Skip to main content

Posts

Showing posts from 2025

நான்ஸி யார்?

என் சமீபத்திய கவிதைகளில் இடம்பெறும் நான்ஸி யாரென்று கேட்டான் நண்பன். வேளச்சேரியின் புராதன பங்களா வீட்டில் தனியாக வசிக்கும் பூனை என்றேன். நான்ஸியைக் கடக்கும் நான்ஸி அழகின் உச்சாடனத்தைத் தாங்கியிருக்கும் பெயர்கள்… அவற்றுக்கு உடல் இல்லை வீடு இல்லை ஊர் இல்லை காணி இல்லை தெரு இல்லை சுற்றுச் சுவர்கள் இல்லை பூட்டு இல்லை சாவிகூட இல்லை வெறும் நிழல்கள் மட்டுமே என்றபடி நான்ஸி வசிப்பதாகச் சொல்லப்படும் வீட்டைத் தாண்டி இருளுக்குள் சென்று மறைந்தது நான்ஸி. 000 (நன்றி: அகழ் இணைய இதழ்)

அனேகத்தின் ருசி - சார்லஸ் சிமிக் கவிதைகள்

உடல் ஓயும் அதே தருணத்தில் மனமும் நிரோத நிலையில் ஓய்ந்துவிடுகிறது. அதனால்தான் அறிஞர் விட்கன்ஸ்டைன், சாவு என்பது வாழ்க்கையோடு தொடர்புடையதே அல்ல என்கிறார் போலும். உடல் உட்கொள்ளும் புரதம் தரும் சக்தியில் எரிவதுதான் மனம். அதனால், கண்ணுக்குத் தூலமாகத் தெரியும் உடல்தான் உபாதைகளுக்கும் தண்டனைகளுக்கும் வலி வறுமை செல்வநிலை இனம் நிறம் மதம் சாதி அதிகாரம் சார்ந்த பாகுபாடுகளுக்கும் உள்ளாகிறது. கண்ணுக்குத் தெரியாத மனம், அதைத் துயரம், சந்தோஷம், குரோதம், விரோதம் என்ற புறாக்கூண்டுகளில் அடுக்கித் தொகுத்துக்கொள்கிறது. உடலுக்கு நேரும் அனுபவங்களை விசாரித்துச் சலித்துத் தொகுத்துக்கொள்ளும் மனத்துக்கு உயர்நிலையை அளித்த ஒரு மரபின் தொடர்ச்சியாக இருந்த புதுக்கவிதையின் ஐம்பது ஆண்டுகாலப் பயணத்தில், உடல்தான் பிரதானம் என்று ஆதாரமாக ஏற்பட்ட பார்வை மாற்றத்தில்தான் அது, நவீன கவிதையாக உருமாறுகிறது. இது எனது ஊகம். முந்தைய நூற்றாண்டுகளில் தாயுமானவர், வள்ளலார், பாரதியார் முதலியோரில் தொடங்கிய போக்கு, புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம், நகுலன், பசுவய்யா வரை நீண்டது. அத்வைதச் சிந்தனையோடு மோதிமோதி த்வைத உலகைச் சந...

மாம்பழங்கள்

மாம்பழங்களின் பருவம் சமீப ஆண்டுகளாக கோடை தாண்டியும் நீள்கிறது. மாம்பழங்களின் அளவு பப்பாளிப் பழங்களுக்குப் போட்டியாக பெருக்கத் தொடங்கிவிட்டது. மாம்பழங்களின் பருவம் நீளும் போது, அவை பப்பாளிப் பழங்கள் அளவுக்குப் பெருக்கும்போது சற்றே வடுபட்ட மாம்பழங்களை தாராளமாகப் பணிப்பெண்களுக்கு வீட்டுக்காரர்கள் கொடுப்பது நடக்கிறது. பைகளில் தங்கள் குழந்தைகளுக்காக வீட்டுப் பணிப்பெண்கள் அந்த மாம்பழங்களைச் சுமந்து செல்லும்போது மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிடுகிறது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

