன் இரண்டு பேர் முகத்திலும் வித்தியாசமே காணமுடிவதில்லை நள்ளிரவிலும் புழக்கமற்ற பால்கனிகளில் தங்கியிருக்கும் புறாக்களின் முனகல் நிற்பதில்லை சலிக்கிறான் துரியோத். ஒழுங்கா அடுக்கத் தெரியாதவனும் நான்காவது ரவுண்டிலேயே ரம்மியில் ஜெயிக்கிறான் ரம்மியைப் பொறுத்தவரை உள்ளேயும் வெளியேயும் ஜோக்கர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கைமாறுகிறார்கள் சீட்டுகளை நெஞ்சோடு மறைத்து சிரத்தையோடு விளையாடுபவனும் ஜெயிக்கிறான் எல்லாரும் பார்க்க சீட்டுகளை முறையற்று விரித்து விளையாடுபவனும் ஜெயிக்கிறான் பரஸ்பர நிதி ஆலோசகன் தர்மராஜின் ஆரூடம். ஜோக்கராகவே இருந்தாலும் தேவையில்லாத நேரத்தில் கூடுதலாக ஏறக்கூடாது ராஜாவும் ராணியும் அமைச்சரும் படம்கொண்ட பாம்புகள் ஜோக்கரோ சீட்டின் எல்லையைத் தாண்டி நெளிபவன் புறாக்கள் ...

மிஷிமாவின் சௌந்தர்ய கிளிகள்

ராஜஸ்தானின் பளீர் வெயில், நடுமுற்றத்தில் பட்டு ஒளிரும் வகையில் அமைக்கப்பட்ட ஜோத்பூரின் தங்கும் விடுதி அது. வெளிநாட்டு ஓரினப் பாலுறவாளர்கள் தேடித் தங்கும் அந்த விடுதியின் உணவுக்கூட மூலை அலமாரியில்தான், யாரோ விட்டுச்சென்ற, யூகியோ மிஷிமாவின் ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ நாவலைப் பார்த்தேன். சாமுராய்களின் உடல் வலிமை, வீரம், ஆண்தன்மை மீது குழந்தைப் பருவத்திலிருந்தே கதாநாயகனுக்கு கவர்ச்சி தொடங்கி அதுதொடர்பிலான குழப்பம், பயம், இரட்டைத் தன்மை, அதை மறைப்பதற்கான பாவனை எல்லாம் அலைக்கழிக்க, ஒரு யுவதியின் காதலையும் வலியுடன் கடக்கும் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்தேன். ஊர்திரும்பிக் கொண்டிருந்த ரயில், சூரிய காந்தி வயல்களினூடாக கர்நாடக மாநிலத்தில் எங்கோ ஒரு பிரதேசத்தில் விரைந்துகொண்டிருந்தது. மிஷிமா கொடுத்த பெருமூச்சுடன், மழைக்காக மூடியிருந்த ஜன்னலைத் திறந்து வெளியை வெறித்தபோது சரட்டென்று கிளிகள் சூரியகாந்தி வயல்களிலிருந்து கூட்டமாக மேலே பறந்தன. சிறுவன் மிஷிமா அதுவரை அணிந்திருந்த முகமூடியை வலியுடன் உரித்து அகற்றியபோது உண்டான அழகு….பச்சைப்பசேல் வயலில் விருட்டென்று எழுந்து பறந்த கொக்கின் ...

உடைந்த பாலம்

கழிமுகம் கடல் நீர் மணல் கரை முயங்கிக் கலையும் சம வெளி எல்லாம் ஓயும் படகு பாய் கொடி தூண்டில் சூரியன் வலை கைவிடப்பட்ட பொம்மைகள் செருப்புகள் மதுக்குப்பிகள் எல்லாம் ஓயும் என்று ஆற்றுவித்து கால்களை உக்கிரமற்றுத் தழுவி அமைதியாகத் திரும்பிச் செல்லும் சின்னச்சிறிய சீரலைகள். களுக் களுக்கென தளும்பி நீர் சொல்லும் ஒன்று எனக்கு கேட்கத் தொடங்குகிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தியின் காலத்தில் எதையும் யாரையும் இனி இணைப்பதில்லையென்று முடிவெடுத்து ஏகாந்தத்தின் கழிமுகம் மீது நின்றுகொண்டிருக்கும் உடைந்த பாலத்துக்கோ களுக் களுக்கென நீர் சொல்லும் அந்த ஒன்று அப்போதே கேட்டுவிட்டது. யுத்தத்துக்கும் சமாதானத்துக்குமிடையே துள்ளி எழப்போகிற மீன் கிடைக்கும் தருணத்துக்கு சற்று முன்னால். நிசப்தத்தை அலகில் நிறைத்தபடி நீர்வெள்ளி சுடரும் பரப்பில் மேயும் கொக்குகளுக்கு கருநாரைகளுக்கு ஏற்கெனவே சேதி சொல்லப்பட்டு விட்டது. அருகிலேயே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலின் ஆழத்தை கேலிசெய்து திளைத்துக் குளிக்கும் காகங்களுக்கு குருவிகளுக்கு எனக்கு முன்னால் கேட்டுவிட்டது களுக் களுக்கென நீர் சொல்லும் அந்த ஒன்று. (அகழ் இணைய இதழ்)

கருப்பு

நேயக் கலவி மயக்கத்தில் குழந்தையிடம் பேசும் அதர்க்க மொழியில் கொஞ்சி தொட்டுத் தொட்டு நீ அகற்றிய என் உள்ளாடையின் நிறம் துயரக் கருப்பானது தற்செயல்தானா கோகிலமே! உன் இருள் கேசம் அந்தக் கேசத்தின் மையெடுத்துத் தீட்டிய உன் புருவம் திலகமிட்ட நெடிய நெற்றி கூர்ந்த பிச்சிப்பூ மூக்கு ஆராதித்து உன் இடைக்கு முன்னால் மண்டியிட்டேன் அரவப்படம் உன் அல்குல் என வர்ணித்து முத்தத்தால் உரித்த உன் உள்ளாடையும் அதே துயரக் கருப்பானது தற்செயல்தானா? மரகதமே! இப்போதும் அலமாரியில் கையில் தட்டுப்பட்டு அணியும்போதெல்லாம் யாரை எதை எப்பொழுதைப் பழிக்க அந்தக் கருப்பு உள்ளாடையின் உட்புறத்தை மாற்றி அணிகிறேன் ஞாபகமென்னும் ஆலகால நஞ்சே! (நன்றி : அகழ் இணைய இதழ்)

ஒருநாள் - நகுலன் (எழுத்து இதழ் - 1959)

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவா...