Skip to main content

காலமும் நீங்கும் தொல்பொருள் அபி


அபியின் ‘மாலை’ வரிசைக் கவிதைகளைப் படிக்கும்போது அந்தக் கவிதைகளையும் அவற்றை எழுதிய அபியையும் காலமும் நீங்கும் தொல்பொருள் என்று உணர்ந்தேன். 

‘மாலை - மாற்றுருவம்’-ல் காலம் பருவுடல்களாகத் தோற்றம் கொள்கிறது. பெருமூச்சொலி ஒளியுடன் வினைபுரிகிறது. 

ஆமாம், மழையில் ஒப்பாரிக் குரல் உட்பட எல்லாம் மூழ்கித்தான் இருக்கின்றன- சித்தார்த்தன், ஆற்றில் எல்லாருடைய எல்லாவற்றின் ஓசையையும் கேட்பது போல.

நான் எனது இருபது வயதின் தொடக்கத்தில் கழிப்பறையில் குழாய் நீர் சத்தத்தில் என் அம்மா அப்பாவுடன் கூக்குரலிட்டு அழும் சத்தத்தைத் திடீரென்று கேட்டிருக்கிறேன். பைப்பை மூடியதும் வீட்டின் நிசப்தம் தற்காலிக ஆசுவாசத்தைத் தந்திருக்கிறது. தூறல் தர்க்கிக்கத்தான் செய்கிறது.

நினைவு தரும் புழுங்கல் இதம்; பெயர் இல்லாத தவிப்பு ஒரு இதம்; இன்னும் மொழியாகாமல் உயிர்வேதிப் பாகு கொப்பளித்துக் கொண்டிருக்கிறதா? 

தவிப்பைத் தவிர என்னால் சுயமாக உருவாக்கிக் கொள்ளக்கூடிய சிறந்த உயிர்ப்பொருள் வேறெதுவும் உண்டா?

மாலைக்கும் வந்து படர்வதற்கு மாற்று இடம் இல்லை. எனக்கும் பற்றிக் கொள்ள மாலையைத் தவிர வேறெதுவும் இல்லை. 

ஏனெனில் நான் மிக ஏழை.

எனக்கு மாற்றுருவமும் இல்லை; மாற்றுடையும் இல்லை. 


மாலை - மாற்றுருவம்


வீட்டு வாசலைத்

தொட்டுத் ததும்பிய மழைவெள்ளம்


முன்பொரு சமயம் கேட்ட

நள்ளிரவு ஒப்பாரிக் குரல்

கரைந்திருந்தது அதில்


மூழ்கினவை என

ஆளற்ற பேச்சுக்குரல்கள்,

மழையோசையுடன் போட்டியிட்டுக்கொண்டு


நனைந்து 

மாற்றுடையின்றி

மாற்றுருவமு மின்றி

இருந்தேன்.


ஓயாது தர்க்கிக்கும் தூறல்


கசங்கிக் கலைந்து கிடக்கும்

நாட்களின் குவியலிலிருந்து

எழும் புழுங்கல் வெப்பம்

இதவு


மாட்டுக் கொட்டகையிலிருந்து

சிற்றிருளை உராய்ந்துகொண்டு வரும்

பெருமூச்சு

ஆசுவாசம்


தலைப்பில்லாத ஒரு தவிப்பு

தவிப்பின் தனி இதம் 


நனைந்து

மாற்று இடமில்லாதிருந்த

என் மாலையைப் பற்றிக்கொண்டு

மாற்றுருவம் இல்லாதிருந்த நான்


Comments