Skip to main content

ப்ரவுனி கடலைப் பார்க்கவில்லை



ப்ரவுனி பிறந்த இடம் சென்னைதான்

ரயிலைப் பார்த்திருக்கும் ப்ரவுனி

இதுவரை கடலைப் பார்த்ததில்லை


மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோ

போய் 

கடலைப் பார்க்கவேயில்லை

என்ற கவலையும்

மூன்று வயதாகும் ப்ரவுனிக்கு இல்லை


எனது நண்பர் ஒருவர்

மனைவி ஊருக்குப் போயிருந்தால்

கடற்கரைக்கு எங்களோடு வருவார்

வீட்டில் மனைவி இருந்தால் 

கடலைப் பார்ப்பதில் 

அவருக்கு ஏனோ ஈடுபாடு இல்லை 


ப்ரவுனி தாஜ்மகாலைப் பார்க்கவில்லை

ப்ரவுனி தியான்மென் சதுக்கத்துக்குப் போகவில்லை

ப்ரவுனி யாத்வஷேமுக்குப் போய் அஞ்சலி செலுத்தியதில்லை

ப்ரவுனி நயாகராவை அருகிருந்து ரசிக்கவில்லை

ப்ரவுனி என்னைப் போலக் கவிதை எழுதவில்லை

அதைப் பற்றியெல்லாம் ப்ரவுனிக்கு

புகாரும் ஏக்கமும் இல்லை


ப்ரவுனிக்கு நாங்கள் இருக்கும் தெருவைச் சுற்றி

இரண்டு தெருக்கள் 

பயணிக்கவும்

ஒன்றுக்கு இருக்கவும்

கழிக்கவும் போதும்

ஆர்வ முகர்வுகளுக்கும்

சில கார்கள்

சில இரண்டு சக்கர வண்டிகள்

சில அமைதி மூலைகள் போதும்

கால்களை நாக்கால் தொட்டு உறவாட 

சில முகம்கொண்ட  மனிதர்களும்

போதும் போதும் 

தனது உயிர்ப்பைத் தொடர்வதற்கு.

Comments

chucklepanda said…
Arumai arumai Shankar.