முதல் பால் பல்

பிச்சிப்பூ, நெட்டிலிங்க மரங்களின் வரிசையில் தோட்டத்தின் மூலையில் நின்றிருந்த ஒற்றை நாரத்தையின் கீழ் அமர்ந்து முதல் இரவின் கதையை அக்காக்களிடமிருந்து கேட்டிருந்த அனுபமா எனக்கு பரம ரகசியமாய் பரபரப்புடன் தெரியப்படுத்தியபோது எங்களுக்கு வயது வயது ஏழு. ஆணும் பெண்ணும் தொட்டு உடைகளைக் களைந்து நிர்வாணமாகும் காட்சியை அவள் படிப்படியாக விவரித்தபோது அடைந்த கிறுகிறுப்பில் சாயங்காலம் தைலத்தன்மையுடன் கருஞ்சிவப்பானது. ஆணும் பெண்ணும் பரஸ்பரம் அம்மணமாகித் தொடுவதற்கும் குழந்தைகள் பிறப்பதற்கும் உள்ள தொடர்பு அவள் சொல்லித்தான் கலங்கலாக எனக்கு விளங்கியது. பிள்ளையார் தும்பிக்கையால் நள்ளிரவுகளில் அம்மாக்களின் வயிற்றைத் தடவி குழந்தைகளை விட்டுச் செல்வதில்லையா என்று அனுபமாவிடம் கேட்டேன். அன்றைக்குத்தான் வெகுநாள்கள் விழாமல் இருந்த முதல் பால் பல்லும் விழுந்தது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

ஹேமா

அழைத்தாலும் அழைக்காதது போன்று அதலபாதாளத்து  நினைவிலிருந்தெழும் அசரீரியாய் பட்டுமிருதுடன் தொனிக்கும் அவள் பெயர் ஹேமா... சிவனின் மனைவி பார்வதியின் இன்னொரு நாமகரணம் ஹைமவதி என்கிறது புராணம். பொன், தூய்மை என்றும் பொருள்படும் பெயர் ஹேமா. மலையில் காட்டில் நதியில் அருவியில் காற்றாக ஒலிக்கிறது ஆதிப்பெயர்களில் ஒன்றான ஹேமா ஹேமா ஹேமா ஹேமா. (நன்றி: அகழ் இணைய இதழ்)

குயில் குப்பை குப்பி

ஒரு குப்பியை உடை ஒரு குயில் வெளியே வந்து பாடும் ஒரு விடுதலைப் பாடல். எந்தக் குப்பையில் எங்கே ஒழிந்து கிடக்குது ஐயா அந்தக் குப்பி? குயில் குப்பை குப்பி இது என்ன எழவுடா ? நன்றி: அகழ் இணைய இதழ்

பாசிசத்தை நோக்கி இந்தியா: மோடி செய்த மாற்றங்கள் - பிரேம் சங்கர் ஜா

(இந்தியாவை பாசிசத்தை நோக்கி மோடி படிப்படியாக மாற்றிய வரலாற்றை எண்ணற்ற கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் குடியுரிமை, ஜனநாயகப் பாதுகாவலர்கள் விவரமாகப் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் பலரும் , எந்தக் குற்றச்சாட்டும் சொல்லப்படாமல் ஆண்டுக்கணக்கில், பிணையில்லாமல் சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். பாசிசத்துக்கு இந்தியாவை மோடி எவ்வாறு அழைத்துச் சென்றார்? அந்தப் பயணத்தை பெருங்கோடுகளில் இந்தக் கட்டுரை தீட்டுகிறது.)  1. பன்முகத்தன்மை வாய்ந்த, பல்வேறு இனங்கள் வசிக்கும் ஜனநாயகமென்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெருமைப்பட்டு குறிப்பிட்ட அம்சங்களை, அவருக்குப் பின்னால் வந்த நரேந்திர மோடி, பிரதமர் பதவியேற்று சில வாரங்களில்,  அகற்றத் தொடங்கிய முதல் நடவடிக்கை இது. மத்திய அமைச்சகங்கள் இயங்கும் இடங்களின் நுழைவாயிலில் முதலில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியதுதான் அந்த முதல் நடவடிக்கை. அத்துடன் பத்திரிகை தகவல் பணியகம்((Press Information Bureau), சிறப்பு செய்தியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகள் வாபஸ் பெறப்பட்டன. பத்திரிகையாளர்கள் எந்த அமைச்சரகத்த...

தலைகீழாகத் தொங்கும் பொம்மைகள்

சிறுதடமும் இன்றி காதுமடல்கள் இரண்டும் மழித்து அகற்றப்பட்ட அந்தப் பையனுக்கு நண்பர்களென்று யாரும் இல்லை. தன் வீடிருக்கும் வீதியில் இறங்கி எப்போதாவது நூல் கோர்த்த கார் பொம்மையை இழுத்து விளையாடும் நண்பகல்களில் தெரு கூடுதல் நிசப்தத்தை அடைந்துவிடுகிறது. தோளில் புத்தகப்பையைச் சுமந்து தலைகுனிந்தபடி டியூசனுக்குப் போய்விட்டுத் திரும்புபவன் கூர்ந்து பார்க்கும் என்னைக் கண்களாலேயே தவிர்த்து கடந்துவிடுகிறான். அவன் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் பால்கனியிலிருந்து விலை உயர்ந்த பொம்மைகள் வெளியே வீசப்படுவது வழக்கம். தரையில் விழாமல் பொம்மைகள் பெரும்பாலும் கேபிள் வயர்களில் தலைகீழாகத் தொங்கும் காட்சிதான் காதுகள் மழிக்கப்பட்ட அந்தச் சிறுவனின் முகத்தைவிட எனக்கு அதிவினோதமானது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

