Skip to main content

நிசப்த ஆழத்துக்குள் அபி கத்தும் சத்தம்


அபியின் மாலை வரிசைக் கவிதைகளில், மிக அபூர்வமாக பால்யத்தின் குறிப்புகளைக் கொண்ட சில கவிதைகள் உள்ளன. தனிப்பட்ட பால்யம் ஒன்றின் படமும் நம் எல்லாருடைய பால்யத்தின் பொதுச்சிறு பிரதிபலிப்புகளும் இந்தக் கவிதைகளில் இருக்கிறது.

‘மாலை - என் வடிவு’ கவிதையில் குடும்பத்தினர் அனைவரும் மரக்கட்டிலில் வானம் தெரியும் நடுமுற்றத்தில் நெருக்கி அமர்ந்து அம்மா சொல்லும் கதையைக் கேட்கும் ஓவியம் முதலில் தோன்றுகிறது. பெருந்தொற்று காலம் நெருக்கம் என்பதன் மதிப்பை, அர்த்தத்தை நம் எல்லாருக்கும் உணர்த்தியிருக்கும் காலத்தில், தீண்டாமை என்பது அதிகாரப்பூர்வமாகக் கடைபிடிக்கப்படும் சூழலில் சேர்ந்து நெருக்கி அமர்ந்து இருப்பதன் அருமை தெரிகிறது. 

எத்துணை எளிமையாக கிடைத்தவை, எத்துணை பக்கத்தில் இருந்தவை எல்லாம் தூரத்துக்குப் போய்விட்டதைப் போன்ற காலத்துக்கு நாம் நகர்ந்திருக்கிறோம். 

நெருங்கக் கிடைக்கும்போது நெருங்கிவிடுங்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. 

அம்மா சொன்ன கதை, திரைச்சீலைகளுக்குப் பின்னால் அந்தக் குட்டிப்பையனுக்கு நிழல்களாக நிகழ்த்திக் காண்பிக்கப்படுகிறது. அவனும் நிழலாக, கதை கொடுத்த மனவிரிவில் திரவமாகத் ததும்பி இருக்கிறான். காவேரி ஆச்சி வளவில் இருட்டில் கதைசொன்ன அருணாசலத்தம்மாள், கதிர்காமம் முருகன் கோயிலுக்குச் செய்த பயணத்தைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லியும் எங்களுக்குத் தெவிட்டியதே இல்லை. அங்கே திரைச்சீலையில் வரையப்பட்டவர் தான் முருகனாகக் கும்பிடப்படுகிறார். திரைச்சீலைக்குக் கீழே தேங்காயை தட்டில் வைத்து தள்ளினால், தேங்காய் உடைக்கப்பட்டு வெளியே வரும் என்று அவள் சொன்னதும், திரைச்சீலைக்குப் பின்னால் பார்க்க முயல்பவர்கள் தலை சுக்குநூறாக உடைந்துவிடுமென்றும் அருணாசலத்தம்மாள் சொல்லியிருக்கிறாள். நூறு வயதுக்குப் பிறகு வாழ்ந்து ஒரு கட்டைவிரல் அளவுக்கு சிறுத்துப் போய், மாடக்குழியில் இருந்து இரண்டு சோற்றுப் பருக்கைகளே போதுமான கிழவி பற்றிய கதையை அவள் இருட்டில் சொல்லியபோது நானும் என்னொத்த பிள்ளைகளும் இப்படித்தான் திரவமாக உருகினோம். உடலை வாதிக்கும் நோய்களோடு, துயரமும் பச்சாதாபமும் நிழலாகப் படிந்திருக்கும் வீட்டைவிட்டு அடிக்கடி தப்பித்து பயணம் வழியாகவே சுதந்திரத்தை அடைந்து, மரணத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, இந்தியாவின் பல்வேறு ஊர்களில் கால்போன போக்கில் சிறுவயதில் அலைந்த கதைகளை, சுந்தர விலாசத்தின் மொட்டைமாடியிலிருந்து சுந்தர ராமசாமி சொன்னபோதும் அந்த திரவநிலையை அடைந்திருக்கிறேன். சுந்தர ராமசாமி, முன்னே கால்களைக் குவித்து அமர்ந்திருக்க, கண்ணாடி மினுங்கும் முகம் கோடாக இருட்டில் தெரியும். 

அம்மா சொன்ன கதையால், திரவம் போல ததும்பியும் தன்னிடத்தை மறக்காததால் தன் வடிவில் இருக்கிறானாம் அந்தக் குழந்தை. 

‘என்னிடம் இருந்ததால் என் வடிவில் இருந்த நான்’ என்று ஆரம்பிக்கும் பாதியில் அபியின் அணக்கமும் சத்தமும் தோற்றம் கொண்டுவிடுகிறது. நிசப்தத்துக்குள் தன் சத்தத்தை இப்படித்தான் ஏற்படுத்துபவர் அபி.

அப்புறம் அது ஆழ்ந்த ஆர்ப்பரிப்பை நோக்கிச் செல்கிறது. அந்தச் சத்தம் விரிகிறது.

மாலையோடு பேசித் தளிர்க்கும்

கதை

என் வடிவில் இருந்த கதை

இந்த இடத்தில் சத்தம் அதீதமாகிக் கெக்கலிக்கத் தொடங்குகிறது ஆழத்தில். எனக்குக் கேட்காத எனக்குள் பெருகும் சத்தம் அது.

யோசிப்பும் நின்றுபோன

மௌனம்

என் வடிவில் இருந்த மௌனம்.

கடைசியில் வலி உறுத்தும் சத்தம், கடைசியில் குவிந்து தாக்குகிறது. என் வடிவில் இருந்த மௌனம் என்று முடிக்கும்போது சத்தத்தின் சுத்தமான இலக்கான நோக்கத்தில் செருகப்பட்டு விடுகிறது. மௌனத்தின் உலோகத்தால் செய்யப்பட்ட கத்தி அது. கத்திச் செருகப்பட்டு விட்டது. யோசிப்பும் நின்றுபோகும் அந்த மௌனத்தின் வடிவம் தான் என் வடிவம். அங்கே நீயோ, உனது வடிவமோ சாத்தியம் இல்லை. அதுதான் அபியின் வடிவம்.

மாலை - என் வடிவு

வானம் தெரியும் நடுமுற்றம்

மரக்கட்டிலில் நெருக்கி அமர்ந்து நாங்கள்      


சமையலறைச் சுவருக்குப்போக மிஞ்சிய

கொஞ்சம் சிமினி விளக்கு வெளிச்சம்

எங்களருகில், பராக்குப் பார்த்துக் கொண்டு


அம்மா சொன்ன கதை

வழக்கம் போல

மெல்லிய திரைச் சீலைகளுக்குப் பின்னிருந்து

நிகழ்ந்து காட்டியது


திரவமாகித் ததும்பிய நான்


என்னிடம் இருந்ததால் 

என் வடிவில் இருந்த நான்


மாலையோடு பேசித் தளிர்க்கும்

கதை

என் வடிவில் இருந்த கதை


யோசிப்பும் நின்றுபோன

மௌனம்

என் வடிவில் இருந்த மௌனம். 

Comments