களத்தூர் கண்ணம்மா

கமல்ஹாசன் நடித்திருக்கும் சினிமா என்று திருநெல்வேலி லட்சுமி தியேட்டருக்கு அழைத்துப் போனாள் அம்மா. பழைய படங்களாக அழைத்துச் செல்லப்பட்டு நிறைய ஏமாந்திருந்தாலும் கமல்ஹாசன் என்றதால் கொஞ்சம் நப்பாசையில் உடன் போனேன். கருப்பு – வெள்ளைப்படம் தொடங்கியது. அழகிய சிறுவன் ஒருவனைக் காண்பித்து இவன்தான் கமல்ஹாசன் என்றாள். அவன் வளர்ந்துவிடுவான் என்று எதிர்பார்த்தேன். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே என்று எல்லாரையும் அழவைக்கும்படி அனாதை இல்லத்தில் சக குழந்தைகளுடன் அவன் பாடியபோது வளர்ந்து மோட்டார் சைக்கிளை உதைத்து முடுக்கி சண்டைபோடுவான் என்ற நம்பிக்கை தளரத் தொடங்கியது. ஒரு பங்களா வீட்டின் புறக்கடைத் தோப்பில் ஜெமினியும் சாவித்திரியும் பிழியப் பிழிய அழுதுபிரியும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அம்மா ஏமாற்றிய துக்கத்தை இவனால் அப்போது தாளவே முடியவில்லை. கமல் வளர்வானா என்று கடைசிவரை அந்தப் பையன் கேட்கவுமில்லை. (தக் லைஃப் திரைப்படம் தந்த அனுபவத்துக்கு) (நன்றி: அகழ் இணைய இதழ்)

கவிஞர் மதார்

திருநெல்வேலி பெருமாள்புரம் உள்சாலைகளில் நடைபயிற்சி போகும் கவிஞர் மதார்  தினசரி எதிரே சந்தித்துவிடும்  வண்ணதாசனை அன்று சந்திக்கவில்லை. மாணிக்கவாசகர் தெருவின் முனையில் பஞ்சால் அலங்கரிக்கப்பட்ட மரக்குதிரை பொம்மை ஒன்று குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருப்பதைப் பார்த்தார். செவ்வாய்கிழமை காலையிலேயே தன் கவிதைக்கான கருப்பொருள் என்று உவகையுற்று பட்டினத்தார் தெருவில் திரும்பினார். பட்டினத்தார் தெருவின் நடுப்பகுதியை கடக்கும்போது ஓரத்தில் நள்ளிரவில் குடித்து உடைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகளின் நடுவே காலை நீட்டி இறந்துகிடந்த பூனையின் சடலமொன்றைப் பார்த்தார். பூனையின் சடலத்தை முதலில் பஞ்சு பொம்மை என்றே  நம்புவதற்கு விரும்பினார் கவிஞர் மதார். இறந்த பூனையின் சடலத்திலிருந்து கண்ணை எடுத்து வேகமாக பட்டினத்தார் தெருவைக் கடந்து வீடுபோய் சேர்ந்துவிட்டார் கவிஞர் மதார். இறந்த பூனைகளே தெருவில் வீசப்படாத ஊர் ஒன்றுக்கு கவிஞர் மதார் இடமாற்றம் கேட்டிருப்பதாக சமீபத்திய செய்தி. 

போகன்வில்லா

வெயிலில் சற்றே வண்ணம் வெளிறி காகிதப் பூ விழுந்துகொண்டிருந்தது. சாலையை நோக்கி விழுந்துகொண்டேயிருந்த காகிதப் பூ ரோஸ் வண்ணச் சிட்டாக விருட்டென்று அந்தரத்தில் உருமாறி என் தலையை உரசிக்கொண்டு பறந்து போனதை நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். (நன்றி: அகழ் இணைய இதழ்)

சைக்கிள் கைப்பிடிக் கண்ணாடி

வீட்டுத் திண்ணைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளின் கைப்பிடிக் கண்ணாடி வீட்டுக்கு வேறொரு தோற்றத்தை காட்டிக் கொண்டிருந்தது. கண்ணாடிக்குள் சத்தமோ அழுகையோ இல்லாமல் தெரியும் அவர்களின் வீட்டை சிறுவன் ஆசையுடன் நுழைய நுழைய பார்த்துக் கொண்டிருந்தான். (நன்றி: அகழ் இணைய இதழ்) 

ஆந்தைப் பூனை

இரவில் ஆந்தையாக மாறும் பூனையை நான்ஸி வீட்டு பால்கனியில் தற்செயலாகப் பார்த்து எப்படியென்றேன்? எல்லாம் ஒரு வட்டம் உள்ளே ஒரு முக்கோணம்தான் என்றது சாவதானமாய். (நன்றி : அகழ் இணைய இதழ்) 

யவனிகா ஸ்ரீராம் சுமக்கும் ஆதிப்பொறுப்பு

பொய் சொல்வதால் ஒருவருக்கு அனுகூலம் கிடைக்கும்போது ஒருவர் ஏன் உண்மையைச் சொல்ல வேண்டும்? -விட்கென்ஸ்டீனை தத்துவம் நோக்கிச் சிறுவயதில் தூண்டிய கேள்வி இது. கற்றறிந்தவருக்கும் அறிவுஜீவிக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தையவர் வர்க்க உணர்வு கொண்டவர். தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர். பிந்தையவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல் ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர். - பாபா சாகேப் அம்பேத்கர் கொஞ்சம் நக்கித் தின்னக் கிடைத்தால் போதும் அன்றே முடிகிறது இந்தியப் புரட்சி - குஞ்சுண்ணியின் கவிதை சமகாலச் சிறுகதைக் கலைஞர்களில் முன்னணி ஆசிரியர்களில் ஒருவர். எனது நண்பர். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு நாவல் எழுதும் முயற்சியில் இருப்பதாகச் சொன்னார். குறைந்தபட்சம் நாவலொன்றை எழுதினால்தான் சாகித்ய அகாதமிக்கு தகுதியாவது பெறமுடியுமென்றார். சாகித்ய அகாதமி வாங்கிவிட்டால், தமிழ்நாடு அரசு தரும் வீடு உறுதியாகிவிடும் என்றார். சாகித்ய அகாதமி கிடைப்பதற்கு நாவல் எழுதினால் மட்டும் போதுமா? இன்னும் பல வயதான எழுத்தாளர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். எழுத்...

பூனைகள்

நாய்கள் ஆர்ப்பாட்டமாய் அதிகாலையில் நடை செல்லும்போது பூனைகள் தெருவின் மூலைகளிலும் பங்களாக்களின் ஜன்னல்களிலும் அமைதியாய் அமர்ந்து குறிப்பெடுத்துக்கொண்டிக்கின்றன.

போவது - ஈயூனிஸ் டி சௌஸா

நீ போகிறாய் என்று அவள் சொன்னாள். அவனது சவப்பெட்டி இடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லப்பட்ட போது. அவன் பதிலளிக்கவில்லைதான். அவன் என்றும் பதிலளித்ததில்லை. வேர்க்கடலைகளைக் கொறித்தபடி மாலை செய்தித் தாளை மேய்ந்துகொண்டிருந்தான். காலை உணவில் முட்டையின் மஞ்சள் கரு அவனது தாடையின் ஓரத்தில் வழிந்தது. (நன்றி : அகழ் இணைய இதழ்) 

நிலைத்திருப்பது - ஈயூனிஸ் டி சௌஸா

பறந்தோடிச் சென்றவை மூன்று பெண் கிளிகள் தான். ஆண் கிளியோ வீட்டில் நிலைத்துவிட்டது. என்  கையிலும் பாதத்திலும் காத்திருக்க விரும்புபவனைப் போல. அதில் எங்கேயோ ஒரு பாடம் இருக்கிறது. (நன்றி: அகழ் இணைய இதழ்) 

நிலா - ஈயூனிஸ் டி சௌஸா

வடிவம் கம்பீரம் குலைய அறையப்பட்டு வடுபட்டு கூம்பு கோபுரங்களின் பின்னால் தனது முகத்தை மறைத்து நிற்கிறாள் நிலா. மேலெழுந்து உதயமாக அவளுக்கு அவசரமேதும் இல்லை: அவள் கடக்கவேண்டும் ஒரு பாலைவனத்தையும் நொறுங்கிய குன்றுகளின் வரிசையையும். (நன்றி: அகழ் இணைய இதழ்)

எனக்குச் சொல் - ஈயூனிஸ் டி சௌஸா

தேதி, நேரம், இடம் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிடு மரியாதைக்குரிய மரணமே! பாவ வாழ்க்கையால் நிரம்பிய என் பேண்டிஸ்களை நான் தேடவேண்டும். பாத ஒப்பனை சிகிச்சைக்கு நேரம் கேட்க வேண்டும். (நன்றி: அகழ் இணைய இதழ்)

கிளிக்குஞ்சு - ஈயூனிஸ் டி சௌஸா

தானியப் பெட்டியில் உள்ள குஞ்சுக்கிளி வேண்டாதவளைப் பார்ப்பது போல என்னை உறுத்துப் பார்க்கிறது தானியங்களை உனக்கு அளிப்பது யார் தெரியுமா குட்டிப்பையா? குஞ்சுக் கிளியிடமிருந்து பதிலே இல்லை. அது இன்னமும் ஆங்கிலம் பழகவில்லை. நான் இன்னும் கிளி பழகவில்லை.

எனது நாய் லௌட்டின் நேசத்துக்காக - ஈயுனிஸ் டி சௌஸா

  ஊளையிடும் குட்டி நாயாக எனது வாசல்படியில் விடப்பட்டது. நடைக்கு அழைத்துச் செல்வதற்காக காலை நான்கு மணிக்கு எழுவேன். மிகுந்த நட்பான நாய் அவன், கவட்டைகளை முகர்ந்துபார்ப்பதில் விருப்பமுள்ளவன். அண்டை வீடுகளைச் சேர்ந்த கௌரவமான பெண்கள் அவனைத் தவிர்க்கிறார்கள். அதனால் ஆண்களும். லௌட் மிகக் கூடுதலான ரகசியங்கள் அறிந்தவன். (நன்றி: அகழ் இணைய இதழ்)

நான்ஸி 2

கடந்த சில நாள்களாக காலை நடையில் நான்ஸியைப் போலவே அவளது முதிய பதிப்பாய் ஒருத்தி சற்றே இடதுபுறம் சரிந்து என்னைக் கடக்கிறாள். இன்று காலையில் நான்ஸியைப் போலவே அவளது இளையபதிப்பொன்று சற்று வாளிப்பாய் இரண்டு சக்கரவண்டியில் கடந்து போனாள். அசல் நான்ஸியைப் பார்த்து வருஷங்கள் ஓடிவிட்டன. ஆனால் வேறு வேறு நான்ஸிகளின் சாயல்கள் ஏன் இந்தக் கடற்கரை சாலையில். (நன்றி: அகழ் இணை இதழ்)

பெண்களுக்கு அறிவுரை - ஈயூனிஸ் டி சௌசா

(ஈயூனிஸ் டி சௌசா சமகால இந்திய ஆங்கிலக் கவிஞர்களில், தன் வாழ்நாள் காலத்திலேயே கவனிப்புக்கும் விமர்சனப் பார்வைக்கும் உள்ளானவர். தனி அடையாளத்தையும் உலகையும் கொண்ட கவிஞர். கோவாவைச் சேர்ந்த கத்தோலிக்கக் குடும்பத்தில் 1940-இல் பிறந்து மும்பையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, தனியாகவே வாழ்ந்து 2017-இல் மறைந்தவர். சார்லஸ் பூக்கோவ்ஸ்கியின் அப்பட்டமான விமர்சனத் தன்மை, மேரி ஆலிவரின் ஈரத்தன்மையோடு சிறிய கவிதைகளை எழுதியவர். பூனைகள், தெரு நாய்கள், பருந்து, சிறுத்தை, காகம், கிளி என பிராணிகளும் பறவைகளும் ஆண் பால், பெண் பாலாகவே பிரித்து இவர் கவிதைகளில் சுட்டப்படுகின்றன. மூன்று வயதில் தந்தையை இழந்த ஈயுனிஸ் டி சௌஸாவை அந்த மரணம் மிகவும் பாதித்துள்ளது. சுயசரிதைத் தன்மை கொண்ட இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். தோழிகள், தோழர்கள், கணவர்கள், காதலர்கள் கதாபாத்திரங்களாக நேராகவும் மறைமுகமாகவும் உலவுகின்றனர். மற்றமையை, மற்ற உயிர்களுடனான பிணைப்பைக் கொண்டாடுவதோடு மரணத்தையும் விசாரித்தபடி இருக்கும் கவிதைகள் இவருடையவை.) காதலர்களின் மற்றமையோடு சமாளித்துப் போகக் கற்றுக்கொள்வதற்கு பூனைகளை வைத்திருங்கள். மற்றமை என்பத...

நான்ஸி வீட்டுப் பால்கனியில் ஆந்தைப்பூனை

இரவில் ஆந்தையாக மாறும் பூனையை நான்ஸி வீட்டுப் பால்கனியில் தற்செயலாகப் பார்த்து எப்படி என்றேன்? எல்லாம் ஒரு வட்டம் உள்ளே ஒரு முக்கோணம்தான் என்றது சாவதானமாய். 000 

கலிங்…

நூற்றாண்டுத் துயரக் கசப்பின் மதுவைப் பருகி யாரோ ஒருவர் தூக்கி எறிந்த காலிப்புட்டியை தெருவில் பார்த்தேன். கூரிய கருங்கல் ஒன்றை தேடிக் கண்டெடுத்து கலிங்கென நொறுக்கி உடைத்தேன். தன் தொலியுரித்து ஒரு சூரியன் மேலெழுந்தது ரத்தமாய்ப் பூத்தது. (நன்றி : அகழ் இணைய இதழ்) 

காசி காசி காசி காசி

பாலாஜி மந்திர் கருவறைக்குள் அனுமதிக்கப்படாத பிஸ்மில்லா கானின்  பிராணம் தினசரி அபிஷேகம் செய்யப்படும் கங்கை நீரைப்போல மூலவரைத் தினசரி தீண்டியது ஒரு காலம். யுகம் யுகமாய் மூலத்தோடு இணைவதற்கு ஏங்கிய யாசகர்களின் இறைஞ்சலையும் கங்கையின் பிரவாகங்களையும் சேர்த்துக் கொண்ட உஸ்தாதின் ஷெனாய்,  புதிதாக எழுப்பப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்துக்குள் சிறைப்பட்டு குனிந்து நிற்கும் ஞானவாபி மசூதியின்  நீரூற்றுக்குள் கழுத்து நெரிக்கப்பட்டு  புதைக்கப்பட்டுள்ளது. 000 உஸ்தாதின்  ஷெனாய் துளைகளை காசிக்கு சமீபத்தில் வந்த புழுதிப் புயல் மூடிவிட்டது. 000 இளஞ்சிவப்பு படர்ந்த புதிய காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்துக்குள் கம்பிவேலிகளால் நெரிக்கப்பட்டு காயப்பட்ட உடலென நின்றிருக்கும் ஞானவாபி மசூதியின் மேல் எப்போதும்  ஒரு கருப்புச் சூரியன். 000 மூன்றடுக்குக் காவலர் சோதனைகளுக்குப் பிறகு கனத்த மௌனத்துடன் ஞானவாபி மசூதிக்குள்  நுழைகிறார்கள் வழக்கமாய் தொழுகைக்கு வருபவர்கள். வசூகானாவில்  உடலைக் கழுவிக்கொண்டு ஆகாயத்தை அவர்கள் தன்னிச்சையாக வெறிக்கிறார்கள். லிங்கத்தைத் தேடி சர்ச்சையின் மை...

நான் தொலைத்தேன்

இன்னும் விடியாத கருங்குமென்ற இருட்டு. வைகாசி விசாக நாளில் கோடாகத் துலங்கத் தொடங்கி தாமிரபரணி மெலிந்து குறுக்குத்துறை படித்துறையில் ஓடிக்கொண்டிருந்தாள். தங்கச்சிப் பாப்பாவுக்கு என்னைக் காவலிருக்க வைத்துவிட்டு பாலுக்கும் காலை டிபனுக்கும் சில்லறைக் காசுகளை எனது டிரவுசர் பையில் நிரப்பி பத்திரமென்று சொல்லி அம்மா குளிக்கப் போனாள். வெள்ளென விடியத் தொடங்க அவள் இட்ட கட்டளையை மீறி கரையில் துணிவிரித்து படுக்கவைக்கப்பட்டிருந்த தங்கையை விட்டுவிட்டு ஆற்றுக்குள் இறங்கித் திளைத்து டிரவுசரில் உள்ள காசுகளை எல்லாம் தொலைத்தேன். நல்ல நாளன்று பிச்சையெடுக்க விட்டு விட்டாயே அம்மா திட்டியபடி ஆத்திரம் தீர என்னை வழியெங்கும் அழ அழ திருவிழாக் கூட்டத்தினூடாக வீட்டுக்கு அழைத்துவந்தாள். ஆற்றின் அலாதி அழகைப் பார்த்து என்னை மறந்து கடமையை மறந்து அன்று காசுகளைத் தொலைத்தேன் மந்திராலய பிராகாரத்தின் ஏகாந்த அழகில் லயித்து என் குட்டிமகளை ஒருநாள் தொலைக்க இருந்தேன் ஆர்ப்பரித்து மடிந்து பாதங்களில் வந்து விளையாடிய கடல் அலைகளில் திளைத்து வீட்டின் சாவியை இன்று தொலைத்தேன் நடுவே நண்பர்களை காதலியை மனைவியை தொலைத்து விட்டேன். (நன்றி: அக...

ஓர் இரவு

அகங்கை கொண்டு மூணுபிடி புறங்கை கொண்டு மூணுபிடி அருணாசலத்தாச்சி பாடத் தொடங்க காவேரிப் பெரியம்மாவின் மடியில் உறங்கிக்கொண்டிருந்த நான் திடுமென்று விழித்தேன். கண் திறந்துபார்த்தால் கண் அவிந்துபோய்விடுமென்று சொல்லித்தான் அம்மா அங்கே அழைத்துவந்து படுக்க வைத்திருந்தாள். அப்பாவோ இரவுப்பணிக்குப் போயிருந்தார். மார்புக்குக் குறுக்காக சேலை ஒன்றை மட்டுமே சுற்றி கூடத்தில் அலையும் எங்கள் வளவு வீடுகளைச் சேர்ந்த அத்தைகள். அம்மா பின்கட்டிலிருந்து குளித்த தலையுடன் பாவாடையை மேலேற்றிக் கட்டிக்கொண்டு நுழைந்தாள். சில்வர் பாத்திரத்தில் வெள்ளைக் கொழுக்கட்டைகள் குழு குழுவாக அமர்ந்திருந்த பெண்களால் உருவங்களாகத் தட்டி உருட்டி அடுக்கப்பட்டன. நோஞ்சலான கிழவிகள் கிழவர்கள் கை கால் மண்டையோடு பாடை அகல் விளக்கு எனக்குத் தெரிந்த உருவங்கள் தெரியாத உருவங்களும் கொழுக்கட்டைகளாக அவரவர் சட்டிகளில் விழுந்துகொண்டிருந்தன. சூடன், சாம்பிராணி புகையில் பளீர் குழல் விளக்கு வெளிச்சத்தில் ஆவிகளாய் என் அம்மாவும் அத்தைகளும் மறைந்து இருந்து உருக்கள் மாறித் தோன்றிய அந்த ஔவையார் நோன்பு நடுநிசியை நிஜம்தானென்று இன்று ருசுப்படுத்த அருணாசலத்தாச்ச...

கல் ஆந்தை

மகா கருணை மகா அமைதி மகா பரிவு பங்களா வீட்டின் மேல்மாடத்தில் புத்தராய் மாறி வெறிக்கும் கல் ஆந்தை. (நன்றி: அகழ் இணைய இதழ்)

நான்ஸி

ஒருகை குறைய துரியோத்தின் இளம் மனைவி நான்ஸி முதல்முறையாக அவன் நண்பர்களுடன் ரம்மி ஆட அமர்கிறாள் இதுவரை கேட்காத உற்சாகச் சிரிப்பொலிகளை மூன்று மாதங்களில் இடிக்கப்படவுள்ள பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு கேட்கத் தொடங்குகிறது. ராஜா ராணி அதிகம் சேர்ந்தாலும் தரித்திரம்தான் திவாகர் உதடு பிதுக்குகிறான். ஜோக்கர் இருப்பவன் இல்லாதவன் இரண்டு பேர் முகத்திலும் வித்தியாசமே காணமுடிவதில்லை நள்ளிரவிலும் புழக்கமற்ற பால்கனிகளில் தங்கியிருக்கும் புறாக்களின் முனகல் நிற்பதில்லை சலிக்கிறான் துரியோத். ஒழுங்கா அடுக்கத் தெரியாதவனும் நான்காவது ரவுண்டிலேயே ரம்மியில் ஜெயிக்கிறான் ரம்மியைப் பொறுத்தவரை உள்ளேயும் வெளியேயும் ஜோக்கர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கைமாறுகிறார்கள் சீட்டுகளை நெஞ்சோடு மறைத்து சிரத்தையோடு விளையாடுபவனும் ஜெயிக்கிறான் எல்லாரும் பார்க்க சீட்டுகளை முறையற்று விரித்து விளையாடுபவனும் ஜெயிக்கிறான் பரஸ்பர நிதி ஆலோசகன் தர்மராஜின் ஆரூடம். ஜோக்கராகவே இருந்தாலும் தேவையில்லாத நேரத்தில் கூடுதலாக ஏறக்கூடாது ராஜாவும் ராணியும் அமைச்சரும் படம்கொண்ட பாம்புகள் ஜோக்கரோ சீட்டின் எல்லையைத் தாண்டி நெளிபவன் புறாக்கள் ...

மிஷிமாவின் சௌந்தர்ய கிளிகள்

ராஜஸ்தானின் பளீர் வெயில், நடுமுற்றத்தில் பட்டு ஒளிரும் வகையில் அமைக்கப்பட்ட ஜோத்பூரின் தங்கும் விடுதி அது. வெளிநாட்டு ஓரினப் பாலுறவாளர்கள் தேடித் தங்கும் அந்த விடுதியின் உணவுக்கூட மூலை அலமாரியில்தான், யாரோ விட்டுச்சென்ற, யூகியோ மிஷிமாவின் ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ நாவலைப் பார்த்தேன். சாமுராய்களின் உடல் வலிமை, வீரம், ஆண்தன்மை மீது குழந்தைப் பருவத்திலிருந்தே கதாநாயகனுக்கு கவர்ச்சி தொடங்கி அதுதொடர்பிலான குழப்பம், பயம், இரட்டைத் தன்மை, அதை மறைப்பதற்கான பாவனை எல்லாம் அலைக்கழிக்க, ஒரு யுவதியின் காதலையும் வலியுடன் கடக்கும் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்தேன். ஊர்திரும்பிக் கொண்டிருந்த ரயில், சூரிய காந்தி வயல்களினூடாக கர்நாடக மாநிலத்தில் எங்கோ ஒரு பிரதேசத்தில் விரைந்துகொண்டிருந்தது. மிஷிமா கொடுத்த பெருமூச்சுடன், மழைக்காக மூடியிருந்த ஜன்னலைத் திறந்து வெளியை வெறித்தபோது சரட்டென்று கிளிகள் சூரியகாந்தி வயல்களிலிருந்து கூட்டமாக மேலே பறந்தன. சிறுவன் மிஷிமா அதுவரை அணிந்திருந்த முகமூடியை வலியுடன் உரித்து அகற்றியபோது உண்டான அழகு….பச்சைப்பசேல் வயலில் விருட்டென்று எழுந்து பறந்த கொக்கின் ...

உடைந்த பாலம்

கழிமுகம் கடல் நீர் மணல் கரை முயங்கிக் கலையும் சம வெளி எல்லாம் ஓயும் படகு பாய் கொடி தூண்டில் சூரியன் வலை கைவிடப்பட்ட பொம்மைகள் செருப்புகள் மதுக்குப்பிகள் எல்லாம் ஓயும் என்று ஆற்றுவித்து கால்களை உக்கிரமற்றுத் தழுவி அமைதியாகத் திரும்பிச் செல்லும் சின்னச்சிறிய சீரலைகள். களுக் களுக்கென தளும்பி நீர் சொல்லும் ஒன்று எனக்கு கேட்கத் தொடங்குகிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தியின் காலத்தில் எதையும் யாரையும் இனி இணைப்பதில்லையென்று முடிவெடுத்து ஏகாந்தத்தின் கழிமுகம் மீது நின்றுகொண்டிருக்கும் உடைந்த பாலத்துக்கோ களுக் களுக்கென நீர் சொல்லும் அந்த ஒன்று அப்போதே கேட்டுவிட்டது. யுத்தத்துக்கும் சமாதானத்துக்குமிடையே துள்ளி எழப்போகிற மீன் கிடைக்கும் தருணத்துக்கு சற்று முன்னால். நிசப்தத்தை அலகில் நிறைத்தபடி நீர்வெள்ளி சுடரும் பரப்பில் மேயும் கொக்குகளுக்கு கருநாரைகளுக்கு ஏற்கெனவே சேதி சொல்லப்பட்டு விட்டது. அருகிலேயே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலின் ஆழத்தை கேலிசெய்து திளைத்துக் குளிக்கும் காகங்களுக்கு குருவிகளுக்கு எனக்கு முன்னால் கேட்டுவிட்டது களுக் களுக்கென நீர் சொல்லும் அந்த ஒன்று. (அகழ் இணைய இதழ்)

கருப்பு

நேயக் கலவி மயக்கத்தில் குழந்தையிடம் பேசும் அதர்க்க மொழியில் கொஞ்சி தொட்டுத் தொட்டு நீ அகற்றிய என் உள்ளாடையின் நிறம் துயரக் கருப்பானது தற்செயல்தானா கோகிலமே! உன் இருள் கேசம் அந்தக் கேசத்தின் மையெடுத்துத் தீட்டிய உன் புருவம் திலகமிட்ட நெடிய நெற்றி கூர்ந்த பிச்சிப்பூ மூக்கு ஆராதித்து உன் இடைக்கு முன்னால் மண்டியிட்டேன் அரவப்படம் உன் அல்குல் என வர்ணித்து முத்தத்தால் உரித்த உன் உள்ளாடையும் அதே துயரக் கருப்பானது தற்செயல்தானா? மரகதமே! இப்போதும் அலமாரியில் கையில் தட்டுப்பட்டு அணியும்போதெல்லாம் யாரை எதை எப்பொழுதைப் பழிக்க அந்தக் கருப்பு உள்ளாடையின் உட்புறத்தை மாற்றி அணிகிறேன் ஞாபகமென்னும் ஆலகால நஞ்சே! (நன்றி : அகழ் இணைய இதழ்)

ஒருநாள் - நகுலன் (எழுத்து இதழ் - 1959)

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவா...